இந்தியாவில் இதை முதல் முறையாக செய்திருப்பது தமிழகம்தான்! சர்ச்சைகளுக்கு மத்தியில் அசத்தும் எடப்பாடி
இந்தியாவில் இதுவரை வேறு எந்த மாநிலமும் செய்யாத ஒன்றை தமிழக அரசு முதல் முறையாக செய்துள்ளது. பல்வேறு சர்ச்சைகளுக்கு மத்தியிலும், தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி இந்த விஷயத்தில் அசத்தியுள்ளார்.

இந்திய சாலைகள் நாள்தோறும் பல நூற்றுக்கணக்கான உயிர்களை காவு வாங்கி கொண்டுள்ளன. சரியாக சொல்வதென்றால், சாலை விபத்துக்கள் காரணமாக இந்தியாவில் நாள் ஒன்றுக்கு 821 பேர் பரிதாபமாக உயிரிழந்து கொண்டுள்ளனர்.

எனவே சாலை விபத்துக்கள் மற்றும் சாலை விபத்துக்களினால் உயிரிழப்பவர்களின் எண்ணிக்கையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் பல்வேறு நடவடிக்கைகளை தீவிரமாக எடுத்து வருகின்றன. ஆனால் இவை எதற்கும் இதுவரை பெரிய அளவில் பலன் கிடைக்கவில்லை.

இந்தியாவில் சாலை விபத்துக்கள், சாலை விபத்துக்களின் காரணமாக உயிரிழப்பவர்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிகரித்து கொண்டே வருவதற்கு என்ன காரணம்? என்பது சொல்லி தெரிய வேண்டியதில்லை.

ஹெல்மெட் அணியாமல் பைக் ஓட்டுவது, செல்போனில் பேசியபடியும், குடிபோதையிலும் வாகனங்களை இயக்குவது போன்ற பொதுவான போக்குவரத்து விதிமுறை மீறல்கள்தான் சாலை விபத்துகளுக்கு மிக முக்கியமான காரணங்களாக உள்ளன என்பது அனைவரும் அறிந்ததுதான்.

இந்த சூழலில் உரிய தகுதி இல்லாத பலர் இந்தியாவில் வாகனங்களை இயக்கி கொண்டுள்ளனர். அதாவது போலி டிரைவிங் லைசென்ஸ் மூலம் அவர்கள் வாகனங்களை இயக்குகின்றனர். இந்தியாவில் சாலை விபத்துகள் அதிகரித்து கொண்டே வர இதுவும் முக்கியமான காரணங்களில் ஒன்றாக உள்ளது.

எனவே போலி டிரைவிங் லைசென்ஸ்களை கட்டுப்படுத்தும் பணிகள் முடுக்கி விடப்பட்டுள்ளன. இதன் ஒரு பகுதியாக, தமிழகத்தில் தற்போது ஸ்மார்ட் டிரைவிங் லைசென்ஸ், வாகன பதிவு சான்றிதழ் வழங்கும் திட்டம் முழு வீச்சில் செயல்பாட்டிற்கு வந்துள்ளது.

சென்னை திருவான்மியூர், கடலூர் மற்றும் சிவகங்கை உள்ளிட்ட இடங்களில் கடந்த சில ஆண்டுகளுக்கு முன் இத்திட்டம் பரிசோதனை அடிப்படையில் மட்டும் தொடங்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஆனால் தற்போதுதான் முழு அளவில் செயல்பாட்டிற்கு கொண்டு வரப்பட்டுள்ளது.

இந்தியாவிலேயே தமிழகத்தில்தான் முதல் முறையாக இத்தகைய அதிநவீன ஸ்மார்ட் கார்டு வழங்கப்படுகிறது. 'பேப்பர்லெஸ் டிராவல்' என்பதை அடிப்படையாக கொண்டு, மஹாராஷ்டிரா உள்ளிட்ட சில மாநிலங்களில் ஏற்கனவே ஸ்மார்ட் கார்டு அமலில் உள்ளது. ஆனால் தமிழகத்திற்கு நிகராக அவற்றில் தொழில்நுட்ப வசதிகள் கிடையாது.

இந்த சூழலில் சென்னை திருவான்மியூர் வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் நடைபெற்ற விழாவில், போக்குவரத்து துறை அமைச்சர் எம்.ஆர்.விஜயபாஸ்கர் கலந்து கொண்டு, ராதிகா, தேவி, ஆர்த்தி, ராஜேந்திரன், நரேஷ் என்ற வாகன ஓட்டிகளுக்கு புதிய ஸ்மார்ட் கார்டுகளை வழங்கினார்.

இந்த அதிநவீன ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றிருக்கும் சிறப்பம்சங்கள் அசத்தலாக உள்ளன. இந்த ஸ்மார்ட் கார்டுகளை யாராலும் போலியாக தயாரிக்க முடியாது என்பதுதான் இதன் முதல் சிறப்பம்சம். அத்துடன் இதில் பதிவாகியிருக்கும் தகவல்களை அழிக்கவும் இயலாது.

கிரெடிட் கார்டுகளுக்கு நிகரான பாதுகாப்பு வசதிகளுடன் தயார் செய்யப்பட்டுள்ள இந்த ஸ்மார்ட் கார்டில், மைக்ரோ சிப் ஒன்றும் வழங்கப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை எளிதாக பதிவேற்றி கொள்ள இந்த மைக்ரோ சிப் உதவி செய்யும் என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மைக்ரோ சிப்புடன் சேர்த்து அதிநவீன ''க்யூ ஆர் கோடு'' (QR Code) தொழில்நுட்ப வசதியும், இந்த ஸ்மார்ட் கார்டில் இடம்பெற்றுள்ளது. இதன் வாயிலாக தேவைப்படும் அனைத்து விபரங்களையும் உடனுக்குடன் பதிவிறக்கம் செய்து கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

முழு அளவில் செயல்பாட்டிற்கு வந்துள்ள இத்திட்டம் முதற்கட்டமாக சென்னை, திருவள்ளூர் மற்றும் காஞ்சிபுரம் உள்ளிட்ட மாவட்டங்களில் உள்ள 24 வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் செயல்படுத்தப்படும் என அதிகாரிகள் தற்போது தெரிவித்துள்ளனர்.

இதன்பின் படிப்படியாக மற்ற மாவட்டங்களில் உள்ள வட்டார போக்குவரத்து அலுவலகங்களிலும் இந்த திட்டம் நடைமுறைக்கு கொண்டு வரப்படும் எனவும் அவர்கள் அறிவித்துள்ளனர். எனவே மிக விரைவில் தமிழகம் முழுமைக்கும் இந்த திட்டம் விரிவாக்கம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது.

விண்ணப்பம் செய்பவர்களுக்கு வெறும் 1 மணி நேரத்தில் ஸ்மார்ட் கார்டு வழங்கப்பட்டு விடும் என்பதும் குறிப்பிடத்தகுந்த விஷயமாகும். வெகு விரைவாக ஸ்மார்ட் கார்டு கிடைத்து விடும் என்பதால், வட்டார போக்குவரத்து அலுவலகங்களில் பொதுமக்கள் வீணாக காத்திருக்க வேண்டிய தேவை இருக்காது.

முன்னதாக புதிய ஸ்மார்ட் கார்டு அறிமுக விழாவில், போக்குவரத்து துறையின் புது இணையதளம் ஒன்றும் (https://tnsta.gov.in) தொடங்கி வைக்கப்பட்டது. பொதுமக்கள் பயன்படுத்த ஏதுவாக, மிகவும் எளிமையான முறையில் இந்த இணையதளம் உருவாக்கப்பட்டுள்ளது.

இந்த சூழலில், போக்குவரத்து விதிமுறைகளை மீறும் வாகன ஓட்டிகளை கண்டறிய, திருச்சி-செங்கல்பட்டு இடையே சிசிடிவி கேமராக்கள் பொருத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. அதே சமயம் சுற்றுச்சூழல் மாசுபாட்டை குறைப்பது தொடர்பான அறிவிப்புகளும் வெளியிடப்பட்டுள்ளன.

இதன்படி, 200 எலெக்ட்ரிக் பஸ்களை தமிழக அரசு விரைவில் வாங்கவுள்ளது. அத்துடன் பிஎஸ் 6 தரத்தில் உருவாக்கப்பட்ட 10 ஆயிரம் பஸ்களை வாங்கவும் தமிழக அரசு முடிவு செய்துள்ளது. இதன்மூலம் சுற்றுச்சூழல் மாசுபாடு குறையும் என தமிழக அரசு நம்புகிறது.

தமிழகத்தில் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தலைமையிலான அதிமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. ஆனால் எடப்பாடி பழனிச்சாமி முதல்வராக பதவியேற்றது முதலே பல்வேறு சர்ச்சைகளில் வரிசையாக சிக்கி வருகிறார். அவர் மீது கடும் விமர்சனங்களும் முன்வைக்கப்படுகின்றன. இப்படிப்பட்ட சூழலில் செயல்படுத்தப்படும் இத்தகைய திட்டங்கள் மக்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றுள்ளன.


Click it and Unblock the Notifications








