ரூ.7,000 கோடியில் குஜராத்தில் கார் ஆலை அமைக்க கிரேட் வால் நிறுவனம் திட்டம்!
ரூ.7,000 கோடி முதலீட்டில் குஜராத்தில் மிகப்பெரிய கார் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம். கூடுதல் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்தியாவில் வர்த்தகத்தை துவங்குவதற்கு சீன வாகன உற்பத்தி நிறுவனங்கள் அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அந்த வகையில், சீனாவை சேர்ந்த செயிக் வாகன குழுமம் எம்ஜி மோட்டார்ஸ் நிறுவனத்தின் மூலமாக இந்தியாவில் வர்த்தககத்தை துவங்கி இருக்கிறது. மேலும், குஜராத்தில் இருந்த ஜெனரல் மோட்டார்ஸ் கார் ஆலையையும் தன் வசப்படுத்தி எம்ஜி கார்களை உற்பத்தி செய்கிறது.

இந்த நிலையில், அடுத்ததாக சீனாவின் மிகப்பெரிய வாகன உற்பத்தி நிறுவனங்களில் ஒன்றாக விளங்கும், கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் இந்தியாவில் வர்த்தகத்தை துவங்க இருப்பதாக தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. செயிக் குழுமத்தை போன்றே, கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனமும் குஜராத்தில்தான் ஆலையை அமைக்க முடிவு செய்துள்ளது.

குஜராத் மாநிலம், சனந்த் தொழிற்பேட்டையில் இந்த கார் புதிய கார் ஆலைக்காக ரூ.7,000 கோடியை முதலீடு செய்ய இருக்கிறது கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனம். அதேநேரத்தில், குஜராத்தில் அமைக்கப்பட இருக்கும் கார் ஆலையில் எலெக்ட்ரிக் கார்களை உற்பத்தி செய்ய அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

கிரேட் வால் மோட்டார்ஸ் நிறுவனத்திற்காக ஏற்கனவே சனந்த் தொழிற்பேட்டை பகுதியில் நிலம் ஒதுக்கீடு செய்யப்பட்டு இருப்பதாக குஜராத் மாநில அரசு வட்டாரத் தகவல்கள் கூறுகின்றன. தற்போது இதற்கான இரண்டாம் கட்ட பேச்சுவார்த்தைகள் நடந்து வருவதாக இந்த பேச்சுவார்த்தை குழுவில் இருக்கும் பெயர் வெளியிட விரும்பாத உயர் அதிகாரி கூறி இருக்கிறார்.

குஜராத் மாநிலத்தை தேர்வு செய்வதன் மூலமாக இந்தியா மட்டுமின்றி, அருகாமையிலுள்ள துறைமுகம் வழியாக வெளிநாடுகளுக்கும் கார்களை ஏற்றுமதி செய்வதற்கான வாய்ப்பு இருக்கிறது. எனவே, இரண்டையும் மனதில் கொண்டு பெரிய அளவிலான முதலீட்டை இந்தியாவில் செய்ய கிரேட் வால் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாக தெரிகிறது.

அடுத்த ஆண்டு பிப்ரவரியில் நடைபெற இருக்கும் டெல்லி ஆட்டோ எக்ஸ்போவில் கிரேட் வால் நிறுவனமும் பங்கேற்க இருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. தனது தயாரிப்புகளை டெல்லி ஆட்டோ எக்ஸ்போ மூலமாக பிரபலப்படுத்தவும் திட்டமிட்டுள்ளது.
Source: TOI


Click it and Unblock the Notifications








