மஹிந்திரா மராஸ்ஸோ புதிய எம்பிவி காரை களமிறக்கும் ஃபோர்டு!
மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் அடிப்படையில் புதிய எம்பிவி காரை களமிறக்க ஃபோர்டு நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக செய்தி வெளியாகி இருக்கிறது.

ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் 51 சதவீத பங்குகள் மஹிந்திரா வாங்க உள்ளது. இதனால், இந்தியாவில் நேரடி வர்த்தகத்திலிருந்து ஃபோர்டு நிறுவனம் வெளியேற இருப்பதுடன், ஃபோர்டு இந்தியா நிறுவனத்தின் வர்த்தக செயல்பாடுகள் மஹிந்திரா வசம் செல்ல இருக்கிறது.

மேலும், இரு நிறுவனங்களும் இணைந்து ஃபோர்டு பிராண்டில் பல புதிய மாடல்கள அறிமுகப்படுத்த இருப்பதாகவும் அண்மையில் செய்தி வெளியிட்டிருந்தோம். இந்த நிலையில், மஹிந்திரா மராஸ்ஸோ எம்பிவி காரின் அடிப்படையில் புதிய எம்பிவி காரை ஃபோர்டு கார் நிறுவனம் அறிமுகப்படுத்த இருப்பதாக தகவல் வெளியாகி இருக்கிறது.

அதேநேரத்தில், ஃபோர்டு பிராண்டில் வர இருக்கும் புதிய எம்பிவி கார் டிசைனில் முற்றிலும் மாறுபட்ட அம்சங்களை பெற்றிருக்கும் என்று தெரிகிறது. முகப்பு க்ரில் அமைப்பு, அலாய் வீல்கள், டெயில் லைட் க்ளஸ்ட்டர் ஆகியவை முற்றிலும் மாறுபட்டதாக இருக்கும். ஃபோர்டு லோகோவுடன் இந்த கார் வாடிக்கையாளர்களை வசீகரிக்கும் விதத்தில் மாற்றங்கள் செய்யப்பட்டு இருக்கும்.

வெளிப்புற டிசைன் மட்டுமின்றி, ஃபோர்டு நிறுவனத்தின் ஆஸ்தான டிசைன் அம்சங்களுடன் கூடிய புதிய டேஷ்போர்டு அமைப்பும் கொடுக்கப்பட இருப்பதாக அந்த செய்தி கூறுகிறது. ஃபோர்டு நிறுவனத்தின் சிங்க் தொழில்நுட்பத்துடன் இந்த கார் வாடிக்கையாளர்களை பெரிதும் கவரும் அம்சங்களுடன் வர இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

மஹிந்திரா மராஸ்ஸோ காரில் பயன்படுத்தப்படும் 1.5 லிட்டர் டீசல் எஞ்சின்தான் புதிய ஃபோர்டு எம்பிவி காரிலும் பயன்படுத்தப்படும். அதேபோன்று, மஹிந்திரா நிறுவனம் உருவாக்கி வரும் புதிய 1.5 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் தேர்வும் இந்த புதிய எம்பிவி காரில் வழங்கப்பட இருக்கிறது. மேனுவல் மற்றும் ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகளில் இந்த கார் வர இருக்கிறது.

புதிய ஃபோர்டு எம்பிவி கார் மாருதி எர்டிகா மற்றும் மஹிந்திரா மராஸ்ஸோ கார்களுக்கு மட்டுமின்றி, டொயோட்டா இன்னோவா க்ரிஸ்ட்டா மார்க்கெட்டையும் எட்டிப் பிடிக்கும் வகையில் நிலைநிறுத்தப்படும். வரும் 2021ம் ஆண்டு இந்த புதிய கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்படுகிறது.
Source: ACI


Click it and Unblock the Notifications








