விபத்தில் மூன்று பேர் பலியான சம்பவம்... பிரபல கார் பந்தய வீரர் கவுரவ் கில் மீது வழக்குப் பதிவு!
ராஜஸ்தானில், பைக் மீது பந்தய கார் மோதி மூன்று பேர் உயிரிழந்த சம்பவத்தில், பிரபல கார் பந்தய வீரர் கவுரல் கில் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது.
ராஜஸ்தானில், தேசிய ராலி சாம்பியன்ஷிப் போட்டியின் மூன்றாவது சுற்று கடந்த வார இறுதியில் நடந்தது. அப்போது, பந்தயம் நடந்த தடத்திற்குள் அந்த பகுதியை சேர்ந்த ஒருவர் பைக்கில் கடந்துள்ளார். அப்போது, எதிர்பாராத விதமாக பிரபல கார் பந்தய வீரர் கவுரவ் கில் ஓட்டி வந்த பந்தய கார் அந்த தடத்தில் வந்த பைக்கின் மீது பயங்கரமாக மோதியது.

இந்த பயங்கர விபத்தில், பைக்கை ஓட்டி வந்த நரேந்திராவும், அவரது பின்னால் அமர்ந்திருந்த அவரது மனைவி மற்றும் மகன் படுகாயமடைந்து உயிரிழந்தனர். கவுரவ் கில் மற்றும் அவருக்கு துணையாக காரில் வழிகாட்டுபவராக செயல்பட்டவரும் சிறிய காயங்களுடன் தப்பினர்.
இந்த பயங்கர சம்பவம் மோட்டார் ஸ்போர்ட்ஸ் பிரியர்கள் மட்டுமின்றி, நாடு முழுவதும் அதிர்ச்சி அலைகளை ஏற்படுத்தியது. இந்த நிலையில், இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்த ராஜஸ்தான் மாநில அரசு உத்தரவிட்டுள்ளது.
விபத்துக்கு காரணமான காரை ஓட்டி வந்த கவுரவ் கில் மற்றும் அவருக்கு வழி காட்டியாக செயல்பட்டவர் மீது இந்திய தண்டனை சட்டம் 304 பிரிவின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டு இருக்கிறது. உள்நோக்கம் இல்லையென்றாலும், மரணத்தை விளைவித்த குற்றத்தின் கீழ் அவரது பெயரில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

போட்டியை ஏற்பாடு செய்திருந்த மேக்ஸ்எக்ஸ்பீரியன்ஸ், மஹிந்திரா, ஜேகே டயர்ஸ், எம்ஆர்எஃப் டயர்ஸ் மற்றும் தேசிய மோட்டார் ஸ்போர்ட்ஸ் க்ளப் கூட்டமைப்பு ஆகிய அமைப்புகளும் இந்த வழக்கில் சேர்க்கப்பட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன.
ஆரம்ப கட்ட விசாரணையில், அனுமதி பெறாமல், எந்தவிதமான பாதுகாப்பு ஏற்பாடுகளும் இல்லாமல் போட்டியை நடத்தி இருப்பதாக ராஜஸ்தான் மாநில அரசு வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
முழுக்க முழுக்க அஜாக்கிரதையால் இந்த விபத்து நடந்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பெற்றோரை இழந்த நரேந்திராவின் மூத்த மகனுக்கு உரிய இழப்பீடு வழங்க கோரியும் அப்பகுதியினர் போராட்டத்தில் ஈடுபட்டனர். அவர்களை போலீஸ் அதிகாரிகள் பேச்சுவார்த்தை நடத்தி சமாதானப்படுத்தி உள்ளனர்.

இந்த சம்பவம் தொடர்பாக, அம்மாநில முதல்வர் அசோக் கெலாட் உத்தரவின்பேரில், மாவட்ட கலெக்டர் ஹிமான்சு குப்தா மற்றும் போலீஸ் கமிஷனர் சிவ்ராஜ் மீனா ஆகியோரை பணியில் இருந்து விடுவிக்கப்பட்டு காத்திருப்போர் பட்டியலில் வைக்கப்பட்டுள்ளனர். இந்த சம்பவம் தொடர்பாக விசாரணை நடத்தி ஏழு நாட்களுக்குள் அறிக்கை அளிக்க முதல்வர் அசோக் கெலாட் உத்தரவிட்டுள்ளார்.


Click it and Unblock the Notifications









