பாஸ்ட்டேக்கால் வாகன உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள்... இதற்கெல்லாம் தீர்வு என்ன தெரியுமா?
டிசம்பர் 1 முதல் கட்டாயமாகவுள்ள பாஸ்ட்டேக்கால் வாகன உரிமையாளர்களுக்கு ஏகப்பட்ட பிரச்னைகள் ஏற்படும் வாய்ப்புகள் உள்ளன. இதற்கெல்லாம் என்ன தீர்வு? என்பதை இந்த செய்தியில் பார்க்கலாம்.

டோல்கேட் கட்டணத்தை செலுத்த, அனைத்து வாகனங்களுக்கும் வரும் டிசம்பர் 1ம் தேதி முதல் பாஸ்ட்டேக் கட்டாயம் என மத்திய அரசு அதிரடியாக அறிவித்துள்ளது. எனவே வாகன உரிமையாளர்கள் அனைவரும் தற்போது பாஸ்ட்டேக்கை வாங்கி வருகின்றனர். பாஸ்ட்டேக் என்றால் என்ன? எது எவ்வாறு இயங்குகிறது? என்ற தகவல்களை முந்தைய பதிவுகளில் தெரிவித்துள்ளோம்.

எனவே பாஸ்ட்டேக்கில் இருக்கும் நன்மைகள் மற்றும் பிரச்னைகள் குறித்து இந்த பதிவில் பார்க்கலாம். மேலும் பாஸ்ட்டேக்கில் இருக்கும் பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிமுறைகளையும் வழங்கியுள்ளோம். இது உங்களுக்கு பலன் அளிக்கும் என நம்புகிறோம். முதலில் பாஸ்ட்டேக்கின் நன்மைகளை தெரிந்து கொள்ளலாம்.

பாஸ்ட்டேக்கின் நன்மைகள்:
1. பாஸ்ட்டேக் பயன்படுத்துபவர்களுக்கு என டோல்கேட்டில் பிரத்யேகமான லேன்கள் உள்ளன. எனவே கட்டணம் செலுத்த நீங்கள் காத்து கொண்டிருக்க தேவையில்லை. இதன் மூலமாக உங்களது நேரம் மிச்சமாகும்.
2. டோல்கேட் கட்டணத்தை செலுத்துவது எளிது. ரொக்கமாக பணத்தை கையில் எடுத்து செல்ல வேண்டிய அவசியம் கிடையாது.

3. தேசிய நெடுஞ்சாலைகளில் உங்கள் வாகனத்தின் தடையற்ற இயக்கத்தை பாஸ்ட்டேக் உறுதி செய்கிறது. நீங்கள் சீராக பயணம் செய்து கொண்டே இருக்கலாம்.
4. டோல்கேட்டில் ரொக்கமாக கட்டணம் செலுத்தும்பட்சத்தில், நீங்கள் காத்து கொண்டிருக்க வேண்டிய சூழல் உருவாகும். இதன் மூலம் எரிபொருள் வீணாவது பாஸ்ட்டேக் மூலமாக தவிர்க்கப்படுகிறது.

5. கட்டணம் செலுத்துவதற்காக வாகனம் தேவையில்லாமல் ஐடிலிங்கில் இருப்பதும் பாஸ்ட்டேக் மூலமாக தவிர்க்கப்படுகிறது. இதன்மூலம் வாகனங்களின் புகை உமிழ்வையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது.
6. இவ்வாறு சுற்றுச்சூழலுக்கு நன்மையை கொடுப்பதுடன், காகித பயன்பாட்டையும் பாஸ்ட்டேக் குறைக்கிறது.

7. டோல்கேட்களை நிர்வகிப்பதை பாஸ்ட்டேக் எளிமையாக்குகிறது. இது பொருளாதார ரீதியிலான பலன்களை கொடுக்கும்.
8. பாஸ்ட்டேக்கிற்கு ரீசார்ஜ் செய்ய வரிசையில் காத்திருக்க வேண்டிய அவசியம் இல்லை. கிரெடிட் கார்டு/டெபிட் கார்டு/NEFT/RTGS/நெட் பேங்கிங் மூலமாக ஆன்லைனில் ரீசார்ஜ் செய்து கொள்ள முடியும்.
9. டோல் பரிவர்த்தனைகள், லோ பேலன்ஸ் உள்ளிட்டவை தொடர்பாக எஸ்எம்எஸ் அலர்ட் கிடைக்கும்.

ஒரு நாணயத்திற்கு இரண்டு பக்கங்கள் என்பதை போல், பாஸ்ட்டேக்கில் பல்வேறு நன்மைகள் இருந்தாலும், அதற்கு இணையாக ஏராளமான பிரச்னைகளும் இருக்கவே செய்கின்றன. பாஸ்ட்டேக்கில் இருக்கும் பிரச்னைகள் மற்றும் அதற்கான தீர்வு என்ன? என்பது குறித்த தகவல்களை தொடர்ந்து பார்க்கலாம்.

பாஸ்ட்டேக் பிரச்னைகளும், தீர்வுகளும்:
பிரச்னை 1: பாஸ்ட்டேக் தொலைந்து விடுவது அல்லது திருடப்படுவதுதான் இதில் இருக்கும் பொதுவான பிரச்னை. வாகனத்தின் முன்பக்க விண்டுஷீல்டில் ஒட்டப்படக்கூடியது என்பதால், பாஸ்ட்டேக் தொலைவதற்கான வாய்ப்புகள் மிக அதிகம். அதே நேரத்தில் திருடப்படுவதற்கான வாய்ப்புகளும் அதிகமாகவே இருக்கின்றன.

தீர்வு: உங்கள் பாஸ்ட்டேக் திருடப்பட்டாலோ அல்லது தொலைந்து போனாலோ உடனடியாக பாஸ்ட்டேக் வழங்கிய ஏஜென்சி அல்லது வங்கியை தொடர்பு கொண்டு இதுகுறித்து நீங்கள் தெரிவிக்க வேண்டும். இதன்பின் அவர்கள் உங்கள் கணக்கை பிளாக் செய்யும் பணிகளை அவர்கள் செய்வார்கள். மேலும் வேறொரு டேக்கை நீங்கள் பெறவும் அவர்கள் உங்களுக்கு உதவி செய்வார்கள்.

பிரச்னை 2: சில சமயங்களில் தொழில்நுட்ப கோளாறு காரணமாக, உங்கள் கணக்கில் இருந்து இரு முறை டோல்கேட் கட்டணம் எடுக்கப்பட்டு விடும்.
தீர்வு: இதுபோன்ற சூழல்களில் உங்கள் டேக் அக்கவுண்ட் ரிஜிஸ்டர் செய்யப்பட்ட வங்கியால் உங்களுக்கு உதவ முடியும். உங்கள் பாஸ்ட்டேக் கஸ்டமர் போர்ட்டலுக்கு செல்வதன் மூலம், டோல் அமௌண்ட் டபுள் டிடக்ஸன் தொடர்பாக உங்களால் க்ளைம் பதிவு செய்ய முடியும். இழந்த தொகையையும் நீங்கள் மீண்டும் கோரலாம்.

பிரச்னை 3: RFID ஸ்கேனரில் தொழில்நுட்ப ரீதியிலான பிரச்னைகள் ஏற்பட்டால், பாஸ்ட்டேக் பயன்பாட்டாளார் டோல்கேட் கட்டணத்தை ரொக்கமாக செலுத்த வேண்டிய சூழல் உருவாகலாம்.
தீர்வு: இதுபோன்ற சமயங்களில் தேவையில்லாத பிரச்னைகளை தவிர்ப்பதற்காக, எதற்கும் கையில் பணத்தை ரொக்கமாக வைத்து கொள்வது நல்லது.

பிரச்னை 4: சில சமயங்களில் பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழைந்து விடுகின்றன. இதன் காரணமாக தேவையில்லாத குழப்பங்களும், பிரச்னைகளும் ஏற்படுகிறது. மேலும் இது போன்ற சமயங்களில் பாஸ்ட்டேக் பயன்பாட்டளார்கள் காத்திருக்கும் நேரமும் கணிசமாக அதிகரித்து விடுகிறது.

தீர்வு: பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழைவதை தடுப்பதற்கான கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும். ஆனால் இதற்கான நடவடிக்கைகள் தற்போது எடுக்கப்பட்டு வருகின்றன. பாஸ்ட்டேக் இல்லாத வாகனங்கள், பாஸ்ட்டேக் லேனிற்குள் நுழையும் 2 மடங்கு டோல்கேட் கட்டணம் வசூலிக்கப்படும் என அறிவிக்கப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








