ஆசைகாட்டிவிட்டு இழுத்தடிப்பு செய்யும் மோடி அரசு... புதிய தகவலால் மக்கள் வேதனை...!
மின்வாகனங்களுக்கான ஜிஎஸ்டி வரியை 12 சதவீதத்தில் இருந்து 5 சதவீதமாக குறைக்க இருந்த, ஜிஎஸ்டி கவுன்சிலின் 36 வது கூட்டம் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைத்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பதிவில் காணலாம்.

உலகில் அனைத்து நாடுகளுக்கும், மிகப்பெரிய அச்சுறுத்தலாக எரிபொருளால் இயங்கும் வாகனங்களில் இருந்து வெளிவரும் மாசு இருக்கின்றது. இந்த நச்சு கலந்த புகை காற்றை மாசடையச் செய்வதுடன், அதனை சுவாசிக்கும் மக்களுக்கு மிகப்பெரிய பின்விளைவுகளை ஏற்படுத்தி வருகின்றது.

இதன்காரணமாக, உலக நாடுகள் அனைத்தும் பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்களுக்கு எதிராக போர்க்கொடி தூக்கி வருகின்றன. அதிலும், இந்தியாவில் அறிவிக்கப்படாத போர் எரிபொருள் வாகனங்களுக்கு எதிராக நடைபெற்று வருகின்றது.
அதேசமயம், எரிபொருள் வாகனங்களுக்கு மாற்றாக மின்வாகனங்களை பயன்பாட்டில் கொண்டு வரும் முயற்சிகளும் அதிதீவிரமாக மேற்கொள்ளப்பட்டு வருகின்றது.

அந்தவகையில், மின் வாகனங்களுக்கு பல்வேறு சிறப்பு சலுகைகள் வழங்கும் வகையில் பல்வேறு திட்டங்கள் நடைமுறைப்படுத்தப்பட்டு வருகின்றன. அந்தவகையில் கொண்டுவரப்பட்டதுதான், ஃபேம் திட்டம். இது, மின்வாகனங்களுக்கு மானியம் வழங்க உதவும்.

மின்வாகனங்கள் அதிக பலனைக் கொடுத்தாலும், அதன் விலையோ அனைவராலும் எட்ட முடியாத உயரத்தில் இருக்கின்றது. இதன்காரணமாகவே, மானியம் வழங்கும் ஃபேம் திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகின்றது.

இத்துடன், மலையளவு உள்ள மின் வாகனங்களின் விலையை கணிசமாக குறைக்கும் வகையில், மத்திய அரசு முயற்சி மேற்கொண்டு வருகின்றது. அந்தவகையில், தற்போது விதிக்கப்பட்டு வரும் 12 சதவிகித ஜிஎஸ்டி வரியை 5 சதவீதமாக குறைக்க அண்மையில் நடைபெற்ற மத்திய பட்ஜெட் கூட்டத்தில், நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில், அதுகுறித்து ஆலோசிக்க இன்று (வியாழக்கிழமை) 36வது ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டம் நடைபெற இருந்தது. ஆனால், அமைச்சர் நிர்மலா சீதாராமன் மக்களவை மற்றும் மாநிலங்களவையில் நடைபெற உள்ள கூட்டத்தில் பங்கேற்ப இருப்பதால் அந்த கூட்டம் இன்று நடைபெறவில்லை.

திவால் சட்ட விதிகளில் திருத்தம் கொண்டுவர வேண்டி இருப்பதால் அது தொடர்பான மாநிலங்களவை விவாத கூட்டத்தில் நிர்மலா சீதாராமன் பங்குபெற விரும்பியதாக கூறப்படுகின்றது. இதன்காரணமாகவே, இன்று நடைபெற இருந்த ஜிஎஸ்டி கவுன்சில் கூட்டத்திற்கு அவரால் தலைமை தாங்க முடியவில்லை.

மேலும், இன்று நடைபெறவிருந்த ஜிஎஸ்டி கூட்டத்தில் மின் வாகனங்களுக்கான ஜிஎஸ்டி விரி குறைப்பது, குறித்தான ஆலோசனை நடைபெற இருந்தது. குறிப்பிடத்தகுந்து. அதேசமயம், இந்த கூட்டத்தில் இதற்கான ஆலோசனை மட்டுமே நடைபெறவிருந்ததால், இந்த கூட்டத்தை ஒத்திவைத்துக்கொள்ளலாம் என அமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியதன் அடிப்படையில் அது தேதி குறிப்பிடமால் தள்ளிவைக்கப்பட்டுள்ளது.

அதேசமயம், மேற்கு வங்க நிதியமைச்சர் அமித் மித்ராவும், இதுகுறித்த கடிதம் ஒன்றை அண்மையில் மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு எழுதியிருந்தார். அதில், "மாநிலங்களில் பல்வேறு பிரச்னைகள் தலைவிரித்து ஆடிக்கொண்டிருக்க, மின்சார வாகனங்களுக்கான வரியை குறைப்பதற்காக மட்டுமே நடைபெறவிருக்கும் ஜிஎஸ்டி கூட்டம் அவசர அவசரமாக நிகழ்த்த வேண்டிய அவசியமில்லை" என கூறியிருந்தார்.

மேலும், மின்வாகனங்களுக்கு மட்டும் ஜிஎஸ்டி வரியை குறைப்பது, தற்போது சந்தையில் மற்ற வாகனங்களுக்கு மிகப்பெரிய பின்விளைவை ஏற்படுத்திவிடும். இதனால், ஆட்டோமொபைல் துறை பேரிழப்பைச் சந்திக்க நேரிடலாம் எனவும் அவர் கருத்து தெரிவித்திருந்தார்.

பெட்ரோல் மற்றும் டீசலால் இயங்கும் வாகனங்கள் மற்றும் ஹைபிரிட் வாகனங்களின் வரி விகிதம் ஏற்கனவே மிகப்பெரிய உயரத்தில் இருக்கின்றது. அதாவது, தற்போது விற்பனையில் இருக்கும் இந்த வாகனங்களுக்கான வரி 28 சதவீதமாக இருக்கின்றது. இத்துடன் செஸ் வரியும் விதிகப்படுவது குறிப்பிடத்தகுந்தது.
Source: auto.economictimes


Click it and Unblock the Notifications








