எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம்... குண்டை தூக்கிப் போட்ட மத்திய அமைச்சர்!
எலெக்ட்ரிக் கார்களுக்கான மானியம் குறித்து மத்திய இணை அமைச்சர் அர்ஜுன் மேஹ்வால் தெரிவித்திருக்கும் புதிய தகவல் வாடிக்கையாளர்கள் மத்தியில் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது. அதன் விபரங்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

வாகனப் புகையால் பெரு நகரங்களில் சுற்றுச்சூழல் வெகுவாக மாசுபட்டு வருகிறது. இதனை தவிர்ப்பதற்கான முயற்சிகளில் மத்திய அரசு தீவிரம் காட்டி வருகிறது. புகையில்லா வாகன உற்பத்தியையும், விற்பனையையும் அதிகரிக்க பல்வேறு சிறப்பு திட்டங்களை செயல்படுத்தி வருகிறது.

இந்த நிலையில், பேட்டரியில் இயங்கும் எலெக்ட்ரிக் வாகனங்களின் விற்பனையை அதிகரிப்பதற்காக ஃபேம்-2 என்ற மானியத் திட்டம் நடைமுறையில் உள்ளது. எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு மானியம் அளிப்பதற்காக இந்த திட்டத்திற்கு ரூ.10,000 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டு இருக்கிறது. இந்த திட்டத்தின் மூலமாக எலெக்ட்ரிக் வாகனங்களை வாங்குவோர் குறிப்பிடத்தக்க அளவு மானியம் பெற முடியும்.

இந்த நிலையில், ஃபேம்-2 திட்டத்தின் மூலமாக வர்த்தக ரீதியிலான வாகனங்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கு மட்டுமே மானியம் பெற முடியும் என்று மத்திய கனரக தொழில்துறை மற்றும் பொதுத்துறை நிறுவனங்களுக்கான மத்திய இணை அமைச்சர்அர்ஜுன் மேஹ்வால் தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து அவர் கூறியிருப்பதாவது: "பாரிஸ் உடன்படிக்கையின்படி, வாகனப் புகையில்லா சுற்றுச்சூழலை உருவாக்கும் முயற்சிகளில் தீவிரமாக ஈடுபட்டுள்ளோம். எதிர்கால சந்ததயினருக்கு நச்சுப் புகையில்லா சூழலை உருவாக்க உறுதி கொண்டிருக்கிறோம்.

இதற்கு ஏற்ப பேட்டரியில் இயங்கும் கார், டிரக், பஸ்கள் மற்றும் இருசக்கர வாகனங்கள் அதிக அளவில் பயன்பாட்டுக்கு கொண்டு வருவதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளோம். ஆனால், பேட்டரியில் இயங்கும் வர்த்தக வாகனங்களை வாங்கும் டாக்சி ஆபரேட்டர்கள் மற்றும் உரிமையாளர்களுக்கும், இருசக்கர வாகனங்களுக்கும் மானியத் திட்டத்தின் கீழ் சலுகை பெற முடியும்," என்று தெரிவித்துள்ளார்.

இதனால், எலெக்ட்ரிக் கார் உள்ளிட்ட நான்கு சக்கர மின்சார வாகனங்களை தனிநபர் பயன்பாட்டுக்காக வாங்குவோருக்கு ஃபேம்-2 திட்டத்தின் கீழ் மானியம் பெறுவதில் சிக்கல் எழுந்துள்ளதாக கூறப்படுகிறது. எனினும், தனிநபர் பயன்பாட்டுக்காக எலெக்ட்ரிக் கார்களை வாங்குவோருக்கும் மானியம் வழங்க வேண்டும் என்று கார் உற்பத்தி நிறுவனங்கள் வலியுறுத்தி வருகின்றன.

ஹூண்டாய் நிறுவனம் தனிநபர் பயன்பாட்டை மனதில் வைத்து கோனா எலெக்ட்ரிக் காரை அண்மையில் அறிமுகம் செய்தது. சிறப்பான வரவேற்பையும் பெற்றிருக்கிறது. விரைவில் எம்ஜி மோட்டார் நிறுவனமும் தனது இ-இசட்எஸ் மின்சார காரை அறிமுகம் செய்ய இருக்கிறது. அடுத்த ஆண்டு மாருதி வேகன் ஆர் உள்ளிட்ட மின்சார மாடல்கள் வர இருக்கின்றன.

இந்த நிலையில், ஃபேம்-2 திட்டத்தின் கீழ் தனிநபர் பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் கார்கள் மானியம் பெற இயலாது என்ற தகவல் வாடிக்கையாளர் மத்தியில் ஏமாற்றத்தை ஏற்படுத்தி இருக்கிறது. தனிநபர் பயன்பாட்டுக்கான எலெக்ட்ரிக் கார்களுக்கும் மானியம் வழங்க வேண்டும் என்ற கோரிக்கை வலுவாக எழுந்துள்ளது.


Click it and Unblock the Notifications








