ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் காரை உருவாக்கிய காஷ்மீர் மாணவர்... மணிக்கு எவ்வளவு கிமீ வேகம் என தெரியுமா?
காஷ்மீரை சேர்ந்த மாணவர் ஒருவர் ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

பெட்ரோல், டீசல் விலை உயர்வானது, கார் மற்றும் பைக் உள்ளிட்ட வாகனங்களை வைத்திருப்பவர்களுக்கு பெரும் சுமையாக மாறி வருகிறது. இதன் காரணமாக அதிகம் செலவு வைக்காத எலெக்ட்ரிக் வாகனங்கள் வேகமாக பிரபலம் அடைந்து வருகிறது. பெட்ரோல், டீசல் வாகனங்களுடன் ஒப்பிடும்போது, எலெக்ட்ரிக் வாகனங்களை இயக்குவதற்கான செலவு மிகவும் குறைவு.

அத்துடன் பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் எலெக்ட்ரிக் வாகனங்கள் சுற்றுச்சூழலை பாதிக்காது என்பது அதன் மற்றொரு சாதகமான அம்சம். இதன் காரணமாக இந்தியா உள்பட பல்வேறு நாடுகளின் அரசுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவித்து வருகின்றன. இந்த சூழலில், பள்ளி, கல்லூரிகளில் படிக்கும் மாணவ, மாணவிகளும் கூட மின்சாரத்தில் இயங்கும் வாகனங்களை கண்டறிந்து வருகின்றனர். இது தொடர்பான செய்திகளும் கூட அவ்வப்போது வெளியாகி கொண்டுதான் உள்ளன. இந்த வரிசையில் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் நம்மை ஆச்சரியத்தில் ஆழ்த்தும் வகையில் உள்ளது.

ஜம்மு காஷ்மீர் மாநிலத்தை சேர்ந்தவர் முகமது ஜாவாத். இவருக்கு தற்போது 22 வயதுதான் ஆகிறது. ஆனால் அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஆர்வம் நிறைந்தவர். குறிப்பாக மிகவும் குறைவான செலவில் ஒரு சிறிய குடும்பத்திற்கான எலெக்ட்ரிக் காரை உருவாக்க வேண்டும் என்ற எண்ணம் முகமது ஜாவாத்திற்கு இருந்து வந்தது. தற்போது அந்த எண்ணத்திற்கு செயல் வடிவம் கொடுத்துள்ளார் முகமது ஜாவாத்.

பஞ்சாப் மாநிலம் ராஜ்புரா பகுதியில் உள்ள சுவாமி விவேகானந்தா இன்ஸ்டிடியூட் ஆஃப் இன்ஜினியரிங் மற்றும் டெக்னாலஜி கல்லூரியில் (Swami Vivekanand Institute of Engineering and Technology - SVIET), இறுதியாண்டு படித்து வரும் மாணவர்தான் முகமது ஜாவாத். இவர் தற்போது ஹை-ஸ்பீட் எலெக்ட்ரிக் கார் ஒன்றை உருவாக்கியுள்ளார். இதற்கு ‘SVIET Volta' என பெயரிடப்பட்டுள்ளது. இந்த காரின் டாப் ஸ்பீடு மணிக்கு 110 கிலோ மீட்டர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

இதுகுறித்து முகமது ஜாவாத் கூறுகையில், ''இந்த ப்ராஜெக்ட்டை வெற்றிகரமாக நிறைவு செய்ய எனக்கு ஓராண்டுகளுக்கு மேல் ஆகி விட்டது. தற்போது இந்த காருக்கு காப்புரிமை பெறுவதற்கான பணிகள் நடைபெற்று வருகின்றன. அடுத்த கட்டமாக செல்ப் டிரைவிங் கார்களை (Self-driving Car) உருவாக்குவது தொடர்பான ஆராய்ச்சியில் ஈடுபட உள்ளேன்'' என்றார். டிரைவர் இல்லாமல் தானாகவே இயங்கும் செல்ப் டிரைவிங் கார்கள் தொடர்பான ஆராய்ச்சிகள் தற்போது உலகம் முழுக்க தீவிரமாக நடைபெற்று வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது.
இதனிடையே முகமது ஜாவாத் உருவாக்கியுள்ள காரை வர்த்தக ரீதியில் உற்பத்தி செய்வது தொடர்பாக உலகளாவிய ஆட்டோமொபைல் ஜாம்பவான்களுடன் பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக சுவாமி விவேகானந்தா குரூப் ஆஃப் இன்ஸ்ட்டிடியூட்ஸ் தலைவர் அசோக் கார்க் தெரிவித்துள்ளார். இதுகுறித்து டைம்ஸ் ஆப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. முன்னதாக சாதனை படைத்துள்ள மாணவர் முகமது ஜாவாத்திற்கு பல்வேறு தரப்பில் இருந்தும் பாராட்டுக்கள் குவிந்து வருகின்றன.
Image Courtesy: EV Basics


Click it and Unblock the Notifications








