அராய் சான்றுடன் பழைய கார்களை எலெக்ட்ரிக் காராக மாற்றித் தரும் இ- ட்ரியோ!
ஹைதராபாத் நகரை சேர்ந்த இ-ட்ரியோ நிறுவனம் பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார வாகனங்களாக மாற்றும் வர்த்தத்தில் ஈடுபட்டுள்ளது. பழைய செடான் மற்றும் இலகு ரக வர்த்தக வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார மாடல்களாக மாற்றித் தருவதற்கான அங்கீகாரத்தையும் இந்நிறுவனம் பெற்றிருக்கிறது.

இந்திய ஆட்டோமொபைல் ஆராய்ச்சி கூட்டமைப்பு (அராய்) மற்றும் சர்வதேச ஆட்டோமோட்டிவ் தொழில்நுட்ப மையம் (ஐகேட்) ஆகியவற்றின் சான்று பெற்று இந்த புதிய வர்த்தகத்தை இ- ட்ரியோ நிறுவனம் துவங்கி இருக்கிறது.

இதன்படி, பழைய மாருதி டிசையர் கார் மற்றும் டாடா ஏஸ் வாகனங்களை பேட்டரியில் இயங்கும் மின்சார கார் மாடல்களாக மாற்றி அசத்தி இருக்கிறது. இதுபோன்ற வர்த்தகத்தில் அங்கீகாரத்துடன் வர்த்தகத்தை துவங்கி இருக்கும் முதல் நிறுவனமாக இ- ட்ரியோ பெருமை பெறுகிறது.

பழைய வாகனங்களில் அதிநவீன பேட்டரிகள், தொழில்நுட்ப வசதிகளுடன் மின்சார வாகனங்களாக மாற்றித் தருகிறது. இவற்றை வர்த்தக ரீதியில் பயன்படுத்துவதற்கான அனைத்து தர நிர்ணயத்துடன் மாற்றித் தருவதே இதில் குறிப்பிடத்தக்க விஷயம்.

மேலும், மின்சார வாகன உற்பத்தியில் புதிதாக களம் காணும் ஸ்டார்ட் - அப் நிறுவனங்களுக்கும் பேட்டரிகளை சப்ளை செய்வதற்கும் இந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இதன்மூலமாக, மின்சார வாகன தொழில்துறை மிக வேகமாக முன்னேறுவதற்கான வாய்ப்பு கிடைக்கும் என்று இ - ட்ரியோ நம்புகிறது.

பழைய மாருதி டிசையர் மற்றும் டாடா ஏஸ் லோடு வேனை தொடர்ந்து மேலும் 15 வகையான மாடல்களை மின்சார வாகனங்களாக மாற்றித் தருவதற்கான முயற்சியிலும், அதற்கான அங்கீகாரத்தை பெறுவதற்கும் இந்நிறுவனம் தீவிர முயற்சிகளை மேற்கொண்டுள்ளது.

பொது சாலையில் இயக்குவதற்கான அனைத்து பாதுகாப்புத் தரத்துடன் இந்த புதிய மின்சார வாகனங்களை உருவாக்கித் தருவதாக இ- ட்ரியோ தெரிவித்துள்ளது. இந்த இரு வாகனங்களும் வர்த்தக ரீதியில் அதிகம் பயன்படுத்தப்படுவதால், முதலில் கையில் எடுத்ததாக அந்த நிறுவனம் தெரிவித்துள்ளது.

நகர்ப்புறங்களில் வாகனங்களால் ஏற்படும் நச்சுப் புகையை குறைப்பதற்கான முயற்சிகளில் இ- ட்ரியோவின் புதிய வர்த்தகம் குறிப்பிடத்தக்க மாற்றத்தை ஏற்படுத்தும் என்று கருதப்படுகிறது. மேலும், இந்த வர்த்தகத்தை சிறப்பாக கொண்டு செல்வதற்காக பாரத்மொபி நிறுவனத்துடன் கூட்டணி அமைத்து செயல்பட இருக்கிறது.


Click it and Unblock the Notifications








