அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூவர் பலி... எச்சரிக்கையை பொருட்படுத்தாததால் விபரீதம்
அர்ஜூனா விருது வென்ற கவுரவ் கில் கார் மோதி மூன்று பேர் உயிரிழந்தனர். இந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

பார்மர் (ராஜஸ்தான்): நேற்று (செப்.21) நடைபெற்ற தேசிய ரேலி சாம்பியன்ஷிப் ரேஸின்போது, அர்ஜூனா விருது வென்ற ரேலி டிரைவர் கவுரவ் கில்லின் கார் மோட்டார்சைக்கிளின் மீது மோதியதால், சிறுவன் உள்பட மூன்று பேர் பரிதாபமாக உயிரிழந்தனர். எப்எம்எஸ்சிஐ இந்திய தேசிய ரேலி சாம்பியன்ஷிப்பின் (Indian National Rally Championship- INRC) மூன்றாவது சுற்று மேக்ஸ்பீரியன்ஸ் ரேலியின்போது இந்த விபத்து நிகழ்ந்தது.

இதில், கவுரவ் கில்லும் காயமடைந்தார். அவருக்கு சுவாசம் தொடர்பான பிரச்னைகள் ஏற்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. எனவே அவர் தொடர்ந்து கண்காணிப்பின் கீழ் வைக்கப்பட்டுள்ளார். எனினும் அவர் அபாய கட்டத்தை கடந்து விட்டார். இந்த விபத்தில் நரேந்திரா, அவரது மனைவி புஷ்பா மற்றும் அவர்களது இளைய மகன் ஜிதேந்திரா ஆகியோர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். இந்த விபத்து காரணமாக ரேலி ரத்து செய்யப்பட்டது.

இதுகுறித்து ஐஎன்ஆர்சி புரமோட்டார் வம்சி மெர்லா கூறுகையில், ''கவுரவ் பிரேக் பிடித்து காரை நிறுத்த முயன்றார். ஆனால் வேகம் காரணமாக அவரால் எதுவும் செய்ய முடியாமல் போய் விட்டது'' என்றார். போட்டியின்போது சாலை மூடப்படுவது தொடர்பாக தொடர்ச்சியாக எச்சரிக்கைகளை விடுத்தபோதிலும் கிராம மக்கள் அதனை பொருட்படுத்தவில்லை எனவும் வம்சி மெர்லா கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில், ''சாலைகள் மூடப்படுவது தொடர்பாக கிராம மக்களுக்கு கடந்த 15 நாட்களாக எச்சரிக்கை விடுத்து வருகிறோம். கிராம மக்கள் டிராக்கிற்குள் நுழைவதை தடுக்க ஃபீல்டு மார்ஷல்கள் இருப்பார்கள். ஆனால் உயிரிழந்தவர்களில் ஒருவர் (நரேந்திரா) அவர்களுடன் வாக்குவாதம் செய்துள்ளார்.

பீல்டு மார்ஷல்களின் கவனம் சற்றே வேறு பக்கம் திரும்பியபோது, அவர் பேரிகார்டை கடந்து டிராக்கிற்குள் நுழைந்து விட்டார்'' என்றார். அத்துடன் ரேசுக்கு முன்பாக எச்சரிக்கை விடுக்கப்பட்ட போதிலும், அவர்கள் டிராக்கில் நுழைந்து விட்டதாகவும், இதுதவிர அவர்கள் ஹெல்மெட் அணியவில்லை எனவும் தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன.

இதுகுறித்து ரேலி ஒருங்கிணைப்பாளர்களில் ஒருவர் கூறுகையில், ''வெறும் ஒரு நிமிடத்திற்கு உள்ளாக அனைத்தும் நடந்து விட்டது. இந்த விபத்தில் உயிரிழந்தவர்களுக்காக வருந்துகிறோம். இந்த நிகழ்வு துரதிருஷ்டவசமானது'' என்றார். இதுகுறித்து எப்எம்எஸ்சிஐ தலைவர் பிருத்விராஜ் கூறுகையில், ''பாதுகாப்பிற்காக அனைத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் எடுக்கப்பட்ட போதிலும், இந்த நிகழ்வு நடைபெற்றது துரதிருஷ்டவசமானது'' என்றார்.
அர்ஜூனா விருது பெற்ற முதல் மோட்டார்ஸ்போர்ட் டிரைவர் கவுரவ் கில்தான் என்பது குறிப்பிடத்தக்கது. இந்த விபத்து தற்போது பெரும் பரபரப்பையும், சோகத்தையும் ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








