இந்திய சாலைகளில் மர்மமாக சுற்றி வரும் சீன கார்... ரகசியத்திற்கு கிடைத்த விடை இதுதான்...
இந்திய சாலைகளில் சீன கார் ஒன்று மர்மமாக சுற்றி வரும் நிலையில், அது தொடர்பான தகவல்கள் வெளியாகியுள்ளன.

இந்தியாவில் தற்போது மர்மமான முறையில் புதிய எஸ்யூவி ரக கார் ஒன்று உலா வந்து கொண்டுள்ளது. இது சீனாவை சேர்ந்த கிரேட் வால் மோட்டார்ஸ் (Great Wall Motors) நிறுவனம் நிர்வகித்து வரும் ஹாவல் பிராண்டில் இருந்து வெளிவரும் எச்6 கூபே (Haval H6 Coupe) என கூறப்படுகிறது. இந்தியாவில் தற்போது முதல் முறையாக இதன் ஸ்பை படங்கள் வெளியாகி இணையதளங்களில் பரவி வருகின்றன.

க்ராஸ்ஓவர் மற்றும் எஸ்யூவி ரக கார்களை தயாரிப்பதில் நிபுணத்துவம் பெற்ற ஹாவல் என்ற பிராண்டை சீனாவின் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் நிர்வகித்து வருகிறது. ஹாவல் பிராண்டின் மூலமாக சீனாவில் அதிக எஸ்யூவி ரக கார்களை விற்பனை செய்யும் நிறுவனங்களில் ஒன்றாக கிரேட் வால் மோட்டார்ஸ் திகழ்ந்து கொண்டுள்ளது.

உலகின் பல்வேறு நாடுகளிலும் கார்களை விற்பனை செய்து வரும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் தற்போது இந்தியாவிலும் கால் பதிக்க இருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன. கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் ஏற்கனவே தனது டெக்னிக்கல் சென்டரை, கர்நாடக மாநில தலைநகர் பெங்களூரில் அமைத்திருப்பது குறிப்பிடத்தக்கது.

இந்த சூழலில்தான் இந்தியாவில் முதல் முறையாக தற்போது ஹாவல் எச்6 கூபே (கூபே என்பது கார் வகை கிடையாது) கார் கண்ணில் சிக்கியுள்ளது. எனவே இந்த கார்தான் இந்தியாவில் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்கான சோதனை ஓட்டம்தான் தற்போது நடைபெற்று வருவதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்தின் முதல் கார், 2021 அல்லது 2022ம் ஆண்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்யப்படும் என எதிர்பார்க்கப்படுகிறது. ஹாவல் பிராண்டின் மூலம் ஏராளமான எஸ்யூவி கார்கள் கையிருப்பில் இருப்பது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்கு சாதகமான ஒரு விஷயமாக பார்க்கப்படுகிறது.

இதனிடையே சீனாவில் அதிகம் விற்பனையாகும் எஸ்யூவி ரக கார்களில் ஒன்றாக ஹாவல் எச்6 (Haval H6), கடந்த 6 வருடங்களாக இருந்து வருகிறது. கடந்த மாதம் கூட 25,728 ஹாவல் எச்6 கார்கள் விற்பனை செய்யப்பட்டிருந்தன. இந்த ஹாவல் எச்6 காரின் அடிப்படையில் உருவாக்கப்பட்டதுதான் ஹாவல் எச்6 கூபே. இந்த காரைதான் கிரேட் வால் மோட்டார்ஸ் இந்தியாவில் முதலில் களமிறக்கும் என கூறப்படுகிறது.

இந்த கார் சீனாவில் 1.5 லிட்டர் டர்போசார்ஜ்டு இன்ஜின் உடன் விற்பனை செய்யப்பட்டு வருகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 169 எச்பி பவரை உருவாக்கும் திறன் வாய்ந்தது. இந்த இன்ஜின் உடன் 7 ஸ்பீடு ஆட்டோமெட்டிக் கியர் பாக்ஸ் வழங்கப்படுகிறது. ஆல் வீல் டிரைவ் சிஸ்டம் ஆப்ஷனலாக கொடுக்கப்படுகிறது.

முன்னதாக உலகின் பல்வேறு நாடுகளை சேர்ந்த கார் நிறுவனங்களும் இந்தியாவை நோக்கி படையெடுத்து வருகின்றன என்பது குறிப்பிடத்தக்கது. இங்கிலாந்தை சேர்ந்த எம்ஜி, தென் கொரியாவை சேர்ந்த கியா ஆகிய 2 நிறுவனங்களும் தங்கள் முதல் கார்களை நடப்பு ஆண்டில் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவுள்ளன. இவ்விரு நிறுவனங்களும் முதலில் விற்பனைக்கு அறிமுகம் செய்யவிருப்பது பிரீமியம் ரக எஸ்யூவி கார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








