ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு நல்ல வரவேற்பு... டீலர் நெட்வொர்க்கை விரிவுப்படுத்தும் ஃபியட்!
ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு கிடைத்துள்ள சிறப்பான வரவேற்பு ஃபியட் க்றைஸ்லர் குழுமத்திற்கு உற்சாகத்தை தந்துள்ளது. இதனையடுத்து, டீலர்களின் எண்ணிக்கையை அதிகரிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி இருக்கிறது.

இந்தியாவில் ஃபியட் க்றைஸ்லர் குழுமத்தின் கீழ் ஃபியட், அபார்த் மற்றும் ஜீப் ஆகிய மூன்று கார் பிராண்டுகள் செயல்பட்டு வருகின்றன. இந்த மூன்று பிராண்டுகளின் கார்களும் ஒரே ஷோரூம்களை பயன்படுத்தியே விற்பனை செய்யப்படுகின்றன. எனினும், மெட்ரோ நகரங்களில் ஜீப் கனெக்ட் என்ற பெயரில் ஜீப் எஸ்யூவிகளுக்கான பிரிமீயம் ஷோரூம்களும் செயல்பட்டு வருகின்றன.

இந்த நிலையில், ஃபியட் பிராண்டின் கார் விற்பனை மிக மோசமான நிலையில் இருந்து வருகிறது. இதனால், அந்த பிராண்டுக்கு இந்தியாவில் மூடுவிழா நடந்த ஃபியட் க்றைஸ்லர் குழுமம் திட்டமிட்டுள்ளதாக தொடர்ந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன.

ஆனால், ஜீப் பிராண்டு எஸ்யூவிகளின் விற்பனையால் ஃபியட் கார்களுக்கான வர்த்தக வாய்ப்பு இந்தியாவில் தொடர்கிறது. கடந்த 2017ம் ஆண்டு விற்பனைக்கு கொண்டு வரப்பட்ட ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு இந்தியர்கள் மத்தியில் சிறப்பான வரவேற்பு இருக்கிறது.

எனினும், இந்த மாடலை குறிவைத்து பல புதிய மாடல்கள் வருவதால், இதன் வர்த்தகத்தை ஸ்திரப்படுத்த டீலர்கள் எண்ணிக்கைய அதிகரிக்கும் முயற்சியில் ஃபியட் க்றைஸ்லர் குழுமம் ஈடுபட்டுள்ளது.

பெங்களூரில் கனகபுரா ரோடு மற்றும் எலக்ட்ரானிக் சிட்டி ஆகிய பகுதிகளில் இரண்டு புதிய ஷோரூம்கள் திறக்கப்பட்டுள்ளன. பெங்களூர் தவிர்த்து கர்நாடகாவின் ஹூப்ளி, மைசூர் மற்றும் பெல்காம் உள்ளிட்ட இடங்களில் 7 புதிய கார் ஷோரூம்களை ஃபியட் க்றைஸ்லர் திறந்துள்ளது. கோவாவிலும் புதிய ஷோரூம் திறக்கப்பட்டு இருக்கிறது. இவற்றில் மூன்று பிராண்டு கார்களும் விற்பனை செய்யப்படும்.

தவிரவும், பஞ்சாப் மாநிலம் பாட்டீயாலா மற்றும் ராஜஸ்தான் மாநிலம் அஜ்மீரில் தலா ஒரு ஜீப் கனெக்ட் என்ற பிரிமீயம் ஷோரூம்களும் திறக்கப்பட்டுள்ளன. இதனால், தற்போது 70 நகரங்களில் 82 ஷோரூம்களுடன் செயல்படுவதாக ஃபியட் க்றைஸ்லர் குழுமம் தெரிவித்துள்ளது.

இந்த புதிய ஷோரூம்கள் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு மிக நெருக்கமாகவும், சிறப்பான சேவையை வழங்க முடியும் என்று ஃபியட் க்றைஸ்லர் குழுமம் கூறி இருக்கிறது. இதுதவிர்த்து, புதிய நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தையும் வழங்குவதாக தெரிவித்துள்ளது.

ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு ரூ.25,000 கட்டணத்தில் மோபர் நீட்டிக்கட்டப்பட்ட வாரண்டி திட்டம் அண்மையில் அறிவிக்கப்பட்டது. பழைய மற்றும் புதிய ஜீப் காம்பஸ் வாடிக்கையாளர்கள் இந்த திட்டத்தை தேர்வு செய்து கொள்ளலாம்.

தற்போது ஜீப் காம்பஸ் எஸ்யூவிக்கு மூன்று ஆண்டுகள் அல்லது ஒரு லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கான தயாரிப்பாளர் வாரண்டி கொடுக்கப்படுகிறது. இதனைத்தொடர்ந்து, மோபர் திட்டத்தின் மூலமாக மூன்று ஆண்டுகளுக்கு பின்னரும் வாரண்டி காலத்தை நீட்டித்துக் கொள்ளலாம். வரும் மே 31ந் தேதி வரை இந்த நீட்டிக்கப்பட்ட வாரண்டி திட்டத்தில் சேர்ந்து கொள்ளலாம்.


Click it and Unblock the Notifications








