காற்று மாசுபாடு பிரச்னை... 15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்களுக்கு வருகிறது அதிரடி தடை?
15 ஆண்டுகளுக்கும் மேலான பழைய டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என அரசுக்கு வலியுறுத்தப்பட்டுள்ளது. விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவில் காற்று மாசுபாடு பிரச்னை விஸ்வரூபமெடுத்து வருகிறது. தலைநகர் டெல்லி உள்பட நாட்டின் பல்வேறு முக்கிய நகரங்கள் காற்று மாசுபாடு பிரச்னையால் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளன. காற்று மாசுபடுவதற்கு பல்வேறு காரணங்கள் இருக்கின்றன. ஆனால் வாகனங்கள்தான் காற்று மாசுபாடு பிரச்னைக்கு மிக முக்கியமான காரணமாக பார்க்கப்படுகிறது.

அதிலும் குறிப்பாக டீசல் வாகனங்களால்தான் காற்று அதிகம் மாசடைந்து கொண்டுள்ளது. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்கும் விதமாக, பிரதமர் மோடி தலைமையிலான மத்திய அரசு பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இந்தியாவில் எலெக்ட்ரிக் வாகனங்களின் எண்ணிக்கையை அதிகரிப்பதும் இதில் ஒன்றாகும்.

மத்திய அரசு தவிர பல்வேறு மாநில அரசுகளும் கூட சுற்றுச்சூழலை பாதுகாக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுத்து வருகின்றன. இந்த சூழலில் சுற்றுச்சூழல் பிரச்னையை கருத்தில் கொண்டு, 15 ஆண்டுகள் ஆன டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கும்படி பீகார் மாநில அரசுக்கு, பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் (Bihar State Pollution Control Board - BSPCB) வலியுறுத்தியுள்ளது.

பாட்னா, கயா, முசாபர்பூர் ஆகிய மூன்று நகரங்களில், 15 ஆண்டுகளுக்கும் அதிகமான டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க வேண்டும் என பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. இது தொடர்பாக சுற்றுச்சூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு துறையின் முதன்மை செயலாளருக்கு, அறிக்கை ஒன்றினை பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் அனுப்பி வைத்துள்ளது.

இதில், குளிர்காலத்தின்போது காற்று மாசுபாடு பிரச்னை அதிகரிக்கலாம் என்ற தனது கவலையை பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் தெரிவித்துள்ளது. எனவே பிரச்னையை குறைக்க உடனடியாக நடவடிக்கை எடுத்தாக வேண்டும் எனவும் அந்த அமைப்பு தெரிவித்துள்ளது. மேற்கண்ட மூன்று நகரங்களிலும் காற்று அதிகம் மாசுபட்ட நிலையில் உள்ளது.

எனவே அங்கு 15 ஆண்டுகளுக்கு மேலான டீசல் வாகனங்களுக்கு அதிரடியாக தடை விதிக்க வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது. இதுதவிர தனியார் வாகனங்களில், சிஎன்ஜி எனப்படும் நிலைப்படுத்தப்பட்ட இயற்கை எரிவாயு பயன்பாட்டை ஊக்குவிக்கும் வகையிலான கொள்கையை வரையறுக்கும்படி போக்குவரத்து துறையையும் பீகார் மாநில மாசு கட்டுப்பாட்டு வாரியம் கேட்டு கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால், சுற்றுச்சூழல் மாசுபடுவதுடன் மட்டுமல்லாது, பொருளாதார ரீதியிலான சவால்களையும் எதிர்கொள்ள வேண்டியுள்ளது. பெட்ரோல், டீசலின் மூலப்பொருளான கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக செலவிடப்படும் அதிகப்படியான தொகை பொருளாதாரத்தில் கடும் தாக்கத்தை ஏற்படுத்துகிறது.

எனவே உலகின் பெரும்பாலான நாடுகளும் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி கொண்டுள்ளன. இந்தியாவும் வரும் காலங்களில் முழுமையாக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மாறி விடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. அதற்கான ஆரம்ப கட்ட நடவடிக்கைகள் தற்போது தொடங்கியுள்ளன. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








