இந்த லேனை பயன்படுத்தினால் ரூ. 5 ஆயிரம் அபராதம்... எச்சரிக்கும் காவல்துறை!
போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்கியிருக்கும் காவல்துறையினர், ஓர் புதிய அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். அதில், குறிப்பிடப்பட்ட லேனை மாற்றி பயன்படுத்தினால் ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்படும் என எச்சரிக்கை விடுத்துள்ளது. இதுகுறித்த கூடுதல் தகவலை இந்த பிதிவில் காணலாம்.

சாலைகளில் விபத்தை உருவாக்கும் முக்கிய காரணங்களில் ஒன்றாக போக்குவரத்து விதிமீறல்கள் இருக்கின்றன. இது சமீபகாலமாக அதிகரித்த வண்ணம் இருக்கின்றது. இதனைக் கட்டுபடுத்தும் விதமாக மத்திய மற்றும் மாநில அரசுகள் பல்வேறு முயற்சிகளை எடுத்து வருகின்றன.

அந்தவகையில், மோட்டார் வாகன சட்டத்தில் பல்வேறு மாற்றங்களைச் செய்து மத்திய அரசு அண்மையில் அறிமுகம் செய்தது. இந்த புதிய சட்டம், முன்னதாக வசூலிக்கப்பட்டு வந்த அபராதத் தொகையை பன் மடங்கு உயர்த்தி வசூலிக்க வழிவகைச் செய்யும்.

இவ்வாறு, போக்குவரத்து விதிமீறலுக்கு எதிராக போர் கொடி தூக்கப்பட்டு வரும்நிலையில், மஹாராஷ்டிரா மாநிலத்தின் போக்குவரத்துத்துறை, தன் பங்காக அதிரடி அறிவிப்பு ஒன்றை வெளியிட்டுள்ளது.

அந்த அறிவிப்பில், நகர சாலைகள் மற்றும் மாநிலத்தின் அனைத்து தேசிய நெடுஞ்சாலைகளிலும் முதலாவது வலது பக்க பாதையை கனரக வாகனங்கள் பயன்படுத்தக் கூடாது என அறிவித்துள்ளது. மீறினால், அபராதமாக ரூ. 5 ஆயிரம் வசூலிக்கப்பட இருப்பதாக அது தெரிவித்துள்ளது.

கனரக வாகனங்கள் சாலையின் வலது பக்க லேனை பயன்படுத்துவதால் மற்ற இலகு ரக வாகனங்கள் முன்னேறிச் செல்வதில் சிக்கல் ஏற்படுகின்றது. மேலும், சில சமயங்களில் விபத்து உள்ளிட்ட பல்வேறு பிரச்னைகள் உருவாக இது வழிவகை செய்கின்றது. ஆகையால், இதனை தவிர்க்கும் விதமாக அம்மாநில போக்குவரத்துத்துறை இந்த அதிரடி நடவடிக்கையை மேற்கொள்ள உள்ளது.

தற்போது வரை இந்த வீதிமீறலுக்கு ரூ. 200 மட்டுமே வசூலிக்கப்பட்டு வருகின்றது. புதிய மோட்டார் வாகன திருத்த சட்டத்தால் அது ரூ. 1,000ஆக மாற்றப்பட உள்ளது. ஆனால், இவற்றைக் காட்டிலும் அதிகமாக, ரூ. 5,000 வரை வசூலிக்க இருப்பதாக மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்து காவல் துறை அறிவித்துள்ளது.

முன்னதாக, கடந்த 15ம் தேதிகூட மஹாராஷ்டிரா மாநில போக்குவரத்துத்துறை ஓர் அறிவிப்பை வெளியிட்டிருந்தது. அதில், மும்பை-புனே எக்ஸ்பிர்ஷ்வே மற்றும் மும்பை-அஹமதாபாத் நெடுஞ்சாலை ஆகிய சாலைகளில் கனரக வாகங்கள் வலது பக்க சாலையில் செல்லக்கூடாது என அறிவித்திருந்தது. ஆனால், அதை முறையாக யாரும் கடைபிடிக்காத காரணத்தால் இத்தகைய நடவடிக்கையில் அது இறங்கியுள்ளது.

அண்மைக் காலங்களாக நாட்டிற்கு மிகப்பெரிய அச்சுறுத்தலாக போக்குவரத்து விதிமீறல்களும், அதனால் உருவாகும் பின்விளைவுகளும் இருந்து வருகின்றன. இதன்காரணமாக, மத்திய மற்றும் மாநில அரசுகள் இதற்கு எதிராக இரும்பு கரங்களைக் கொண்டு அடக்க திட்டம் தீட்டி வருகின்றது.

அதனடிப்படையிலேயே அண்மையில் மத்திய அரசு, திருத்தப்பட்ட மோட்டார் வாகன சட்டத்தை அறிமுகம் செய்தது. இத்துடன், சில மாநில அரசுகளும் போக்குவரத்து விதிமீறல்களில் ஈடுபடும் வாகன ஓட்டிகளுக்கு கடுமையான தண்டனைகளை வழங்கி வருகின்றது.

அந்தவகையில், அண்மையில் தெலங்கானா மாநிலத்தின் ஹைதராபாத் நகர போலீஸார், தவறான பாதையில் வந்த ஆறு வாகன ஓட்டிகளுக்கு இரண்டு நாள் சிறை தண்டனை வாங்கிக் கொடுத்தனர்.

பொதுவாக, இம்மாதிரியான போக்குவரத்து விதிமுறை மீறல்களுக்கு மோட்டார் வாகன சட்டம், 119 மற்றும் 177 பிரிவுகளின் கீழ் ரூ. 1,100 அபராதம் வழங்கப்படுவது வழக்கம். ஆனால், வாகன ஓட்டிகள் முறையாக விதிகளை கடைபிடிப்பதை ஊக்குவிக்கும் வகையில், ஹைதராபாத் 14வது சிறப்பு நீதிமன்றம் இத்தகைய தண்டனை வழங்கியது.


Click it and Unblock the Notifications