எலெக்ட்ரிக் காரில் 1 லட்சம் கிமீ பயணிக்க ஆன செலவு இதுதான்... எவ்வளவு என தெரிந்தால் ஆச்சரியம் உறுதி
எலெக்ட்ரிக் காரில் ஒருவர் சுமார் 1 லட்சம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்து சாதனை படைத்துள்ளார். இதற்கு ஆன செலவு எவ்வளவு என தெரிந்தால் நீங்கள் பிரம்மித்து போவது உறுதி.

பெட்ரோல் மற்றும் டீசலில் இயங்கும் வாகனங்கள் புகை என்னும் நஞ்சை கக்கி வருகின்றன. இதனால் நமது சுற்றுச்சூழல் சீரழிந்து வருகிறது. இதே நிலை நீடித்தால் இன்னும் ஒரு சில ஆண்டுகளில், நாம் சுவாசிக்கும் காற்று முழுவதும் நஞ்சாகி விடும் அபாயம் உள்ளது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு விடை கொடுக்க உலக நாடுகள் அனைத்தும் வேகமாக தயாராகி வருகின்றன.

பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு மாற்றாக கருதப்படுவது எலெக்ட்ரிக் வாகனங்கள்தான். இவற்றால் சுற்றுச்சூழலுக்கு எவ்வித கேடும் இல்லை. எலெக்ட்ரிக் வாகனங்களால் உங்கள் பர்சுக்கும் எவ்வித பங்கமும் ஏற்படாது என்பது அவற்றின் மற்றொரு முக்கியமான சிறப்பம்சமாக பார்க்கப்படுகிறது. ஆம், எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கு ஆகும் செலவு குறைவுதான்.

குறிப்பாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுடன் ஒப்பிடுகையில், பல மடங்கு குறைவு. இருந்தபோதும் எலெக்ட்ரிக் வாகனங்கள் இன்னும் எதிர்பார்த்த அளவிற்கு பிரபலமாகவில்லை. எலெக்ட்ரிக் வாகனங்கள் என்றாலே மக்கள் மத்தியில் ஒரு வித தயக்கம் நிலவி கொண்டிருப்பதே இதற்கு காரணம். எனவே எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமடைய செய்ய பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

எலெக்ட்ரிக் வாகனங்களை பிரபலமாக்கும் முயற்சியில், சுற்றுச்சூழல் மீது ஆர்வம் உள்ளவர்களும் தங்களால் இயன்ற பங்களிப்பை வழங்கி கொண்டுள்ளனர். இந்த வரிசையில் நெதர்லாந்தை சேர்ந்த வைபி வாக்கர் (Wiebe Wakker) என்பவர் படைத்துள்ள சாதனை ஒன்று உலகின் கவனத்தை ஈர்த்துள்ளது. சுற்றுச்சூழல் ஆர்வலரான வைபி வாக்கருக்கு சமீபத்திய பருவ நிலை மாறுபாடுகள் பெருங்கவலையை ஏற்படுத்தியது.

பருவநிலை மாறுபாடுகளால் பூமிக்கு பெரும் ஆபத்து காத்து கொண்டிருப்பதாக ஆராய்ச்சியாளர்களும், விஞ்ஞானிகளும் எச்சரித்து வருகின்றனர். எனவே பருவநிலை மாறுபாடு எனும் எதிரியை எதிர்த்து போரிட எலெக்ட்ரிக் வாகனங்கள் நல்ல ஆயுதம் என்பதை வைபி வாக்கர் உலகிற்கு நிரூபிக்க விரும்பினார். இதன் ஒரு பகுதியாக எலெக்ட்ரிக் காரில் 95 ஆயிரம் கிலோ மீட்டர்கள் பயணம் செய்துள்ளார் வைபி வாக்கர்.

95 ஆயிரம் கிலோ மீட்டர்கள் என்பது 59 ஆயிரம் மைல்கள் ஆகும். வைபி வாக்கரின் இந்த நெடும் பயணம் அவரது சொந்த நாடான நெதர்லாந்தில் தொடங்கியது. இதன்பின் துருக்கி, ஈரான், இந்தியா, மியான்மர், மலேசியா மற்றும் இந்தோனேஷியா உள்பட 33 நாடுகளை கடந்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரை வைபி வாக்கர் சமீபத்தில் வந்தடைந்தார். அங்கு அவரது பயணம் நிறைவடைந்தது.

இடையில் 95 ஆயிரம் கிலோ மீட்டர்கள் வைபி வாக்கர் பயணித்துள்ளார். பல்வேறு நாடுகள், பல்வேறு விதமான சூழ்நிலைகளை அவரது எலெக்ட்ரிக் கார் வெற்றிகரமாக கடந்து வந்துள்ளது. இந்த காரை 'தி ப்ளூ பேன்டிட்' (The Blue Bandit) என செல்லமாக அழைக்கிறார் வைபி வாக்கர். எலெக்ட்ரிக் கார் ஒன்றால் மேற்கொள்ளப்பட்ட உலகின் நெடுந்தூர பயணங்களில் இதுவும் ஒன்று என வைபி வாக்கர் பெருமிதம் பொங்க குறிப்பிடவும் செய்கிறார்.

இந்த பயணத்திற்கு உண்டான செலவுகள் பொது மக்களிடம் இருந்து நன்கொடையாக பெறப்பட்டுள்ளது. இதில், காருக்கு சார்ஜ் செய்ய ஆகும் செலவு, வைபி வாக்கரின் உணவு மற்றும் தங்குமிடத்திற்கான செலவு ஆகியவை அடங்கும். ஆனால் அனைவரும் ஆச்சரியப்படும்படியான விஷயம் ஒன்று இதில் அடங்கியிருக்கிறது.
வைபி வாக்கரின் எலெக்ட்ரிக் கார் ஒரு முறை சார்ஜ் செய்தால் சுமார் 200 கிலோ மீட்டர்கள் வரை பயணம் செய்துள்ளது. அதன்பின் மீண்டும் அதனை சார்ஜ் செய்ய வேண்டும். இவ்வாறு காரை சார்ஜ் செய்ய மின்சாரத்திற்காக தான் செலவிட்ட தொகை வெறும் 20 ஆயிரம் ரூபாய் (இந்திய மதிப்பில்) மட்டுமே என வைபி வாக்கர் கூறியிருப்பது ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.

இதுகுறித்து வைபி வாக்கர் கூறுகையில், ''மக்களின் எண்ணத்தை மாற்ற வேண்டும் என விரும்பினேன். சுற்றுச்சூழலுக்கு பாதிப்பில்லாத இவ்வகை போக்குவரத்து முறையின் பலன்களை எடுத்து காட்டுவதன் மூலம் மக்களை எலெக்ட்ரிக் வாகனங்களை ஓட்ட வைக்க வேண்டும் என்பதும் எனது எண்ணமாக இருந்தது'' என்றார்.

இதுவே பெட்ரோல், டீசல் வாகனங்கள் என்றால் 95 ஆயிரம் கிலோ மீட்டர்களை உள்ளடக்கிய இந்த பயணத்தை நிறைவு பல லட்ச ரூபாய் செலவு ஆகியிருக்கும். ஆனால் வெறும் 20 ஆயிரம் ரூபாயில் காரியத்தை கச்சிதமாக முடித்து, எலெக்ட்ரிக் வாகனங்களின் நன்மையை உலகிற்கு பறை சாற்றியுள்ளார் வைபி வாக்கர்.


Click it and Unblock the Notifications








