பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம்... எந்த ஊரில் தெரியுமா?
பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்க அதிரடி திட்டம் வகுக்கப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் பல்வேறு நகரங்கள் தற்போது காற்று மாசுபாடு பிரச்னையால் பாதிக்கப்பட்டுள்ளன. தலைநகர் டெல்லியில் இந்த பிரச்னை கையை மீறி சென்றுள்ளது. எனவே காற்று மாசுபாடு பிரச்னையை குறைக்க மத்திய, மாநில அரசுகள் சார்பில் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் தொடர்ச்சியாக எடுக்கப்பட்டு வருகின்றன.

பெட்ரோல், டீசலில் இயங்கும் வாகனங்களால்தான் காற்று அதிகம் மாசடைகிறது. எனவே பெட்ரோல், டீசல் வாகனங்களின் பயன்பாட்டை கட்டுப்படுத்தும் நடவடிக்கைகளை மத்திய அரசு எடுத்து வருகிறது. அதற்கு பதிலாக எலெக்ட்ரிக் வாகனங்களின் பயன்பாட்டை மத்திய அரசு ஊக்குவித்து வருகிறது. இதற்காக எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு பல்வேறு சலுகைகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.

தலைநகர் டெல்லியை போல் காற்று அதிகம் மாசடைந்த இந்திய நகரங்களில் பீகார் மாநிலம் கயாவும் ஒன்று. உலக சுகாதார நிறுவனம் கடந்த 2018ம் ஆண்டு மே மாதம் அறிக்கை ஒன்றை வெளியிட்டிருந்தது. இதில், உலகில் காற்று அதிகம் மாசடைந்த நான்காவது நகரம் கயா என உலக சுகாதார நிறுவனம் தெரிவித்திருந்தது.

எனவே கயா நகரில் காற்று மாசுபாடு பிரச்னையை குறைப்பதற்காக தற்போது அதிரடி திட்டம் ஒன்று உருவாக்கப்பட்டுள்ளது. இதன்படி கயா நகரின் குறிப்பிட்ட சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்படலாம் என கூறப்படுகிறது. அதற்கு பதிலாக அங்கு எலெக்ட்ரிக் ரிக்ஸாக்கள் மட்டுமே அனுமதிக்கப்படும் என தெரிகிறது.

கயா நகரின் மிகவும் பிஸியான சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்கள் தடை செய்யப்பட வாய்ப்புகள் உள்ளன. கயா நகரில் காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்காகவே இந்த அதிரடி திட்டம் முன்மொழியப்பட்டுள்ளது. காற்று மாசுபாடு பிரச்னையை சமாளிப்பதற்காக கயா மாவட்ட நிர்வாகம் விரிவான திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளது.

குறிப்பிட்ட சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை விதிப்பது என்பது இதில் ஒன்றாக உள்ளது. எந்தெந்த சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கலாம்? என்பதை கண்டறியும் பணியில் தற்போது போக்குவரத்து துறை அதிகாரிகள் ஈடுபட்டுள்ளனர். சம்பந்தப்பட்ட அதிகாரிகள் அறிக்கை வழங்கிய பிறகு இந்த திட்டம் அமலுக்கு கொண்டு வரப்படும்.

அனேகமாக கயா நகரின் ஜிபி ரோடு, கேபி ரோடு மற்றும் டீக்கரி ரோடு ஆகிய சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களை இயக்க தடை விதிக்கப்படலாம் என தகவல்கள் தெரிவிக்கின்றன. அவ்வாறு பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிக்கப்பட்டால், இந்த சாலைகளில் எலெக்ட்ரிக் ரிக்ஸாக்களை மட்டுமே இயக்க முடியும்.

இதுதவிர மேலும் சில சாலைகளும் இந்த பட்டியலில் இணைக்கப்படுவதற்கான வாய்ப்புகள் உள்ளன. குறிப்பிட்ட சாலைகளில் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு தடை விதிப்பது மட்டுமல்லாது காற்று மாசுபாட்டை கட்டுப்படுத்துவதற்கான வேறு சில நடவடிக்கைகளையும் கயா மாவட்ட நிர்வாகம் எடுக்கவுள்ளது. இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸில் தெரியப்படுத்துங்கள்.


Click it and Unblock the Notifications








