சூப்பர்... எலெக்ட்ரிக் வாகனங்களில் இனி இந்த பிரச்னை கிடையவே கிடையாது... இப்போ உங்களுக்கு நிம்மதியா?
எலெக்ட்ரிக் வாகனங்களில் இருந்து வந்த ஒரு பிரச்னைக்கு தற்போது தீர்வு காணப்பட்டுள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

உலகின் பல்வேறு நாடுகளும் பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு விடை கொடுக்கும் முடிவில் உள்ளன. பெட்ரோல், டீசல் வாகனங்களால் சுற்றுச்சூழல் மிக கடுமையாக பாதிக்கப்படுகிறது. இதனால் பெட்ரோல், டீசல் வாகனங்களுக்கு பதிலாக எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்களின் பயன்பாடு ஊக்குவிக்கப்படுகிறது.

பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் இவை சுற்றுச்சூழலுக்கு பாதிப்பை ஏற்படுத்தாது. ஆனால் இந்த வகை வாகனங்களில் முக்கியமான பிரச்னை ஒன்று உள்ளது. அதாவது எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்கள் மிகவும் அமைதியானவை. பெட்ரோல், டீசல் வாகனங்களை போல் இவை இயங்கும்போது எவ்விதமான சப்தமும் எழாது.

இது நல்ல விஷயம்தானே என நீங்கள் நினைக்கலாம். ஆனால் கிடையவே கிடையாது. இது உண்மையில் மிக ஆபத்தான விஷயம். சாலை பாதுகாப்பு என்ற விஷயத்தில் இதனால் பாதிப்பு ஏற்படும். அதாவது வழக்கமான பெட்ரோல், டீசல் வாகனங்கள் வந்தால் உங்களால் அவற்றின் இருப்பை கண்டு கொள்ள முடியும். அவை எழுப்பும் சப்தமே இதற்கு காரணம்.

ஆனால் எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்கள் அவ்வாறு எந்த சப்தத்தையும் எழுப்பாது. எனவே அவற்றின் இருப்பை பாதசாரிகள், சைக்கிள்களில் பயணம் செய்பவர்கள் மற்றும் மற்ற வாகன ஓட்டிகளால் அறிய முடியாது. இதன் காரணமாக சாலை விபத்துக்கள் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளன.

எனினும் தற்போது இந்த பிரச்னைக்கு தீர்வு காணப்பட்டுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான செயற்கை டிரைவிங் ஒலியை (Artificial Driving Noise), ஹெல்லா நிறுவனம் உருவாக்கியுள்ளது. ஹெல்லா என்பது ஜெர்மனியை சேர்ந்த ஆட்டோமோட்டிவ் லைட்டிங் மற்றும் எலெக்ட்ரானிக்ஸ் நிறுவனம் ஆகும்.

இந்நிறுவனம் தற்போது எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான செயற்கை டிரைவிங் ஒலியான Acoustic Vehicle Alerting System-ஐ (AVAS) உருவாக்கியுள்ளது. எலெக்ட்ரிக், ஹைப்ரிட் மற்றும் ப்யூயல் செல் வாகனங்களின் சாலை பாதுகாப்பை ஏவிஏஎஸ் அதிகரிக்கும் என ஹெல்லா நிறுவனம் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

வழக்கமான ஐசி இன்ஜின் (IC - Internal Combustion) வாகனங்கள் போன்ற ஒலியை இந்த ஏவிஎஸ் எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு தரும் எனவும் ஹெல்லா நிறுவனம் தெரிவித்துள்ளது. எனவே சாலைகளில் பயணிக்கும் பாதசாரிகள் மற்றும் இதர வாகன ஓட்டிகள் இந்த வாகனங்களின் ஒலியை நன்றாக கேட்க முடியும்.

பெல்ஜியத்தின் பிரஸெல்ஸ் நகரில், வரும் அக்டோபர் 18ம் தேதி முதல் அக்டோபர் 23ம் தேதி வரை பஸ் வேர்ல்டு நிகழ்ச்சி நடைபெறவுள்ளது. இதில்தான் ஹெல்லா நிறுவனம் முதல் முறையாக ஏவிஏஎஸ்-ஐ அறிமுகம் செய்யவுள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு இதுபோன்ற பாதுகாப்பு வசதிகள் மிகவும் அவசியமான ஒன்றுதான்.

ஏனெனில் எலெக்ட்ரிக் வாகனங்களின் அமைதி காரணமாக சாலை விபத்து நிகழ்ந்தால், விபத்தில் சிக்கிய நபருக்கு மட்டுமின்றி, வாகனத்தின் உரிமையாளருக்கும் சேர்த்தே பாதிப்பு ஏற்படும். ஆனால் ஏவிஏஎஸ் மூலமாக ஹெல்லா நிறுவனம் இதுபோன்ற பிரச்னைகளுக்கு தீர்வு கண்டுள்ளது.


Click it and Unblock the Notifications








