இன்னும் சரியாக பத்தே நாட்கள்தான்... பழைய வாகனங்களின் கதை முடிகிறது... மத்திய அரசு அதிரடி திட்டம்
பழைய வாகனங்களுக்கு முடிவுரை எழுதும் அதிரடியான திட்டத்தை மத்திய அரசு வகுத்துள்ளது. இது குறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

தலைநகர் டெல்லியில் காற்று மாசுபாடு பிரச்னை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருகிறது. அங்கு நிலைமை கையை மீறி சென்று கொண்டுள்ளதால், டெல்லி மக்கள் கடும் அதிர்ச்சியில் உறைந்துள்ளனர். காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்த டெல்லி அரசு மற்றும் மத்திய அரசு சார்பில் பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எனினும் அவை பெரிய அளவில் கை கொடுக்கவில்லை. எனவே டெல்லியை விட்டு வெளியேற விரும்புவதாக 40 சதவீதம் பேர் கருத்து தெரிவித்துள்ளனர். அங்கு நடத்தப்பட்ட ஆய்வு ஒன்றின் மூலமாக இந்த விஷயம் வெளியே தெரியவந்துள்ளது. இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை எந்த அளவிற்கு விஸ்வரூபம் எடுத்துள்ளது என்பதற்கு தலைநகர் டெல்லி ஒரு உதாரணம் மட்டுமே.

இந்தியாவின் பல்வேறு முன்னணி நகரங்களும் தற்போது ஏறக்குறைய இதே நிலையில்தான் உள்ளன. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு அதிரடி நடவடிக்கைகளை எடுக்கவுள்ளது. பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்கள் காரணமாகதான் காற்று அதிகம் மாசடைகிறது.

குறிப்பாக பழைய வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக உள்ளன. இந்தியாவில் 15 ஆண்டுகளுக்கும் மேற்பட்ட பழைய வாகனங்கள் இன்னும் அதிகளவில் இயங்கி வருகின்றன. இந்த வகையில் பார்த்தால் 2 கோடிக்கும் அதிகமான வாகனங்கள் 15 ஆண்டுகளை கடந்தும் இயங்கி கொண்டிருப்பதாக கூறப்படுகிறது.

தற்போது உள்ள வாகனங்களுடன் ஒப்பிடும்போது 25 மடங்கு அதிக புகையை இவை கக்கி வருகின்றன. இதன் விளைவாக காற்று மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. எனவே பழைய வாகனங்களுக்கு கடிவாளம் போட மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் ஒரு பகுதியாக வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையை (Draft Scrappage Policy) மத்திய அரசு உருவாக்கியுள்ளது.

இந்த கொள்கையை வரும் நவம்பர் 15ம் தேதி மத்திய அரசு வெளியிட உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த கொள்கையின்படி 15 ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்ய மத்திய அரசு முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. அதாவது பழைய வாகனங்கள் ஒழிக்கப்படும். அதற்காக உங்களிடம் பழைய வாகனங்கள் இருந்தால், இந்த கொள்கையை கண்டு அச்சப்பட வேண்டாம்.

மத்திய அரசின் இந்த அதிரடி திட்டம் நன்மைக்கே. உங்களிடம் பழைய வாகனங்கள் இருந்தால், அதனை ஸ்கிராப் செய்ய ஒப்படைத்து விடலாம். இவ்வாறு பழைய வாகனங்களை ஒப்படைத்து விட்டு, புதிய வாகனங்களை வாங்குபவர்களுக்கு பல்வேறு விதமான சலுகைகள் இந்த கொள்கையில் அறிவிக்கப்படவுள்ளன.

சலுகை காரணமாக பலர் பழைய வாகனங்களை ஸ்கிராப் செய்து விட்டு புதிய வாகனங்களை வாங்க முடிவு செய்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதன் காரணமாக பழைய வாகனங்களால் ஏற்படும் காற்று மாசு குறையும். இந்த நடவடிக்கை காரணமாக புதிய வாகனங்களின் விற்பனை அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.

தற்போது இந்தியாவில் ஆட்டோமொபைல் துறை கடுமையாக திணறி வருவது அனைவருக்கும் தெரிந்த ஒரு விஷயம்தான். மத்திய அரசின் இந்த அதிரடி நடவடிக்கை காரணமாக, புதிய வாகனங்களின் விற்பனை அதிகரித்து, ஆட்டோமொபைல் துறை சரிவில் இருந்து மீண்டு வருவதற்கான வாய்ப்புகளும் உள்ளன என்பதும் கவனிக்க வேண்டிய விஷயமாக உள்ளது.

எனவே ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் ஸ்கிராப்பேஜ் கொள்கைக்கு நல்ல வரவேற்பு இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. வரும் நவம்பர் 15ம் தேதி வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையை வெளியிட்ட பிறகு, இதுகுறித்து பொதுமக்களிடம் கருத்து கேட்க மத்திய அரசு முடிவு செய்துள்ளதாகவும் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவின் பல்வேறு இடங்களில், ஸ்கிராப்பிங் மையங்களை திறக்கவும் மத்திய அரசு முடிவு செய்துள்ளது. பொதுமக்கள் ஒப்படைக்கும் பழைய வாகனங்கள் இங்கு உடைக்கப்பட்டு, அதில் இருந்து மூலப்பொருட்கள் எடுக்கப்படும். பின்னர் அந்த மூலப்பொருட்களை கொண்டு புதிய வாகனங்கள் தயாரிக்கப்படும் என்பது குறிப்பிடத்தக்கது.

முன்னதாக பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கான பதிவு கட்டணங்கள் மற்றும் பழைய வாகனங்களுக்கான மறுபதிவு கட்டணங்களை தற்போது உள்ளதை விட பல மடங்கு உயர்த்தவும் மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இதன் மூலம் பெட்ரோல், டீசல் வாகனங்களை பயன்படுத்தும் எண்ணம் மக்களிடம் இருந்து விலகும் என மத்திய அரசு எதிர்பார்க்கிறது.

அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை மாசுபடுத்தாதவை. இதன் காரணமாக ஜிஎஸ்டி குறைப்பு உள்பட எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு பல்வேறு சலுகைகளை அறிவித்துள்ளது. வருங்காலங்களில் இன்னும் பல சலுகைகள் எதிர்பார்க்கப்படுகின்றன.

காற்று மாசுபாடு பிரச்னையை கட்டுப்படுத்துவதற்காக மத்திய அரசு இதுபோல் பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்த வரிசையில் வரைவு ஸ்கிராப்பேஜ் கொள்கையையும் வரும் 15ம் தேதி மத்திய அரசு வெளியிடவுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துகளை கீழே உள்ள கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








