மஹிந்திரா துணையுடன் இந்தியாவில் கார் விற்பனை செய்ய ஃபோர்டு திட்டம்?
மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியில் இந்தியாவில் வர்த்தகத்தை தொடர்வதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளதாக பரபரப்பு தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் இந்தியாவில் நீண்ட காலமாக செயல்பட்டு வருகிறது. சென்னையிலும், குஜராத் மாநிலம் சனந்த் பகுதியிலும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் தொழிற்சாலையில் இயங்கி வருகின்றன. இந்த நிலையில், புதிய கார் தயாரிப்பு மற்றும் அதற்கான நவீன தொழில்நுட்ப வசதிகளை உருவாக்கப் பணிகளில் மஹிந்திராவுடன் இணைந்து செயல்பட முடிவு செய்தது.

இதற்காக, கடந்த 2017ம் ஆண்டு ஒப்பந்தமும் செய்து கொண்டது. ஆனால், குறிப்பிட்ட விஷயங்களில் மட்டுமே இரு நிறுவனங்களும் இணைந்து செயல்பட இருப்பதாக அப்போது தெரிவிக்கப்பட்டது. இந்த சூழலில், இந்தியாவில் மஹிந்திரா நிறுவனத்தின் கூட்டணியுடன் முழு வர்த்தகத்தையும் தொடர்வதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

அதன்படி, ஃபோர்டு நிறுவனத்தின் 51 சதவீத பங்குகளை மஹிந்திரா கையகப்படுத்த இருக்கிறதாம். ஃபோர்டு நிறுவனத்தின் வசம் 49 சதவீத பங்குகள் இருக்கும். இதுகுறித்து தற்போது பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக ராய்ட்டர்ஸ் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

மஹிந்திரா - ஃபோர்டு கூட்டணி இணைந்து உருவாக்கும் புதிய நிறுவனத்தின் கீழ் தற்போதைய ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தகப் பணிகள் முழுமையாக மாற்றப்பட உள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டு இருக்கிறது.

புதிய கார்கள், மின்சார கார்கள் மற்றும் கார் இன்ஃபோடெயின்மென்ட் சாதனங்களுக்கான சாஃப்ட்வேர்களை உருவாக்கும் பணிகள் ஏற்கனவே திட்டமிடப்பட்டதுதான். ஆனால், தற்போது விற்பனை மற்றும் சர்வீஸ் பணிகளும் மஹிந்திரா கூட்டணியில் செய்வதற்கு ஃபோர்டு முடிவு செய்துள்ளதாக தெரிகிறது.

எதிர்காலத்தில் பெரும் முதலீடுகளை தவிர்க்கும் விதத்தில் இந்த முடிவை ஃபோர்டு எடுத்து இருப்பதாக தெரிகிறது. இந்த தகவல் ஃபோர்டு நிறுவனத்தின் பணியாளர்கள் மற்றும் வாடிக்கையாளர் மத்தியில் பதட்டத்தையும், பரபரப்பையும் ஏற்படுத்தி இருக்கிறது.


Click it and Unblock the Notifications








