தொடர் சரிவில் ஆட்டோமொபைல் துறை... ஓலா, உபரை கை காட்டிய நிர்மலா சீத்தாராமன்!
ஆட்டோமொபைல் துறை சரிவிற்கான காரணங்கள் குறித்து மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீத்தாராமன் பல்வேறு காரணங்களை அடுக்கி உள்ளார்.

மத்திய அரசின் 100 நாள் சாதனைகளை விளக்கும் கூட்டம் சென்னையில் நடந்தது. இதில், கலந்து கொண்ட நிர்மலா சீத்தாராமன் செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது, ஆட்டோமொபைல் துறை சரிவிற்கான காரணங்கள் குறித்து அவர் விளக்கினார்.

"ஆட்டோமொபைல் துறை வீழ்ச்சி அடைந்து வருவது குறித்து ஆலோசனைகள் நடத்தப்பட்டு வருகிறது. ஆட்டோமொபைல் துறை சரிவிற்கு குறிப்பிட்ட காரணத்தை மட்டும் கூற முடியாது. இதற்கு பல்வேறு காரணங்கள் உள்ளன.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் அமலுக்கு கொண்டு வருவதால், இந்த மந்த நிலை ஏற்பட்டுள்ளது. இதனை சரிசெய்வதற்கு மத்திய அரசு முயற்சிகளை மேற்கொண்டு வருகிறது. அத்துடன், தற்போது இளம் தலைமுறையினர் மாதத் தவணையில் கார் வாங்குவதை விரும்பவில்லை. மாறாக, மெட்ரோ ரயிலையும், ஓலா, உபர் போன்ற வாடகை கார்களை பயன்படுத்துவதும் வாகன விற்பனை சரிவுக்கு முக்கிய காரணம்.

வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரி குறைப்பது குறித்த கேள்விக்கு, அதுகுறித்து இப்போது எதுவும் கூற முடியாது என்று கூறி இருக்கிறார். அமைச்சர் நிர்மலா சீத்தாராமனின் இந்த பதில் வாகன உற்பத்தி நிறுவனங்களை அதிர்ச்சியடைய வைத்துள்ளது.

வாகனத் துறையில் ஏற்பட்டுள்ள சரிவுக்கு ஜிஎஸ்டி வரி, காப்பீட்டுத் துறையின் புதிய விதிமுறைகள் மற்றும் பண மதிப்பிழப்பு உள்ளிட்டவை காரணங்களாக முன் வைக்கப்படுகின்றன. அத்துடன், பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகளும் கார் வாங்குவோரின் முடிவை மறுபரிசீலனைக்கு இட்டு சென்றுள்ளது.

இந்த நிலையில், ஆட்டோமொபைல் துறையை தூக்கி நிறுத்துவதற்கு மத்திய அரசு சில திட்டங்களை அறிவித்தாலும், அது போதுமானதாக இல்லை. வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை 28 சதவீதத்திலிருந்து 18 சதவீதமாக குறைப்பதே சிறந்த உபாயமாக இருக்கும் என்று கூறி வாகன நிறுவனங்கள் அரசை வலியுறுத்தி வருகின்றன.

இந்த நிலையில், வரும் 20ந் தேதி கோவாவில் நடைபெறும் ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்தில் வாகனங்கள் மீதான வரியை குறைப்பது குறித்து முக்கிய அறிவிப்பு வெளியாகும் என்று எதிர்பார்த்து ஒட்டுமொத்த ஆட்டோமொபைல் துறையே காத்துக் கிடக்கிறது.

கடந்த 20 ஆண்டுகளில் இல்லாத அளவுக்கு கடந்த மாதம் வாகன விற்பனை கடுமையாக சரிந்துள்ளது. கடந்த மாதம் இந்தியாவின் வாகன விற்பனை 38.7 சதவீதம் சரிவை சந்தித்துள்ளது. கார் விற்பனையில் 31.6 சதவீதம் வரையிலும், இருசக்கர வாகன விற்பனையில் 22.2 சதவீதம் வரையிலும், வர்த்தக வாகன விற்பனையில் 54.3 சதவீதம் வரையிலும் சரிவு ஏற்பட்டுள்ளது.

இதனால், ஆட்டோமொபைல் துறையில் பணியாற்றும் பல லட்சம் பேர் வேலை இழந்து வருகின்றனர். அத்துடன், இது பெரும் முதலீடுகளை செய்து வாகன உற்பத்தி நிறுவனங்கள், டீலர்கள், துறை சார்ந்த பணியாளர்கள் மத்தியில் பெரும் கலக்கத்தை ஏற்படுத்தி உள்ளது.


Click it and Unblock the Notifications








