இந்தியாவில் மஹிந்திராவுடன் இணையும் ஃபோர்டு கார் நிறுவனம்!
இந்தியாவில் கார் வர்த்தகத்தை மஹிந்திராவுடன் இணைந்து செயல்படுத்துவதற்கு ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது.

அமெரிக்காவை சேர்ந்த ஃபோர்டு கார் நிறுவனம் கடந்த 1995ம் ஆண்டு இந்தியாவில் கார் வர்த்தகத்தை துவங்கியது. ஃபோர்டு கார் குழுமத்தின் கீழ் தனி நிறுவனமாக இந்தியாவில் கார் வர்த்தகத்தில் ஈடுபட்டு வருகிறது.

சென்னையிலும், குஜராத் மாநிலத்திலும் ஃபோர்டு நிறுவனத்தின் கார் உற்பத்தி ஆலைகள் செயல்பட்டு வருகின்றன. உள்நாட்டு தேவை மட்டுமின்றி, பல்வேறு நாடுகளுக்கும் இங்கு உற்பத்தியாகும் கார்கள் ஏற்றுமதி செய்யப்படுகின்றன.

இந்த நிலையில், இந்தியாவில் மிக நீண்ட காலமாக கார் வர்த்தகத்தில் ஈடுபட்டாலும், எதிர்பார்த்த அளவு வர்த்தகம் சிறப்பாக இல்லை. வெறும் 3 சதவீத சந்தை பங்களிப்பை மட்டுமே ஃபோர்டு தக்க வைத்து வருகிறது.

இதையடுத்து, இந்தியாவில் நேரடி வர்த்தகத்தை கைவிட ஃபோர்டு நிறுவனம் முடிவு செய்துள்ளது. மஹிந்திரா நிறுவனத்துடன் இணைந்து கூட்டு நிறுவனமாக இந்திய வர்த்தகத்தை தொடர்வதற்கு திட்டமிட்டுள்ளது. அடுத்த வாரம் புதிய நிறுவனம் குறித்த அறிவிப்பு வெளியாக இருக்கிறது.

மஹிந்திரா போர்டு என்ற பெயரில் புதிய நிறுவனம் செயல்பட இருப்பதாக தகவல்கள் கூறுகின்றன. இந்த கூட்டு நிறுவனத்தில் ஃபோர்டு நிறுவனம் 49 சதவீத பங்குகளையும், மஹிந்திரா 51 சதவீத பங்குகளையும் கைவசப்படுத்த உள்ளன. இந்த கூட்டு நிறுவனத்தின் இயக்குனர்கள் வாரியத்தில் ஓட்டளிக்கும் உரிமை உள்ளிட்ட பல்வேறு நேரடி உரிமைகளை ஃபோர்டு கைவசம் வைத்திருக்கும் என்று தெரிகிறது.

இந்தியாவில் உள்ள இரண்டு கார் ஆலைகள் உள்ளிட்ட ஃபோர்டு நிறுவனத்தின் சொத்துக்கள் மஹிந்திரா ஃபோர்டு கூட்டு நிறுவனம் வசம் செல்ல இருக்கிறது. எனினும், எஞ்சின் உற்பத்தி ஆலை உள்ளிட்ட சில சொத்துக்களை தன் கையில் நேரடியாக வைத்துக் கொள்ள ஃபோர்டு முடிவு செய்துள்ளது.

புதிய கார்கள், புதிய தொழில்நுட்பங்கள் மற்றும் எஞ்சின் உருவாக்கப் பணிகளுக்காக கடந்த 2017ம் ஆண்டு மஹிந்திராவுடன் ஃபோர்டு நிறுவனம் கூட்டணி அமைத்தது. இதன்மூலமாக, இரு நிறுவனங்களும் பலன் பெறும் என்ற நிலை உருவானது. முதலீடுகளை குறைக்கும் வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், இந்தியாவில் நேரடி வர்த்கத்திலிருந்து ஃபோர்டு விலக முடிவு செய்திருப்பது குறிப்பிடத்தக்கது.

கடந்த 2017ம் ஆண்டு அமெரிக்காவை சேர்ந்த ஜெனரல் மோட்டார்ஸ் நிறுவனம் இந்தியாவில் வர்த்தகத்தை கைவிட்டது. செவர்லே பிராண்டில் கார் விற்பனை மற்றும் உற்பத்தியை முற்றிலுமாக கைவிட்டுவிட்டு டாடா காட்டியது. இந்த நிலையில், ஃபோர்டு நிறுவனமும் நேரடி வர்த்தகத்திலிருந்து விலக முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.
Source: Bloomberg


Click it and Unblock the Notifications








