ஆபத்தை உணராத மக்கள்... புதிய வாகனங்களில் இனி இது இருப்பது கட்டாயம்... விரைவில் அதிரடி அறிவிப்பு?
புதிய வாகனங்களில் இனி இது இடம்பெறுவதை கட்டாயம் என்ற அதிரடி அறிவிப்பு விரைவில் வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தியாவில் வாகனங்களை கொள்ளையடிக்கும் சம்பவங்கள் அதிகம் நடைபெற்று வருகின்றன. இதை தடுக்க காவல் துறை தரப்பில் பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. எனினும் வாகன உரிமையாளர்கள் மத்தியில் போதிய விழிப்புணர்வு இல்லாததன் காரணமாக கொள்ளையர்கள் தொடர்ச்சியாக கைவரிசையை காட்டி கொண்டேதான் உள்ளனர்.

வாகனங்கள் கொள்ளையடிக்கப்பட்டால், அவற்றை கண்டுபிடிப்பதில் ஜிபிஎஸ் டிராக்கர்களின் பங்களிப்பு மிகவும் முக்கியமானது. ஜிபிஎஸ் டிராக்கரை வாகனங்களில் பொருத்தி கொள்ள குறைவான செலவுதான் ஆகும். ஆனால் வாகன உரிமையாளர்கள் பலர் இது வீண் செலவு என நினைக்கின்றனர். இதனால் வாகனங்கள் திருடப்பட்டால், அவற்றை மீண்டும் கண்டுபிடிப்பதில் சிக்கல் ஏற்படுகிறது.

குறிப்பாக கொள்ளையடிக்கப்பட்ட வாகனங்களை மீண்டும் கண்டுபிடிப்பதில் போலீசார் கடும் சிரமங்களை சந்திக்க வேண்டியுள்ளது. எனவே புதிய வாகனங்களில் ஜிபிஎஸ் டிராக்கர் கருவி இடம்பெறுவதை கட்டாயம் செய்வது குறித்து தற்போது பரிசீலிக்கப்பட்டு வருகிறது. முதற்கட்டமாக புதிய கார்களில் மட்டும் ஜிபிஎஸ் டிராக்கரை கட்டாயமாக்கலாமா? என போலீசார் ஆலோசனை நடத்தி வருகின்றனர்.

உத்தர பிரதேச மாநிலம் காஸியாபாத் போலீசார்தான் இந்த அதிரடி முடிவு குறித்து பரிசீலித்து வருகின்றனர். காஸியாபாத் நகரம் வாகன திருட்டு சம்பவங்களுக்கு பெயர் பெற்றது என்பது குறிப்பிடத்தக்கது. இதனால் புதிய கார்களில் ஜிபிஎஸ் டிராக்கர் இடம்பெறுவதை கட்டாயப்படுத்துவது தொடர்பாக அம்மாவட்டத்தில் உள்ள கார் டீலர்களுடன் போலீசார் தற்போது பேச்சுவார்த்தை நடத்தி வருகின்றனர்.

வாகனங்கள் எங்கே உள்ளது என்பதை கண்காணிக்க ஜிபிஎஸ் டிராக்கர்கள் உதவி செய்யும். எனவே வாகனம் திருடப்பட்டால், அதை கண்டுபிடிக்கும் பணிகள் போலீசாருக்கு மிகவும் எளிதாகும். இதுகுறித்து எஸ்எஸ்பி சுதிர் குமார் சிங் கூறுகையில், ''இந்த டிவைஸ் விலை உயர்ந்தது அல்ல. அத்துடன் பல்வேறு கார் திருட்டு வழக்குகளை தீர்த்து வைக்க போலீசாருக்கு இது உதவும்.

வரும் தீபாவளி பண்டிகைக்கு முன்னதாக கார் டீலர்களுடன் கூட்டம் ஒன்றை நடத்த திட்டமிட்டு வருகிறோம்'' என்றார். வாகன திருட்டு சம்பவங்களுக்கு பெயர் பெற்ற ஊர் என்றாலும், காஸியாபாத்தில் தற்போது வாகன திருட்டு சம்பவங்கள் ஓரளவிற்கு குறைந்துள்ளன. அதாவது கடந்த 2018ம் ஆண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் அங்கு வாகன திருட்டு தொடர்பாக 4,341 வழக்குகள் பதிவாகியிருந்தன.

ஆனால் நடப்பாண்டு ஜனவரி முதல் அக்டோபர் வரையிலான கால கட்டத்தில் இந்த எண்ணிக்கை 3,334 ஆக குறைந்துள்ளது. இதை இன்னும் குறைக்கும் முயற்சிகளை தற்போது போலீசார் மேற்கொண்டுள்ளனர். புதிய கார்களில் ஜிபிஎஸ் டிராக்கர்கள் இடம்பெறுவதை கட்டாயமாக்கும் போலீசாரின் முயற்சிகளை கார் டீலர்கள் வரவேற்றுள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதனால் பல்வேறு நன்மைகள் கிடைக்கும் என கார் டீலர்கள் கூறியுள்ளனர். ஆனால் போதிய விழிப்புணர்வு இல்லாததால் ஒரு சிலர் மட்டுமே ஜிபிஎஸ் டிராக்கர்களை தாங்களாக முன்வந்து தேர்வு செய்கின்றனர் எனவும் கார் டீலர்கள் கூறியுள்ளனர். இதுகுறித்து கார் டீலர்ஷிப்பை சேர்ந்த ஊழியர் ஒருவர் கூறுகையில், ''ஜிபிஎஸ் டிராக்கரை பொருத்துவதற்கான செலவு தோராயமாக 10 ஆயிரம் ரூபாய்தான்.

ஆனால் அதன் பலன்களை நாங்கள் கூறும்போது 10ல் 4 பேர் மட்டுமே ஜிபிஎஸ் டிராக்கரை வாங்குகின்றனர். வாகனத்தின் இருப்பிடத்தை சொல்வதுடன் மட்டுமின்றி, ஒருவேளை சாலை விபத்து நடைபெற்றால் குடும்ப உறுப்பினர்கள் மற்றும் கார் நிறுவனத்தின் வாடிக்கையாளர் சேவை மையத்தை எச்சரிக்கும் வசதிகளும் இதில் இடம்பெற்றுள்ளன.

இதுதவிர இந்த டிவைஸ் மூலமாக மற்றொரு பலனும் இருக்கிறது. உங்கள் வாகனத்தின் தூர வரம்பை நீங்கள் நிர்ணயித்து கொள்ள முடியும். உங்கள் வாகனம் இதை மீறினால் உங்களுக்கு எச்சரிக்கை கிடைக்கும்'' என்றார். இதுகுறித்து மற்றொரு டீலர்ஷிப் பணியாளர் கூறுகையில், ஜிபிஎஸ் டிராக்கரின் பலன்களை வாடிக்கையாளர்களர்களுக்கு புரிய வைக்க நாங்கள் முயற்சிப்போம்.

ஆனால் வாடிக்கையாளர்கள் ஏதாவது சாக்கு போக்கு சொல்லி தட்டி கழித்து விடுவார்கள். இது தண்ட செலவு என்றுதான் பலர் நினைக்கின்றனர். ஆனால் அது தவறு. தற்போது போலீசார் எடுத்து வரும் முயற்சிகள் ஒருவேளை பயன் அளிக்கலாம்'' என்றனர். இது தொடர்பான உங்கள் கருத்துக்களை கமெண்ட் பாக்ஸ் மூலமாக தெரியப்படுத்துங்கள்.
Note: Images used are for representational purpose only.


Click it and Unblock the Notifications








