இனி வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம்: விவகாரம் வைரலானதால் போலீஸுக்கு அதிரடி உத்தரவு!
உயர்த்தப்பட்ட அபராதத் தொகைகுறித்த விவகாரம் வைரலானதை அடுத்து, வாகனங்களை நிறுத்தி பரிசோதிக்க வேண்டாம் என காவல்துறைக்கு போலீஸ் டைரக்டர் ஜெனரல் உத்தரவிட்டுள்ளார்.

அண்மைக் காலங்களாக அதிகரித்து வரும் வாகன விபத்துகளுக்கு, போக்குவரத்து விதிமீறல்களே முக்கிய காரணமாக இருக்கின்றன. இது நாளுக்கு நாள் அதிகரித்த வண்ணம் உள்ளன.
இதில் காயமடைவோரின் எண்ணிக்கையைவிட, இறப்போர்களின் எண்ணிக்கை மிக குறைவாக இருந்தாலும், அந்த இழப்பைப் பெறும் குடும்பத்தினருக்கு அது ஆறாத வடுவாக மாறிவிடுகின்றது.

எனவே, இதனைக் கட்டுபடுத்தும்விதமாக கடுமையான சட்டங்கள் பல இயற்றப்படுகின்றன. இருப்பினும் அவை பலனளிக்காத சூழலே நிலவுகின்றது.
ஆகையால், இந்த விவகாரத்தில் நிரந்தர தீர்வு காண வேண்டும் என்பதற்காக, மத்திய அரசு ஓர் அதிரடி அறிவிப்பை அண்மையில் வெளியிட்டிருந்தது.

அந்தவகையில், புதிய திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டம் அறிமுகம் செய்யப்பட்டது. இது, முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளிடம் இருந்து முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை பல மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகை செய்யப்பட்டுள்ளது.

இத்திட்டம், கடந்த 1ம் தேதி முதல் நாடு முழுவதும் அமலுக்கு வந்துள்ளது. ஆகையால், அந்தந்த மாநில போலீஸார் முறைகேட்டில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு, புதிதாக உயர்த்தப்பட்ட அபராதத் தொகையை வழங்கும் பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

அந்தவகையில், ஹரியானா மாநில போலீஸார், போக்குவரத்து விதிமீறலில் ஈடுபட்ட ஸ்கூட்டர் உரிமையாளருக்கு ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதத்தை விதித்தனர். இது நாடு முழுவதும் பெரும் அதிர்வலையை ஏற்படுத்தியது.
ஏனென்றால், அதன் உரிமையாளர் "இந்த ஸ்கூட்டரின் விலை வெறும் ரூ. 16 ஆயிரம்தான். ஆனால், போலீஸார் எனக்கு கொடுத்துள்ள அபராதமோ ரூ. 23,000" என வேதனை தெரிவித்திருந்தார்.

இச்சம்பவம், பொதுமக்கள் மத்தியில் மிகப் பெரிய களேபரத்தை ஏற்படுத்தியநிலையில், மிக வேகமாகவும் வைரலாகியது.
இந்நிலையில், விதிமீறலில் ஈடுபடாத வரை வாகன ஓட்டிகளை மடக்கி ஆய்வு செய்ய வேண்டாம் என ஹரியானா காவல்துறையினருக்கு, அம்மாநில போலீஸ் ஜெனரல் இயக்குநர் (டிஜிபி) உத்தரவிட்டுள்ளார்.

இதுகுறித்து ஹரியானா மாநிலத்தின் டிஜிபி கூறியதாவது, "ஹெல்மெட் அணியாமல் செல்லுதல், சிக்னலை மீறுதல் உள்ளிட்ட விதிமீறல்களை வாகன ஓட்டிகள் அரங்கேற்றம் செய்யாத வரை, அவர்களை மடக்கி ஆவணங்களை ஆய்வு செய்ய வேண்டாம்" என்றார்.

டெல்லியைச் சேர்ந்த தினேஷ் மதன் என்பவருக்குதான் ரூ. 23 ஆயிரத்திற்கான அபராதச் செல்லாணை குருகிராம் போலீஸார் வழங்கியிருந்தனர். அவ்வாறு, அவர் செய்த குற்றங்களாக போலீஸார் கூறியதை பின்வருமாறு பார்க்கலாம்...
உரிமம் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
பதிவு சான்றிதழ் இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
மூன்றாம் தரப்பு காப்பீடு இல்லாமல் வாகனம் ஓட்டுதல்
காற்று மாசுபாட்டை மீறுதல்
தலைக்கவசம் இல்லாதது

என பல்வேறு குற்றங்களில் அவர் ஈடுபட்டதாக கூறி போலீஸார் இத்தகைய பெருமளவிலான அபராதத்தை விதித்திருந்தனர். இச்சம்பவம், பெரும் வைரலானதை அடுத்து அம்மாநில போலீஸாருக்கு டிஜிபி இந்த புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார்.

ஹரியானா மாநில போலீஸார், புதிய உயர்த்தப்பட்ட அபராதத் தொகை விதியின்படி இதுவரை 343 பேருக்கு செல்லாண்களை வழங்கியிருப்பதாக தகவல்கள் தெரிவிக்கின்றன. இதன்மூலம் ரூ. 52.32 லட்சம் வசூல் செய்யப்பட்டுள்ளது. இது புதிய திட்டம் அறிமுகம் செய்யப்பட்ட வெறும் நான்கே நாட்களில் கிடைத்த தொகையின் விவரமாகும்.

போக்குவரத்து தொடர்பான பல்வேறு குற்றங்களைத் தடுக்கும் விதமாக, கடுமையான தண்டனை மற்றும் அதிக அபராதம் விதிக்க இச்சட்டம் கொண்டுவரப்பட்டுள்ளது. மேலும், விபத்தில் மரணமடைந்தவரின் குடும்பத்திற்கு ரூ. 5 லட்சம் இழப்பீடும் மற்றும் வாகன விபத்தில் கடுமையாக பாதிக்கப்பட்டவர்களுக்கு ரூ. 2.5 லட்சம் வழங்கவும் வழிவகைச் செய்யப்பட்டுள்ளது.

அதேசமயம், இந்த புதிய திட்டம் போக்குவரத்து விதிமீறல்களே இல்லாத ஓர் இந்தியாவை உருவாக்கும் வகையில் மத்திய அரசு கொண்டு வந்துள்ளது. இதற்கு ஒரு சில மாநிலங்கள் எதிர்ப்பு தெரிவித்தாலும், பல மாநிலங்கள் அதனை நடைமுறைக்குக் கொண்டு வரும் முயற்சியில் களமிறங்கியுள்ளன.


Click it and Unblock the Notifications








