பிஏஎல்-வி பறக்கும் காரின் இந்திய வருகை விபரம்!!
இந்தியாவில், முதல் பறக்கும் கார் அறிமுகம் செய்யப்படுவது குறித்த விபரங்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

போக்குவரத்து நெரிசலில் சிக்கி திணறி வரும் பெரு நகரங்களுக்கு புதிய போக்குவரத்து சாதனங்களை வடிவமைப்பதில் பல நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், பறக்கும் காரை உருவாக்கும் முயற்சிகளும் உலக அளவில் நடந்து வருகின்றன.

மேலும், சில நிறுவனங்கள் பறக்கும் கார் மாடல்களை உருவாக்கி சோதனை ஓட்டம் நடத்தி வருகின்றன. அதில், பிஏஎல்- வி நிறுவனமும் பறக்கும் கார் மாடலின் புரோட்டோடைப்பை வெற்றிகரமாக சோதனை நடத்தி தயாரிப்பு நிலை மாடலை உருவாக்கும் பணிகளில் முடுக்கிவிட்டுள்ளது.

இந்த நிலையில், குஜராத்தில் நடைபெறும் வைப்ரண்ட் குஜராத் என்ற உலகளாவிய வர்த்தக மாநாட்டில் பிஏஎல்-வி நிறுவனத்தின் சிஇஓ ராபர்ட் டின்ஜெமான்ஸ் பேசினார். அப்போது, இந்தியாவில் பறக்கும் கார் அறிமுகம் குறித்து அவர் சில கருத்துக்களை தெரிவித்தார்.

அதில், 2020ம் ஆண்டு உற்பத்தி செய்யப்பட இருக்கும் அனைத்து பறக்கும் கார்களுக்கும் முன்பதிவு முடிந்துவிட்டது. எனவே, 2021ம் ஆண்டில் முதல் பறக்கும் காரை இந்தியாவில் டெலிவிரி செய்யும் வாய்ப்பு இருப்பதாக தெரிவித்தார்.

இதனிடையே, பெரும் பணக்காரர்களை குறிவைத்து முதலில் தனது பறக்கும் காரை பிஏஎல்- வி நிறுவனம் அறிமுகம் செய்தாலும், கடலோர காவல்படை, தனியார் நிறுவனங்கள், மருத்துவத் துறை, அரசுத் துறை மற்றும் காவல் துறை ஆகியவற்றை குறிவைத்து வர்த்தகத்தை துவங்குவதற்கு திட்டமிட்டுள்ளது.

மேலும், இந்தியாவில் செயல்படும் ஆட்டோமொபைல் மற்றும் விமான உதிரிபாக நிறுவனங்களின் உதவியுடன் இங்கு உற்பத்தி செய்வதற்கான திட்டமும் அந்நிறுவனத்திடம் உள்ளது. எனவே, பறக்கும் காரை மிக சரியான விலையில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கான வாய்ப்பு இருக்கிறது.

எனினும், பறக்கும் காருக்கான விதிமுறைகள் மற்றும் நடைமுறை சிக்கல்களை கடந்து மத்திய அரசிடம் அனுமதி பெற வேண்டி இருக்கும். இதனால், அடுத்த இரண்டுகளுக்குள் முதல் பறக்கும் கார் இந்தியாவில் அறிமுகம் செய்வதில் சந்தேகம் எழுகிறது.
Source: ET Auto


Click it and Unblock the Notifications








