வாடகை கார் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்த அமைச்சர் நிதின் கட்காரி!
ஒரு திடமான முடிவை அறிவித்து லட்சக்கணக்கான வாடகை கார் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி.

இந்தியாவில் வேலைவாய்ப்பு திண்டாட்டம் அதிகரித்து வருவதாக பல்வேறு தொழிற்துறையினரும் புகார் தெரிவித்து வருகின்றனர். அதிலும், வாடகை கார் ஓட்டுனர் வேலைவாய்ப்புத் துறையும் மிக கடினமான காலக் கட்டத்தில் உள்ளது. இந்த தொழிலில் உள்ள உரிமையாளர்கள் மற்றும் ஓட்டுனர்கள் பல்வேறு நெருக்கடிகளை சந்தித்து வருகின்றனர்.

இந்த சூழலில், வாடகை கார் ஓட்டுனர்களுக்கு மேலும் ஒரு நெருக்கடியாக ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களை உருவாக்கும் முயற்சிகளும் நடந்து வருகின்றன. வெளிநாடுகளில் ஓட்டுனர் இல்லாமல் இயங்கும் கார்களின் சோதனை ஓட்டங்கள் மிக தீவிரமாக நடந்து வருகின்றன.

இந்த டிரைவர்லெஸ் கார்கள் மூலமாக பல்வேறு அனுகூலங்கள் கிடைக்கும். அதேநேரத்தில், பெரிய அளவில் வேலைவாய்ப்பை வழங்கி வரும் இந்த துறையும் தற்போது வேலைவாய்ப்பு திட்டாட்ட அரக்கன் பிடியில் சிக்கும் அபாயம் உள்ளது.

இந்த நிலையில், இந்தியாவிலும் ஓட்டுனர் இல்லா கார்கள் அறிமுகம் குறித்த பேச்சுக்கள் அடிபட துவங்கி இருக்கின்றன. போக்குவரத்து துறையில் பல்வேறு மாற்றங்களை செய்து வரும் மத்திய அரசு ஓட்டுனர் இல்லா கார்களை அறிமுகப்படுத்துவதிலும் முக்கியத்துவம் கொடுக்கும் என்று எதிர்பார்க்கப்பட்டது.

நவீன இந்தியாவின் போக்குவரத்துத் துறை சீர்த்திருத்தவாதியாக பார்க்கப்படும் மத்திய அமைச்சர் நிதின் கட்காரி இந்த விஷயத்தில் ஒரு திடமான முடிவை எடுத்து லட்சக்கணக்கான வாடகை கார் ஓட்டுனர்கள் வயிற்றில் பால் வார்த்துள்ளார்.

இந்திய வர்த்தகம் மற்றும் தொழில் கூட்டமைப்பான அசோசெம் சார்பில் நிகழ்ச்சி ஒன்றுக்கு ஏற்பாடு செய்யப்பட்டு இருந்தது. இதில் பேசிய மத்திய அமைச்சர் நிதின் கட்காரி," டிரைவர்லெஸ் கார்கள் என்றால் என்ன? என்று என்னிடம் பலமுறை கேட்கப்படுகிறது. நான் போக்குவரத்து அமைச்சராக இருக்கும் வரையில் அதனை மறந்துவிடுங்கள்; நான் அமைச்சராக இருக்கும் வரையில் டிரைவர்லெஸ் கார்களை அனுமதிக்க மாட்டேன்," என்று தெரிவித்துள்ளார்.

இந்தியாவில் 22 லட்சம் ஓட்டுனர்களுக்கு பற்றாக்குறை இருக்கிறது. வாகன வேலைவாய்ப்புத் துறையில் குறிப்பிடத்தக்க வளர்ச்சி அவசியமாகி இருக்கிறது. பழைய கார்களை அழிக்கும் சிறப்புத் திட்டத்தை வகுக்கும் பணிகள் இறுதிக் கட்டத்தில் இருக்கிறது. அது அமலுக்கு வந்தால் மூலப்பொருட்களின் விலை கணிசமாக குறையும்.

இதனால், ஆட்டோமொபைல் துறையின உற்பத்தி செலவீனம் குறைந்து உலகின் சிறந்த உற்பத்தித் துறையாக இந்தியா மாறுவதுடன் குறிப்பிடத்தக்க வளர்ச்சியை பெறுவதற்கான வாய்ப்பு இருக்கிறது. இந்திய பொருளாதாரத்தின் 5 மில்லியன் டிரில்லியன் டாலர் பொருளாதாரத்தை எட்டுவதற்கு ஆட்டோமொபைல் துறை முக்கிய பங்களிப்பை வழங்கும் ," என்று கூறி இருக்கிறார்.

இந்த கருத்துக்கள் மூலமாக வாகன உற்பத்தியாளர்கள் மற்றும் ஓட்டுனர்களின் வயிற்றில் பால் வார்த்துள்ளார் நிதின் கட்காரி. இது நிச்சயம் வரவேற்கத்தக்க முடிவுகளாக இருக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








