'தானியங்கி கார்களுக்கு அனுமதி இல்லை' அமைச்சர் நிதின் காட்கரி உறுதி... இதற்காகதான் இந்த முடிவா...?
நான் இருக்கும் வரை தானியங்கி கார்களுக்கு இந்தியாவில் அனுமதி கொடுக்கவே மாட்டேன் என மத்திய அமைச்சர் நிதின் கட்காரி கூறியுள்ளார். இதற்கான காரணத்தை இந்த பதிவில் காணலாம்.

பொதுமக்கள் பயன்படுத்தும் மற்றும் அவர்களை சார்ந்து இயங்கும் அனைத்து துறைகளிலும் நவீன தொழில்நுட்பங்களின் வளர்ச்சி அதிவேகமாக இருந்து வருகின்றது.
உதாரணமாக, செல்போன், டிவி போன்று நாம் அன்றாடம் பயன்படுத்தும் பொருட்களில் காணப்படும் வசதிகள் பிரம்மிப்பையும், ஆச்சரியத்தையும் ஏற்படுத்தும் வகையில் இருக்கின்றன.

அந்தவகையில், வாகனத்துறையில் புரட்சியை ஏற்படுத்தும் வகையில் தானியங்கி கார்கள் அறிமுகம் செய்யப்பட்டன. இவை, பல முன்னணி நாடுகளில் ஏற்கனவே பயன்பாட்டில் வந்துவிட்டன.
ஒருசில நாடுகள் தற்போது, சாலைகளில் தானியங்கி கார்களை பயன்படுத்துவதற்கான சோதனையோட்டத்தை செய்து வருகின்றன. மேலும், விற்பனை நிலையங்கள் அதன் பொருட்களை தானியங்கி வாகனங்கள் மூலம் டெலிவரி செய்யும் முயற்சியில் ஈடுபட்டு வருகின்றன.

இவ்வாறு, உலக நாடுகள் அனைத்தும் தானியங்கி கார்களைப் பயன்பாட்டிற்கு கொண்டுவரும் முயற்சியில் ஈடுபட்டு வரும்நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சர் நிதின் கட்கரி, நான் இருக்கும்வரை தானியங்கி கார்களுக்கு இந்தியாவில் ஒரு போதும் அனுமதி கிடையாது என தெரிவித்துள்ளார்.

காதி மற்றும் கிராம தொழில் ஆணையம் சார்பில் விழா ஒன்று நடைபெற்றது. இதில் கலந்துக் கொண்ட நிதின் கட்காரி, விழாவை ஆரம்பித்து வைத்த பின்னர் சிறப்பு உரையாற்றினார்.

அப்போது பேசிய அவர், "இந்தியாவில் தானியங்கி கார்களுக்கு அனுமதி வழங்கப் போவதில்லை. தானியங்கி கார்களுக்கு அனுமதி வழங்கினால், ஓட்டுநர் தொழிலை நம்பியிருக்கும் மக்களின் வாழ்வாதரம் பாதிக்கும் சூழல் ஏற்படும்" என தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய அவர், "நாட்டில் உள்ள மிகப் பெரிய பணக்காரர்களில் சிலர் என்னைச் சந்தித்து, டிரைவர் இல்லாத வாகனங்களை இந்தியாவுக்குக் கொண்டுவருமாறு கோரிக்கை வைத்தனர். ஆனால், நான் இங்கு இருக்கும் வரை, இந்தியாவில் டிரைவர் இல்லாத கார்களை அனுமதிக்க மாட்டேன் என்று தெளிவாக கூறிவிட்டேன். இந்த முடிவிற்கு, நான் புதிய தொழில்நுட்பத்தை எதிர்க்கின்றேனா என்ற கேள்வியெழும்பியது. அதற்கு என்னுடைய பதில் இல்லை" இவ்வாறு கூறினார்.

மேலும், "நாட்டில் 40 லட்சம் ஓட்டுநர்கள் பணியாற்றி வருகின்றனர். 25 லட்சம் ஓட்டுநர்களுக்கான பற்றாக்குறை நிலவி வருகின்றது. இந்த சூழ்நிலையில், தானியங்கி கார்கள் பயன்பாட்டிற்கு கொண்டுவரப்படுமானால் 1 கோடிக்கும் அதிகமான ஓட்டுநர்களின் வேலைகள் பாதிக்கப்படும். இதனை ஒருபோதும் நான் ஏற்றுக் கொள்ள மாட்டேன் " என கட்கரி தெரிவித்தார்.

மத்திய அமைச்சரின் இந்த கருத்து வரவேற்கதக்க வகையில் இருக்கின்றது. இருப்பினும், இவர் அண்மையில் கொண்டு வந்த உச்சபட்ச அபராத திட்டம் வாகன ஓட்டிகளையும், பொதுமக்களையும் பெருமளவில் பாதிக்கும் வகையில் அமைந்துள்ளது.

இத்திட்டம், விபத்தில்லா நாடாக இந்தியாவை மாற்றும் நோக்கில் கொண்டுவரப்பட்டாலும், பல்வேறு முறைகேடுகள் மற்றும் அத்துமீறல்களில் சிக்கும் சூழலுக்கு பொதுமக்கள் தள்ளப்பட்டுள்ளனர்.
ஆகையால், பலர் புதிய மோட்டார் வாகன சட்டத்தில் ஏதேனும் மாற்றம் செய்யப்படுமா என எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.


Click it and Unblock the Notifications








