மகிழ்ச்சியில் ஆட்டோ டிரைவர்கள்... சிறப்பு சலுகை வழங்க அரசு திட்டம்...
எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி வேரியண்டாக மாற்ற சிறப்பு சலுகை வழங்கப்பட இருப்பதாக தகவல் வெளிாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

மாசுபாட்டைக் கட்டுபடுத்தும் விதமாக நாடு முழுவதும் பல்வேறு அதிரடி நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.
முக்கியமாக பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களால் ஏற்படும் மாசினை கட்டுபடுத்துவதற்கான முயற்சியில் மத்திய மற்றும் மாநில அரசுகள் மிக தீவிரம் காட்டி வருகின்றன.

அந்தவகையில், நாட்டில் இயங்கிவரும் எரிபொருள் வாகனங்களை முற்றிலும் ஒழித்து கட்டும் நடவடிக்கையை அரசு கையாண்டு வருகின்றது. இத்துடன், பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களுக்கு மாற்றாக மின் மற்றும் குறைவான மாசினை வெளிப்படுத்தும் எரிபொருள் வாகனங்களின் பயன்பாட்டை ஊக்குவிக்கும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன.

மேலும், அதனை ஊக்குவிக்கும் விதமாக வரி, ஆர்டிஓ பதிவு உள்ளிட்டவற்றில் பல்வேறு சலுகைகள் வழங்கப்பட்டு வருகின்றன.
இந்த சிறப்பு சலுகைகள், புதிய வாகனங்களுக்கு மட்டும் வழங்கப்பட்டு வரும்நிலையில், எரிபொருள் வாகனத்தில் இருந்து மாசில்லா வாகனமாக மாற்றப்படும் பழைய வாகனத்திற்கும் சலுகை வழங்க திட்டமிடப்பட்டுள்ளது.

ஆனால், இது தமிழகத்தில் இல்லை. இந்தியாவின் வட மாநிலமான பிஹாரில்தான் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளது.
மக்கள் போக்குவரத்திற்காக அதிகம் பயன்படுத்தும் வாகனங்களில் வாடகை வாகனங்களே முதல் இடத்தில் உள்ளன. அதிலும், ஆட்டோக்கள்தான் முன்னணியில் உள்ளன. இவை, மக்களின் அன்றாட வாழ்க்கையில் இன்றியமையாததாக இருக்கின்றன.

ஆகையால், மாநிலத்தில் உள்ள ஆட்டோக்கள் அனைத்தையும் குறைந்த மாசினை வெளிப்படுத்தும் வாகனங்களாக மாற்றும் முயற்சியில் பிஹார் அரசு களமிறங்கியுள்ளது.
இதனடிப்படையில், பெட்ரோலால் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆக மாற்றினால் சலுகை வழங்க இருப்பதாக அம்மாநில முதலமைச்சர் சுஷில் குமார் மோடி தலைமையிலான அரசு அறவித்துள்ளது.

இதுகுறித்து ஆட்டோ எகனாமிக் டைம்ஸ் இடம் அவர் கூறியதாவது, "மாநிலத்தில் இயங்கிவரும் எரிபொருள் வாகனங்களை கட்டுபடுத்தும் விதமான முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதன் ஒரு பகுதியாக டீசலால் இயங்கும் ஆட்டோ ரிக்ஷாக்களுக்கு அனுமதி வழங்குவது தடை செய்யப்பட்டுள்ளது. அதேபோன்று, எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களை சிஎன்ஜி ஆக மாற்ற சலுகை வழங்க அரசு முடிவு செய்துள்ளது. இதற்கான திட்டத்தை போக்குவரத்துத்துறை தயாரித்து வருகின்றது" என்றார்.

பாட்னாவில் மட்டும் சுமார் 10 ஆயிரத்துக்கும் அதிகமான ஆட்டோ ரிக்ஷாக்கள் இயங்குவதாக போக்குவரத்துத் துறை வட்டாரங்கள் தகவல் தெரிவிக்கின்றன. அவற்றில், 1,500 மட்டுமே சிஎன்ஜி ஆட்டோக்களாக உள்ளன. சிஎன்ஜி எரிபொருளை வழங்குவதற்கான நிலையங்கள் அம்மாநிலத்தில் இரண்டு செயல்படுகின்றது. அதில், ஒன்று ருகன்புராவிலும், மற்றொன்று பைபாஸ் சாலையில் உள்ளது.

தற்போது, மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கையால், நகரில் இயங்கும் சிஎன்ஜி நிலையங்கள் கணிசமாக அதிகரிக்கப்படும் என தகவல் வெளியாகியுள்ளது.
நகர எரிவாயு விநியோக திட்டத்தின் கீழ், சிஎன்ஜி விநியோகம் பாட்னாவில் செய்யப்படுகிறது. இத்திட்டத்தை கடந்த பிப்ரவரி மாதம் 17ம் தேதி அன்று பெகுசாரையில் நடைபெற்ற விழா ஒன்றில் பிரதமர் நரேந்திர மோடி தொடங்கி வைத்தார்.

இதைத்தொடர்ந்து, மாநிலம் முழுவதும் சிஎன்ஜி வாகனங்களை அதிகப்படுத்தும் முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எரிபொருளால் இயங்கும் ஆட்டோக்களைக்காட்டிலும், சிஎன்ஜி ஆட்டோக்கள் கூடுதல் மைலேஜ் தரும் என கூறப்படுகின்றது.

அந்தவகையில், ஒரு கிலோ சிஎன்ஜிக்கு 45கிமீ தூரம் வரை அது செல்லும். அதேபோன்று, நான்கு சக்கர வாகனங்கள் 30 கிமீ மைலேஜினை வழங்கும்.

எரிபொருள் வாகனங்களை சிஎன்ஜி வேரியண்டாக மாற்றுவதற்கான பிரத்யேக எந்திரங்கள் சந்தையில் கிடைக்கின்றன. இவை, தரத்தைப் பொருத்து, அதிக விலையில் விற்பனைச் செய்யப்படுகின்றது. இது, பெட்ரோல் மற்றும் டீசல் வாகனங்களை சிஎன்ஜி மாற்றாக உதவும்.

இவ்வாறு செய்வதன்மூலம், மாசின் அளவை கணிசமாக குறைக்க முடியும். அத்துடன், குறைந்த செலவில் அதிக லாபத்தையும் பெற முடியும்.


Click it and Unblock the Notifications








