ஒரே சார்ஜில் 300 கிமீ செல்லும் மின்சார காரை வாங்க தயாரா இருங்க: இந்தியாவில் அறிமுகமாகும் சீனா கார்?
அண்டை நாடான சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம், தனது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருவதாக தகவல் வெளியாகி உள்ளது.

இந்தியாவின் அண்டை நாடான சீனாவை மையமாகக் கொண்டு இயங்கும் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவில் விற்பனைச் செய்வதற்கான நடவடிக்கையில் இறங்கியிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

சீனாவின் மிகப்பெரிய கார் தயாரிப்பு நிறுவனமான கிரேட் வால் நிறுவனம் மின்வாகன தயாரிப்பில் முக்கிய கவனம் செலுத்து வருகிறது. மின்சாரம் சார்ந்த வாகனங்களின் உற்பத்தியில் அமெரிக்காவை மிஞ்சும் வகையில் சீனா செயல்பட்டு வருகிறது. இதனடிப்படையில், அந்த நிறுவனம் பெரும்பாலும் மின்சாரம் சார்ந்த தயாரிப்புகளுக்கு அதிகம் முக்கியத்துவம் கொடுத்து வருகிறது.

அதன்படி, சமீபத்தில் இந்த நிறுவனம் உருவாக்கிய ஓரா ஆர்1 மின்சாரக் கார் வாகன ஓட்டிகளிடையே பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது. ஏனென்றால் இந்த காரை ஒரு முறை சார்ஜ் செய்தால் அதிகபட்சமாக 312 கிமீ தூரம் வரைச் செல்லலாம் என கூறப்படுகிறது. மேலும், இந்த காரின் விலையே அதிகபட்சமாக இந்திய மதிப்பில் ரூ. 6 லட்சம் வரை விற்கப்படுவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இதுமட்டுமின்றி, இந்த நிறுவனம் எஸ்யூவி ரக கார்களைத் தயாரிப்பதிலும் ஜாம்பவானாக செயல்பட்டு வருகிறது. கிராஸோவர்ஸ் மற்றும் பிக்கப் டிரக்குகள் ஆகியவைகளையும் இந்த நிறுவனம் தயாரித்து உலகின் பல முக்கிய நாடுகளுக்கு விற்பனைச் செய்து வருகிறது.

இந்த நிலையில், நடப்பாண்டின் மையத்தில் ஹெக்டர் ஐந்து இருக்கை பிரீமியம் எஸ்யூவி ரக காரை உள்நாட்டில் அந்த நிறுவனம் அறிமுகம் செய்ய உள்ளது. இதைத்தொடர்ந்து, இரண்டாவது அறிமுகமாக அனைத்து இ-இஸட்எஸ் மின்வாகனங்களையும் 2019ம் ஆண்டின் இறுதிக்குள் அறிமுகம் செய்ய இருக்கின்றது.

இந்நிலையில், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம் தனது கார்களை இந்தியச் சந்தையில் விற்பனைச் செய்யும் நடவடிக்கை மேற்கொண்டு வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இந்த நிறுவனம் ஏற்கனவே தனது தொழில்நுட்பம் சார்ந்த மையத்தை பெங்களூருவில் அமைத்து செயல்படுத்தி வருகிறது. இங்கு, ஆட்டோ இன்டலிஜென்ஸ் மற்றும் ஜீரோ எமிஸ்ஸன் வாகனங்கள் குறித்த ஆய்வை அது மேற்கொண்டு வருகிறது.

மேலும், அதன் இணையதள பக்கத்தில் பணியாளர்களைத் தேர்வு செய்ய இருப்பதாகவும் அறிவித்துள்ளது. அதன்படி, தனது தயாரிப்புகளை இந்தியாவில் 2021-2022க்குள் விற்பனைச் செய்யலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக கௌசிக் கங்குலி என்பவரை தயாரிப்பு திட்டமிடல் மற்றும் மூலோபாயத்தின் இயக்குனராக நியமித்துள்ளது. இவர் மாருதி சுஸுகி நிறுவனத்தின் முன்னாள் தலைவராக செயல்பட்டு வந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது.

ஆறு மாதங்களுக்கு மேலாக இந்தியாவில் வணிகம் செய்யலாமா? வேண்டாமா? என்ற ஆலோசனைக்கு பின்னர், இதற்கான முடிவை தற்போது எடுத்திருப்பதாக அந்த நிறுவனம் தரப்பில் கூறப்பட்டுகிறது.

சீன கார் தயாரிப்பு நிறுவனங்கள் தற்போது புதிய கொள்கையை கடைபிடித்து வருகிறது. அதன்படி, ஐரோப்பா மற்றும் வட அமெரிக்கா உள்ளிட்ட கண்டங்களில் தனது சந்தையை விரிவாக்கம் செய்யும் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றது. அதனடிப்படையிலேயே, இந்தியாவின் வாகனச் சந்தையிலும் கிரேட் வால் நிறுவனம் நுழைய இருப்பதாக கருதப்படுகிறது.

கிரேட் வால் நிறுவனம் தனது தயாரிப்புகளை இந்தியாவில் விற்க துவங்கும் பட்சத்தில், இந்தியர்கள் மிக மலிவான விலைக் கார்களை வாங்கி, அதிகம் பயனடைய முடியும். மேலும், இந்த காரின் வருகையானது பல முன்னணி கார்களின் விற்பனையை பெரிதும் பாதிக்கும் என கூறப்படுகிறது.


Click it and Unblock the Notifications








