டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை கருப்பு பட்டியலில் சேர்க்க நடவடிக்கை!
குறித்த காலக்கெடுவிற்குள் மின்சார பஸ்களை சப்ளை செய்யாத டாடா மோட்டார்ஸ் நிறுவனம் மத்திய அரசின் கருப்பு பட்டியலில் சேர்க்கப்பட இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

நாட்டின் மிகப்பெரிய வாகன தயாரிப்பு குழுமமான டாடா மோட்டார்ஸ் பல்வேறு வகைகளில் வாகனங்களை உற்பத்தி செய்து வருகிறது. மேலும், மின்சார வாகன தயாரிப்பிலும் ஈடுபட்டுள்ளது. இந்த நிலையில்,
கடந்த 2017ம் ஆண்டில் 11 மாநிலங்களுக்கு 1,440 மின்சா பஸ்களை வாங்குவதற்கு மத்திய கனரக தொழிற்துறை நிதி ஒதுக்கீடு செய்தது.

இதற்கான டென்டரில் டாடா மோட்டார்ஸ் பங்கேற்று, ஆர்டரையும் கைப்பற்றியது. இதன்படி, லக்ணோ, ஜம்மு, கொல்கத்தா, இந்தூர், கவுகாத்தி மற்றும் ஜெய்ப்பூர் ஆகிய மாநகரங்களுக்கு தலா 40 மின்சார பஸ்களை சப்ளை செய்வதற்கு அரசுடன் டாடா மோட்டார்ஸ் ஒப்பந்தம் செய்தது.

இந்த ஒப்பந்தம் மத்திய அரசின் FAME என்ற மின்சார வாகனங்களுக்கான முதல்கட்ட மானியத் திட்டத்தின் கீழ் போடப்பட்டது. இதன்மூலமாக, 60 சதவீதம் அளவுக்கு மானியம் வழங்க வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில், டாடா மோட்டார்ஸ் நிறுவனம் ஒப்பந்தத்தில் குறிப்பிட்டபடி, குறித்த காலக்கெடுவில் மின்சார பஸ்களை சம்பந்தப்பட்ட மாநில அரசுகளுக்கு சப்ளை செய்யவில்லை.

காலக்கெடு நீட்டித்து கொடுக்கப்பட்டும் சப்ளை செய்யாமல் டாடா மோட்டார்ஸ் தாமதப்படுத்திவிட்டது. இதனால், ஃபேம் திட்டத்தின் கீழ் மானியம் பெற முடியாத நிலைக்கு மாநில அரசுகள் தள்ளப்பட்டுள்ளன. இது மாநில அரசுகளுக்கு பெரும் இழப்பை ஏற்படுத்தும் என்று தெரிகிறது.

இதையடுத்து, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தின் மீது சம்பந்தப்பட்ட மாநிலங்கள் சட்டரீதியாக நடவடிக்கை எடுக்க திட்டமிட்டுள்ளன. அதன்படி, டாடா மோட்டார்ஸ் நிறுவனத்தை அரசு டென்டர்களில் பங்கேற்காத வகையில் கருப்பு பட்டியலில் சேர்க்க கோரிக்கை வைத்துள்ளன.

மேலும், உத்தரபிரதேச அரசு டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு ரூ.3.42 கோடியை அபராதமாக விதித்துள்ளது. அதேபோன்று, மத்திய பிரதேசம் உள்ளிட்ட மாநிலங்களும் டாடா மோட்டார்ஸ் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுக்க திட்டமிட்டுள்ளன.

மேலும், ஃபேம்-2 மின்சார வாகனங்களுக்கான மானியத் திட்டத்தின் டென்டர்களில் டாடா மோட்டார்ஸ் பங்கேற்க முடியாத வகையில் சட்ட ரீதியிலான தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் திட்டமிட்டுள்ளன. இந்த நடவடிக்கையால் டாடா மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு பெரும் பின்னடைவு ஏற்படும் வாய்ப்பு இருப்பதாக கருதப்படுகிறது.
Source: Economic Times


Click it and Unblock the Notifications








