அடுத்த மூன்று நாட்களில் அறிமுகமாகும் நான்கு புதிய கார்கள்!!
பண்டிகை காலம் நெருங்கி வரும் வேளையில், புதிய கார் மாடல்களை அறிமுகம் செய்யும் பணிகளை கார் நிறுவனங்கள் தீவிரமாக இறங்கியுள்ளன. இந்த மாதத்தில் பல முக்கிய கார் மாடல்கள் களமிறங்க உள்ளன. மேலும், அடுத்த மூன்று நாட்கள் ஆட்டோமொபைல் துறையின் பரபரப்பான நாட்களாக இருக்கும். இந்த ஆண்டின் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தி உள்ள முக்கிய கார் மாடல்கள் அடுத்த மூன்று நாட்களில் அறிமுகமாக இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் (ஆகஸ்ட், 20)
முற்றிலும் புதிய தலைமுறை மாடலாக வர இருக்கும் ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் கார் நாளை விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. புதிய தலைமுறை க்ராண்ட் ஐ10 கார் 10 வேரியண்ட்டுகளிலும், 6 வண்ணத் தேர்வுகளிலும் கிடைக்கும்.. இந்த கார் 3,805 மிமீ நீளமும், 1,680 மிமீ அகலமும், 1,520 மிமீ உயரமும் கொண்டது. இதன் வீல் பேஸ் 2,450 மிமீ ஆக தெரிவிக்கப்பட்டுள்ளது. தற்போதைய மாடலைவிட நீளத்தில் 40 மிமீ வரையிலும், அகலத்தில் 20 மிமீ வரையிலும் அதிகரித்துள்ளது. இதனால், இடவசதி மேம்பட்டதாக இருக்கும்.

புதிய ஹூண்டாய் க்ராண்ட் ஐ10 நியோஸ் காரில் பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரமுடைய 1.2 லிட்டர் கப்பா பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.2 லிட்டர் டீசல் எஞ்சின் தேர்வுகள் பயன்படுத்தப்பட்டுள்ளன. இந்த காரில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது ஏஎம்டி கியர்பாக்ஸ் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம் உள்ளிட்ட பல நவீன தொழில்நுட்ப அம்சங்கள் இடம்பெற்றிருக்கும். சிறப்பான பாதுகாப்பு தரத்துடன் வர இருக்கிறது.

மாருதி எக்ஸ்எல்-6 (ஆகஸ்ட், 21)
மாருதி எர்டிகா காரில் கூடுதல் சிறப்பம்சங்களுடன் எக்ஸ்எல்-6 என்ற பெயரில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மாருதியின் நெக்ஸா ஷோரூம்கள் வாயிலாக விற்பனை செய்யப்படும். நடுவரிசையில் இரண்டு கேப்டன் இருக்கைகளுடன் சொகசு எர்டிகா மாடலாக நிலைநிறுத்தப்பட இருக்கிறது. சாதாரண எர்டிகா காரிலிருந்து வேறுபடுத்தும் விதத்தில், இந்த காரில் முகப்பில் மாற்றங்கள் செய்யப்பட்டுள்ளன. அத்துடன், ஸ்கிட் பிளேட், புதிய பம்பர் அமைப்புடன் மாற்றங்கள் கண்டுள்ளது. இந்த கார் ஸீட்டா மற்றும் ஆல்ஃபா என்ற இரண்டு வேரியண்ட்டுகளில் கிடைக்கும்.

புதிய மாருதி எக்ஸ்எல்-6 காரில் பிஎஸ்-6 மாசு தரமுடைய 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பயன்படுத்தப்பட இருக்கிறது. இந்த எஞ்சின் அதிகபட்சமாக 104 பிஎச்பி பவரையும், 138 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் அல்லது 4 ஸ்பீடு ஆட்டோமேட்டிக் கியர்பாக்ஸ் தேர்வுகளில் கிடைக்கும். புதிய மாருதி எக்ஸ்எல்-6 கார் 6 வண்ணத் தேர்வுகளில் கிடைக்கும். சாதாரண எர்டிகா காரைவிட சற்று கூடுதல் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் (ஆகஸ்ட், 21)
நாளை மறுதினம் புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரும் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. பிஎம்டபிள்யூ நிறுவனத்தின் சிஎல்ஏஆர் பிளாட்ஃபார்மில் இந்த கார் உருவாக்கப்பட்டுள்ளது. முந்தைய தலைமுறை மாடலைவிட 55 கிலோ எடை குறைவானதாக இருக்கும். இந்த கார் நீளத்தில் 76 மிமீ, அகலத்தில் 16 மிமீ மற்றும் உயரத்தில் 1 மிமீ கூடுதலாக்கப்பட்டுள்ளது. வீல்பேஸும் 41 மிமீ அதிகரிக்கப்பட்டுள்ளது. இதனால், உட்புறத்தில் இடவசதி அதிகமாக இருக்கும்.

புதிய தலைமுறை பிஎம்டபிள்யூ 3 சீரிஸ் காரில் 2.0 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மாடல் 330ஐ என்ற பெயரிலும், 2.0 லிட்டர் டீசல் எஞ்சின் மாடல் 330டீ என்ற பெயரிலும் அறிமுகம் செய்யப்பட இருக்கின்றன. இந்த காரில் 8 ஸ்பீடு கியர்பாக்ஸ் இணைக்கப்பட்டு இருக்கும். பின்புற சக்கரங்களுக்கு எஞ்சின் பவர் செலுத்தப்படுகிறது.

கியா செல்டோஸ் (ஆகஸ்ட், 22)
இந்த ஆண்டின் மிக அதிக எதிர்பார்ப்பையும், பரபரப்பையும் ஏற்படுத்தியுள்ள மாடல் கியா செல்டோஸ். ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனத்தின் துணை நிறுவனமான கியா நிறுவனம் இந்தியாவில் அறிமுகம் செய்ய இருக்கும் முதல் கார் மாடலாக வருகிறது செல்டோஸ் எஸ்யூவி. இந்த காரின் சொக்க வைக்கும் வடிவமைப்பு, தொழில்நுட்ப வசதிகள், எஞ்சின் தேர்வுகள் இந்திய வாடிக்கையாளர்களின் கவனத்தை சுண்டி இழுத்து வருகிறது. இது முன்பதிவு எண்ணிக்கையிலும் எதிரொலித்து வருகிறது.

புதிய கியா செல்டோஸ் எஸ்யூவி காரின் டெக் லைன் என்ற வரிசையில் 115 பிஎஸ் பவரை வழங்கும் 1.5 லிட்டர் பெட்ரோல் மற்றும் டீசல் எஞ்சின் தேர்வுகள் வழங்கப்பட இருக்கின்றன. தவிரவும், ஜிடி லைன் வரிசையில் 140 பிஎஸ் பவரை வழங்க வல்ல 1.4 லிட்டர் டர்போ பெட்ரோல் எஞ்சின் வழங்கப்பட இருக்கிறது. இதுதவிர்த்து, 1.5 லிட்டர் டீசல் ஜிடி லைன் மாடலுக்கு முன்பதிவும் ஏற்கப்படுகிறது. ரூ.10 லட்சம் முதல் ரூ.16 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது. ஹூண்டாய் க்ரெட்டா, டாடா ஹாரியர் உள்ளிட்ட எஸ்யூவி மாடல்களுக்கு கடும் போட்டியை கொடுக்கும். இதன் அடிப்படையில்தான் புதிய தலைமுறை ஹூண்டாய் க்ரெட்டா காரும் உருவாக்கப்பட்டுள்ளது. அடுத்த ஆண்டு இந்தியா வர இருக்கிறது.


Click it and Unblock the Notifications








