விநோதம்... இன்ஸ்டாகிராமில் புகைப்படம் பகிர்ந்ததற்காக வக்கீல் நோட்டீஸ் பெற்ற பிரபலம்...
இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படத்திற்காக வக்கீல் நோட்டீஸ் அனுப்பப்பட்ட சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

தற்போதைய தலைமுறையினர் எதில் சுறுசுறுப்பாக இருக்கின்றாா்களோ, இல்லையோ... ஆனால், இணையதள செயல்பாட்டில் மட்டும் படுஜோரான வேகத்தில் அவர்களை ஈடுபடுத்தி வருகின்றனர்.
அந்தவகையில், சமூக சீர்கேட்டிற்கு எதிராக குரல் கொடுப்பதில் இருந்து தங்களின் ஒவ்வொரு அசைவையும் மற்றவர்களுக்கு வெளிக்காட்டுவது என அனைத்திற்கும் சமூக வலைதளங்களையேப் பயன்படுத்தி வருகின்றனர்.

அவ்வாறு, பகிரும் பதிவுகளுக்கு சில சமயங்களில் வாழ்த்துக்களையும், பல நேரங்களிலும் பெரும் சிக்கலையும் அவர்கள் சந்தித்து வருகின்றனர்.
இந்நிலையில், ஜெர்மனியைச் சேர்ந்த பிலிப் பிளெயின் (Philipp Plein) என்பவர் இன்ஸ்டாகிராமில் பதிவிட்ட புகைப்படண் ஒன்றிற்காக நீதிமன்ற நோட்டீஸைப் பெற்றிருக்கும் சம்பவம் வியப்பை ஏற்படுத்தியுள்ளது.

பிலிப் பிளெயின், பிரபல ஷூ நிறுவனம் ஒன்றில் ஷூ வடிவமைப்பாளாராக பணியாற்றி வருகின்றார். இவர், அண்மையில் வடிவமைத்த ஸ்நீக்கர் எனப்படும் பச்சை நிறத்திலான ஷூவை, அவரது விலையுயர்ந்த பச்சை நிற 812 சூப்பர் ஃபாஸ்ட் ஃபெர்ராரி கார் மீது வைத்து புகைப்படம் எடுத்துள்ளார். மேலும், அந்த ஷூவை விளம்பரம் செய்யும் விதமாக இன்ஸ்டாகிராமில் பதிவிட்டதாகக் கூறப்படுகின்றது.

அந்த பச்சை நிற ஷூவை, அதே நிறத்திலான ஃபெர்ராரி என எழுதப்பட்டிருந்த பெயருக்கு நேராக வைத்து அவர் புகைப்படம் எடுத்துள்ளார். இந்த புகைப்படம் அதிகப்படியானோரால் பார்வையிடப்பட்டு, பகிரப்பட்டதால், அது மிக வேகமாக வைரலாகியது. அதேசமயம், இந்த புகைப்படங்கள் ஃபெர்ராரி நிறுவனத்தின் கண்களிலும் சிக்கியது.

தன்னுடைய பிராண்டை மையப்படுத்தி, ஷூ வை விளம்பரம் செய்த சம்பவம் ஃபெர்ராரி நிறுவனத்திற்கு அதிர்ச்சியையும், அதிருப்தியையும் ஏற்படுத்தியதாக அமைந்துள்ளது. அதேசமயம், ஃபெர்ராரி என்ற பெயருக்கு நேராக ஷூவை வைத்திருந்தது, அந்நிறுவனத்திற்கு பெரும் அவமதிப்பதாக இருந்ததாக கூறப்படுகின்றது.

இதன்காரணமாக, பிலிப் பிளெயின் மீது சட்டப்படி நடவடிக்கை எடுக்கும் விதமாக ஃபெர்ராரி நிறுவனம், நீதிமன்றத்தை நாடியது. மேலும், அதன்மூலம் நோட்டீஸ் ஒன்றை அவருக்கு அனுப்பி வைத்துள்ளது.

அந்த நோட்டீஸில், பிலிப் பிளெயின் அவரது ஷூவையும், தயாரிப்புகளையும் விளம்பரம் செய்யும் விதமாக ஃபெர்ராரி காரை பயன்படுத்தியுள்ளார். இதனை அவர் சட்டவிரோதமாக செய்துள்ளார். ஆகையால், உடனடியாக இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்து நீக்க வேண்டும். இல்லையெனில், சட்டப்படி நீங்கள் சிக்கலை சந்திக்க நேரிடும்" என கூறப்பட்டுள்ளது.

இந்த நோட்டீஸை கண்டு அதிர்ச்சியடைந்த பிளிப் பிளெயின், அவரது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் ஓர் பதிவை வெளியிட்டுள்ளார். அதில், "எனது தனிப்பட்ட பயன்பாட்டில் இருக்கும் காலணிகளை வைத்து புகைப்படம் எடுத்ததற்கு ஃபெர்ராரி நிறுவனத்தின் வழக்குரைஞரிடம் இருந்து நான் நோட்டீஸைப் பெற்றுள்ளேன். இதனால் நான் எந்த அளவிற்கு வேதனையைச் சந்தித்துள்ளேன் என்பதனை என்னால் வார்த்தையால் வர்ணிக்க முடியவில்லை".

நான் ஒரு மிகப்பெரிய ஃபெர்ராரி நிறுவனத்தின் ரசிகன் என்பது மறுக்க முடியாத உண்மை. கடந்த 10 வருடங்களுக்கு முன்பு நான் முதல் ஃபெர்ராரி காரை வங்கினேன். தற்போது சிக்கலை ஏற்படுத்தியிருக்கும் புகைப்படத்தில் உள்ள ஃபெர்ராரி காரை, எனது தாயாரின் பிறந்தாளுக்கு பரிசாக அளிக்கும் விதமாக வாங்கப்பட்டது. இத்தகைய சிறந்த வாடிக்கையாளரான எனக்கு ஃபெர்ராரி நிறுவனம் நோட்டீஸ் அனுப்பியிருப்பது மிகுந்த துயரத்தை எனக்கு ஏற்படுத்தியுள்ளது.

இதுபோன்ற செயலில், ஃபெர்ராரி நிறுவனம் தொடர்ச்சியாக ஈடுபடுமேயானால், அந்நிறுவனம் என்னைப் போன்ற முக்கியமான சில வாடிக்கையாளர்களை இழக்க நேரிடும்" என அவர் கூறியுள்ளார்.
சர்ச்சையை ஏற்படுத்தியுள்ள அந்த புகைப்படம், கடந்த 30ம் தேதி பதிவிடப்பட்டது. அதேசமயம், இந்த பதிவிற்கு முன்னதாக ஓர் வீடியோ ஒன்றையும் அவர் பதிவிட்டுள்ளார். அதிலும், பச்சை நிறத்திலான அந்த ஷூ ஃபெர்ராரி காரின் பேனட் பகுதியில் வைத்து காட்சிப்படுத்தப்பட்டுள்ளது.
அதேசமயம், ஷூ டிசைனர் பிளிப் பிளெயினிடம் ஃபெர்ராரி 812 காருடன் கூடதலாக சில சொகுசு கார்களும் உள்ளன. அந்தவகையில், அவரிடம் ரோல்ஸ் ராய்ஸ் மற்றும் லம்போர்கினி உருஸ் உள்ளிட்ட கார்களை அவர் பயன்படுத்தி வருகின்றார்.

மேலும், ஃபெர்ராரி நிறுவனத்தின் நோட்டீஸுக்கு பதிலடி கொடுக்கும்விதமாக, தனது ரசிகர்கள் மத்தியில் ஆதரவு திரட்டும் பணியை அவர் மேற்கொண்டு வருகின்றார். அந்தவகையில் தனது ரசிகர்களிடம், அவரவர் தங்களது சூப்பர் கார்மீது ஷூவை வைத்தவாறு புகைப்படத்தை எடுத்து சமூக வலைதளப் பக்கத்தில் பதிவிட்டு எதிர்ப்பு காட்டும்படி வேண்டுகோள் விடுத்துள்ளார்.

இத்துடன், சில புகைப்படங்களையும் அவர் பகிர்ந்துள்ளார். மேலும் அவர், "இது ஃபெர்ராரிக்கு எதிரான போராட்டம் அல்ல. ஆனால், மக்கள் தங்களின் தனிப்பட்ட சமூக ஊடக கணக்குகளில், தங்களுக்கு பிடித்ததை பகிருவதற்கான உரிமை கோரும் போராட்டம்" என கூறியுள்ளார். இது யாருக்கும் எந்தவிதத் தீங்கும் விளைவிக்காத வரை நல்லது என்றுதான் நம் மனதில் தோன்றுகின்றது.


Click it and Unblock the Notifications








