அதிர்ச்சியில் மக்கள்... மத்திய அரசின் அதிரடி முடிவு குறித்த தகவல் வெளியானது... என்னவென்று தெரியுமா?
மத்திய அரசின் அதிரடி முடிவு குறித்து தற்போது வெளியாகியிருக்கும் தகவல், மக்களையும், ஆட்டோமொபைல் துறையையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

இந்தியாவின் ஆட்டோமொபைல் துறை தற்போது மிகவும் இக்கட்டான நிலையில் உள்ளது. கடந்த ஆகஸ்ட் மாதம் இந்தியாவின் வாகன விற்பனை 38.7 சதவீதம் என்கிற அளவிற்கு மிக கடுமையான வீழ்ச்சியை சந்தித்துள்ளது. இது கடந்த இரண்டு தசாப்தங்களில், அதாவது கடந்த இருபது ஆண்டுகளில் இல்லாத அளவிற்கான சரிவு என்பது குறிப்பிடத்தக்கது.

வாகனங்களின் விற்பனை சரிவு காரணமாக, முன்னணி நிறுவனங்கள் அனைத்தும் கடந்த சில மாதங்களாக உற்பத்தியை தொடர்ச்சியாக குறைத்து கொண்டே வருகின்றன. அத்துடன் ஏராளமான டீலர்ஷிப்களும் இழுத்து மூடப்பட்டுள்ளன. இதன் காரணமாக லட்சக்கணக்கான ஊழியர்கள் வேலையிழந்துள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

நாட்டில் தற்போது நிலவி வரும் பொருளாதார மந்த நிலை, பண மதிப்பிழப்பு நடவடிக்கையால் ஏற்பட்ட தாக்கம், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கு மத்திய அரசு கொடுத்து வரும் ஊக்கம் என ஆட்டோமொபைல் துறையின் வீழ்ச்சிக்கு பல்வேறு காரணங்கள் முன்வைக்கப்படுகின்றன. அத்துடன் மிக கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகளும் ஒரு காரணமாக சொல்லப்படுகிறது.

பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிமுறைகள் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக புதிய வாகனங்களை வாங்குவதை மக்கள் தள்ளி போடுவதாகவும் கூறப்படுகிறது. இதுதவிர வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியும் விற்பனை சரிவுக்கு ஒரு காரணம் என ஆட்டோமொபைல் துறையினர் தெரிவித்து வருகின்றனர்.

வாகனங்கள் மீது தற்போதைய நிலையில் 28 சதவீத ஜிஎஸ்டி வரி விதிக்கப்பட்டு வருகிறது. இதனை 18 சதவீதமாக குறைக்க வேண்டும் என இந்திய ஆட்டோமொபைல் உற்பத்தியாளர்கள் கூட்டமைப்பு வலியுறுத்தி வருகிறது. மத்திய அரசு இதனை செய்தால், வாகனங்களின் விலை குறைந்து விற்பனை அதிகரிக்கும் என்பது ஆட்டோமொபைல் நிறுவனங்களின் கோரிக்கையாக உள்ளது.

ஆனால் பிரதமர் நரேந்திர மோடி தலைமையிலான மத்திய அரசு தற்போது வரை இந்த கோரிக்கையை நிறைவேற்றவில்லை. ஆனால் ஆட்டோமொபைல் துறையை சரிவில் இருந்து மீட்பதற்காக, மத்திய அரசு இந்த கோரிக்கையை பரிசீலித்து வருவதாக கடந்த சில வாரங்களாக தொடர்ச்சியாக செய்திகள் வெளியாகி கொண்டுள்ளன.

எனவே வரும் 20ம் தேதி நடைபெறவுள்ள ஜிஎஸ்டி கவுன்சிலின் அடுத்த கூட்டம் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. இதில், வாகனங்கள் மீதான ஜிஎஸ்டி வரியை குறைப்பது தொடர்பாக முக்கியமான அறிவிப்புகள் வெளியாக வாய்ப்புகள் இருப்பதாக வெளிவந்த தகவல்களே இதற்கு காரணம்.

ஆனால் தற்போது வெளியாகியுள்ள ஒரு தகவல் ஆட்டோமொபைல் நிறுவனங்களை கவலையடைய செய்துள்ளது. ஆம், ஆட்டோமொபைல் துறைக்கு அரசு ஜிஎஸ்டி சலுகைகளை வழங்க வாய்ப்பில்லை என தற்போது வெளியாகியுள்ள தகவல்கள் தெரிவிக்கின்றன. கடந்த சில ஆண்டுகளாக இருந்த அபரிமிதமான வளர்ச்சியின் விளைவே தற்போதைய மந்த நிலை என மத்திய அரசு நம்புவதாக கூறப்படுகிறது.

எனவே ஜிஎஸ்டி வரியை குறைக்க வாய்ப்பில்லை எனவும் தெரிகிறது. இதுகுறித்து அரசு அதிகாரிகள் கூறுகையில், ''ஆட்டோமொபைல் துறை கடந்த மூன்று-நான்கு ஆண்டுகளாக நல்ல லாபத்தில்தான் இயங்கி கொண்டிருந்தது. லாபத்தை அவர்கள் நன்கு பராமரித்தனர். ஆனால் தற்போது மந்த நிலை ஏற்பட்டுள்ளது. எந்தவொரு தொழில் என்றாலும், வளர்ச்சி, வீழ்ச்சி இருக்கத்தான் செய்யும்'' என்றனர்.

இதுதவிர மேலும் சில நாடுகளிலும் கூட தற்போது டிமாண்ட் மந்தமாகி கொண்டே வருவதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். அத்துடன் கடந்த 2009 மற்றும் 2014ம் ஆண்டுகளின் சில காலாண்டுகளிலும் கூட, விற்பனையின் மீது அழுத்தம் நிலவியதையும் அவர்கள் தற்போது மேற்கோள் காட்டியுள்ளனர்.

அத்துடன் ஆட்டோமொபைல் துறை தவிர மேலும் சில துறைகளும் ஜிஎஸ்டி வரியை குறைக்க வேண்டும் என மத்திய அரசுக்கு நீண்ட காலமாக வலியுறுத்தி வருகின்றன. எனவே தற்போது ஆட்டோமொபைல் துறைக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியை குறைத்தால், மற்ற துறைகளின் கோரிக்கை இன்னும் வலுப்பெற்று விடும் என மத்திய அரசு கருதுவதாகவும் கூறப்படுகிறது.

ஒருவருக்கு சலுகையை கொடுத்து விட்டு மற்றவர்களுக்கு கொடுக்காவிட்டால் பிரச்னை இன்னும் பெரிதாகி விடும் என்பது மத்திய அரசின் எண்ணமாக உள்ளது. எனவே ஆட்டோமொபைல் துறைக்கான ஜிஎஸ்டி சலுகை கிடைப்பது சந்தேகமே. தற்போது வெளியாகியுள்ள இந்த தகவல்களால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் கவலையில் ஆழ்ந்துள்ளன.

இந்த தகவல் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மட்டுமல்லாது புதிய வாகனங்களை வாங்குவதற்கு திட்டமிட்டிருந்த மக்களையும் அதிர்ச்சியடைய வைத்துள்ளது. ஜிஎஸ்டி குறைந்தால் வாகனங்களின் விலை குறையும் என எதிர்பார்த்து காத்திருந்தவர்கள் இந்த தகவலால் ஏமாற்றமடைந்துள்ளனர். இந்த விவகாரத்தில் மத்திய அரசின் அடுத்தகட்ட நடவடிக்கைகளை பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.


Click it and Unblock the Notifications








