குஜராத் கார் ஆலையை விற்பனை செய்கிறதா ஃபோர்டு நிறுவனம்?
குஜராத் கார் ஆலையை விற்பனை செய்வதற்கான திட்டத்தை ஃபோர்டு கார் நிறுவனம் கையில் எடுத்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு நிறுவனம் இந்தியாவில் இரண்டு கார் ஆலைகளை வைத்து கார் உற்பத்தியில் ஈடுபட்டு வருகிறது. கடந்த 1995ம் ஆண்டு சென்னையில் முதல் ஆலையும், கடந்த 2015ம் ஆண்டு குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் நவீன கட்டமைப்பு வசதிகளுடன் இரண்டாவது கார் ஆலையும் திறந்தது.

இந்த நிலையில், இந்தியாவில் கார் விற்பனை சரிவு பாதையில் சென்று வரும் நிலையில், குஜராத் ஆலையை விற்பனை செய்வதற்கு ஃபோர்டு கார் நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன.

ஃபோர்டு நிறுவனத்தின் ஆசிய - பசிபிக் பிராந்திய தலைமையகம் குஜராத் கார் ஆலையை விற்பனை செய்வதற்கான பணிகளில் ஈடுபட்டுள்ளதாகவும் தகவல்கள் கூறுகின்றன. இதுதொடர்பாக, சில வெளிநாட்டு நிறுவனங்களுடனும் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டு வருவதாக தெரிகிறது.

இந்தியாவில் ஃபோர்டு நிறுவனத்தின் கார் விற்பனை எதிர்பார்த்த அளவு இல்லை. அத்துடன், புதிதாக களமிறக்கப்பட்ட மாடல்களும் போதிய விற்பனை எண்ணிக்கையை பெறவில்லை. எனவே, நஷ்டத்தை குறைப்பதற்காக உலகளாவிய அளவில் ஃபோர்டு நிறுவனம் மேற்கொண்டுள்ள நடவடிக்கையின் ஒரு பகுதியாக குஜராத் ஆலையை விற்கும் முயற்சியும் பார்க்கப்படுகிறது.

ஃபோர்டு நிறுவனத்தின் குஜராத் கார் ஆலையானது மிக நவீன கட்டமைப்பு வசதிகளுடன் ரூ.5,000 கோடி முதலீட்டுடன் அமைக்கப்பட்டது. துறைமுகத்திற்கு அருகாமையிலும் உள்ளது. இந்த ஆலையில்தான் புதிய ஃபோர்டு ஃபிகோ மற்றும் ஆஸ்பயர் கார்கள் உற்பத்தி செய்யப்படுகின்றன. இந்த ஆலையில் ஆண்டுக்கு 2.40 லட்சம் கார்களும், 2.70 லட்சம் எஞ்சின்களையும் உற்பத்தி செய்ய முடியும்.

எனினும், இந்திய வர்த்தகத்தில் எதிர்பார்த்த அளவு முன்னேற்றம் இல்லாததால், ஃபோர்டு நிறுவனம் இந்த முடிவை எடுத்துள்ளதாக கருதப்படுகிறது. அதேநேரத்தில், குஜராத் ஆலையை விற்பனை செய்யும் திட்டம் எதுவும் இல்லை என்று ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் மறுப்பு தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் புதிய மாடல்களுடன் தொடர்ந்து வர்த்தகத்தை விரிவாக்கம் செய்யும் முயற்சியிலேயே ஈடுபட்டுள்ளதாக அவர் கூறியுள்ளார். மேலும், குஜராத் ஆலையை தொடர்ந்து ஏற்றுமதி வர்த்தகத்தை மனதில் வைத்து இயக்க இருப்பதாகவும் தெரிவித்துள்ளார்.
Source: Livemint


Click it and Unblock the Notifications








