இந்தியாவில் ஃபியட் கார் பிராண்டின் சகாப்தம் முடிவுக்கு வருகிறது!
வரும் ஏப்ரல் மாதம் முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கார்களில் கட்டாயமாக்கப்பட இருப்பதால், அதற்குள் இருப்பில் உள்ள கார்களை விற்று தீர்த்துவிடுமாறு டீலர்களை அந்நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது.
இந்தியாவில் ஃபியட் கார் நிறுவனத்தின் சகாப்தம் விரைவில் முடிவுக்கு வர இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன.

இந்தியாவில் வர்த்தகத்தில் ஈடுபட்டு வரும் வெளிநாட்டு கார் நிறுவனங்களில் ஃபியட் மிக நீண்ட பாரம்பரியத்தை கொண்டுள்ளது. தற்போது புன்ட்டோ, லீனியா கார்களையும் சில க்ராஸ்ஓவர் மாடல்களையும் விற்பனையில் வைத்துள்ளது. வலுவான கட்டமைப்பு கொண்ட ஃபியட் கார்களுக்கு இந்தியாவில் ரசிகர்களும் அதிகம்.

இருப்பினும், மோசமான வர்த்தக கொள்கைகள், விற்பனைக்கு பிந்தைய சேவை ஆகியவை அந்நிறுவனத்தின் வளர்ச்சியில் பெரும் பாதிப்பை ஏற்படுத்தியது. அத்துடன், கார் மாடல்களை சந்தைப் போட்டி மற்றும் வாடிக்கையாளர்களின் எதிர்பார்ப்புகளுக்கு ஏற்றவாறு மேம்படுத்த தவறியதும் முக்கிய காரணமாகி விட்டது.

கடந்த 2017ம் ஆண்டு டிசம்பர் முதல் கடந்த ஆண்டு நவம்பர் வரை 101 கார்களை மட்டுமே ஃபியட் விற்பனை செய்துள்ளது. இதனால், அந்நிறுவனத்தின் வர்த்தகம் பெரும் சிக்கலில் உள்ளது.

இந்த சூழலில், வரும் அக்டோபர் மாதம் அமலுக்கு வர இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு உட்பட்டு கார்களின் பாதுகாப்பை மேம்படுத்த வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளது. ஆனால், அவ்வாறு மேம்படுத்துவதற்கு அதிக முதலீடு தேவைப்படுகிறது.

இதுமட்டுமின்றி, அடுத்த ஆண்டு ஏப்ரல் முதல் பிஎஸ்- 6 மாசு உமிழ்வு விதி அமலுக்கு வர இருக்கிறது. அதற்கு தக்கவாறு எஞ்சின்களை மேம்படுத்துவதும் கட்டாயமாக இருக்கிறது. இவ்வாறு கார் மாடல்களை மேம்படுத்துவதற்கு ரூ.4,300 கோடி அளவுக்கு முதலீடு தேவைப்படுகிறது.

ஆனால், விற்பனை மிக மோசமாக இருந்து வரும் நிலையில், இந்தளவுக்கு முதலீடு செய்ய இயலாத நிலையில் ஃபியட் நிறுவனம் உள்ளது. மேலும், மாருதி சுஸுகி மற்றும் டாடா மோட்டார்ஸ் நிறுவனங்களுக்கு 1.3 லிட்டர் மல்டிஜெட் டீசல் எஞ்சினை சப்ளை செய்து வந்ததால், ஓரளவு வர்த்தகத்தை சமாளித்து வந்தது.

ஆனால், மாருதி, டாடா நிறுவனங்கள் சொந்தமாக உருவாக்கிய டீசல் எஞ்சின்களை பயன்படுத்த இருக்கின்றன. இதனால், டீசல் எஞ்சின் மூலமாக கிடைத்து வந்த வருவாயும் இல்லை என்பதால், ஃபியட் நிறுவனம் வர்த்தகம் முற்றிலும் முடங்க இருக்கிறது. இதையடுத்து, ஃபியட் கார் வர்த்தகத்தை இந்தியாவிலிருந்து விலக்கிக் கொள்வதற்கு ஃபியட் க்றைஸ்லர் குழுமம் முடிவு செய்துள்ளது.

வரும் ஏப்ரல் மாதம் முதல் ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டமும் கார்களில் கட்டாயமாக்கப்பட இருப்பதால், அதற்குள் இருப்பில் உள்ள கார்களை விற்று தீர்த்துவிடுமாறு டீலர்களை அந்நிறுவனம் அறிவுறுத்தி இருக்கிறது. இந்த சூழலில், விரைவில் ஃபியட் கார்கள் விற்பனை முற்றிலுமாக விலக்கிக் கொள்ளப்படும் என்று தெரிகிறது.

எனினும், ஜீப் பிராண்டு மூலமாக ஃபியட் க்றைஸ்லர் குழுமம் இந்திய கார் மார்க்கெட்டில் வர்த்தகத்தை தொடர்ந்து மேற்கொள்ள திட்டமிட்டுள்ளது. ஜீப் பிராண்டில் பல புதிய மாடல்களை களமிறக்கி ஃபியட் இழப்பை சரிகட்டி கொள்ளவும் கணக்கு போட்டுள்ளது. ஃபியட் கார்கள் இந்திய மார்க்கெட்டிலிருந்து விடைபெற இருப்பது அதன் ரசிகர்களிடம் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது.
Source: Autocarindia


Click it and Unblock the Notifications








