குத்தகை திட்டத்தை அடுத்து சிறப்பு சலுகை திட்டம்: ஹோண்டா அதிரடியால் போட்டி நிறுவனங்கள் கலக்கம்!!!
பிரபல ஹோண்டா நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில மாடல்களுக்கு மட்டும் ரூ. 4 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.

ஜப்பானை மையமாகக் கொண்டு இயங்கும் ஹோண்டா நிறுவனம், அதன் குறிப்பிட்ட சில மாடல் கார்களுக்கு ரூ. 4 லட்சம் வரை சிறப்பு தள்ளுபடி வழங்க இருப்பதாக அறிவித்துள்ளது.
இந்த சிறப்பு சலுகை திட்டத்தை வரும் விழாக்காலங்களை முன்னிட்டு ஹோண்டா நிறுவனம் வெளியிட்டுள்ளது. ஆனால், இச்சலுகை இம்மாதம் 30ம் தேதி வரை மட்டுமே கிடைக்கும் என தெரிவித்துள்ளது.

'தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்' என்ற பெயரில் தொடங்கப்பட்டுள்ள இத்திட்டத்தின்கீழ், விலை தள்ளுபடி, கூட்டப்பட்ட வாரண்டி, எக்ஸ்சேஞ்ச் போனஸ் மற்றும் சிறப்பு மெயின்டனென்ஸ் சேவை உள்ளிட்ட சலுகைகளை ஹோண்டா நிறுவனம் வழங்க இருக்கின்றது.
அதேசமயம், இந்த சலுகைகள் அனைத்தும் ஹோண்டா நிறுவனத்தின் குறிப்பிட்ட மாடல்களுக்கு மட்டுமே வழங்கப்பட உள்ளது.

அவ்வாறு ஹோண்டா அமேஸ், ஹோண்டா ஜாஸ், ஹோண்டா டபிள்யூஆர்-வி, ஹோண்டா சிட்டி, ஹோண்டா பிஆர்-வி, ஹோண்டி சிவிக், ஹோண்டா சிஆர்-வி ஆகிய மாடல்களுக்கு மட்டும் 'தி கிரேட் ஹோண்டா ஃபெஸ்ட்' திட்டத்தின்கீழ் சிறப்பு சலுகைகள் வழங்கப்பட உள்ளன.
இதனை, நாடு முழுவதும் உள்ள ஹோண்டா டீலர்கள், மேற்கூறிய மாடல்களில் ஏதேனும் ஒன்றை வாங்கும் வாடிக்கையாளர்களுக்கு வழங்க இருக்கின்றன.

இதில், ஹோண்டா அமேஸ் மாடலுக்கு ரூ. 42 ஆயிரம் வரை சலுகை வழங்கப்பட உள்ளது. அதேபோன்று, ஹோண்டா ஜாஸ் மாடலுக்கு ரூ. 50 ஆயிரமும், ஹோண்டா டபிள்யூஆர்-வி மாடலுக்கு ரூ. 45 ஆயிரமும், ஹோண்டா சிட்டி மாடலுக்கு ரூ. 62 ஆயிரமும், ஹோண்டா பிஆர்-வி மாடலுக்கு ரூ. 1.10 லட்சமும், ஹோண்டா சிவிக் ரூ. 2.50 ஆயிரமும், ஹோண்டா சிஆர்-வி மாடலுக்கு ரூ. 4 லட்சம் வரையிலும் சிறப்பு சலுகை வழங்கப்பட இருப்பதாக ஹோண்டா அறிவித்துள்ளது.

இதுகுறித்து ஹோண்டா நிறுவனத்திற்கான இந்திய அதிகாரி ராஜேஷ் கோயல் கூறியதாவது,
"விழாக் காலத்தில் எங்களின் வாடிக்கையாளர்களுக்கு மிகச் சிறந்த மற்றும் மகிழ்ச்சியான அனுபவத்தைப் பெறும் விதமாக இத்தகைய அறிவிப்பை வெளியிட்டுள்ளோம். இந்த சலுகை மூலம் வாடிக்கையாளர்கள் அதிகளவிலான பலனை அடைய இருக்கின்றனர். அதற்கேற்ப வகையில், அனைவரையும் கவருகின்ற மாதிரியான திட்டத்தை அறிமுகம் செய்துள்ளோம்" என்றார்.

ஹோண்டா நிறுவனம், இந்த சிறப்பு சலுகை திட்டத்தில் கூடுதலாக ஸ்பெஷல் திட்டத்தையும் அறிவித்துள்ளது. அதாவது, ஹோண்டா நிறுவனத்தின் தயாரிப்புகளை ஏற்கனவே பயன்படுத்தி வரும் வாடிக்கையாளர்களுக்கு லாயல்டி போனஸ் என்ற பெயரில் கூடுதல் சலுகையை வழங்க இருக்கின்றது.

அத்துடன், பழைய ஹோண்டா கார்களை எக்ஸ்சேஞ்ச் வாடிக்கையாளர்களுக்கும் கூடுதல் சிறப்பு சலுகையை வழங்க அது திட்டமிட்டுள்ளது.
இதற்கு குறிப்பிட்ட ஆவணங்களை மட்டும் வாடிக்கையாளர்கள் சமர்பிக்க வேண்டும்.

இதேபோன்று, இந்நிறுவனம் அதன் வாடிக்கையாளர்களுக்கு உடனடி நிதியுதவியை வழங்கும் வகையில், குறிப்படிட்ட வங்கிகளுடன் கை கோர்த்துள்ளது. ஆகையால், எளிய மற்றும் குறைந்த அளவிலான வட்டி விகித்தில் கார்களை விற்பனைச் செய்யவும் ஹோண்டா நடவடிக்கை மேற்கொண்டுள்ளது.

முன்னதாகக்கூட ஹோண்டா நிறுவனம், மக்களைக் கவரும் வகையில் ஓர் குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்திருந்தது.
இத்திட்டத்தின்மூலம், ஹோண்டா சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி ஆகிய மூன்று கார்களை மட்டும் ஓரிக்ஸ் என்ற தனியார் நிறுவனத்துடன் இணைந்து அது குத்தகை வழங்க இருப்பதாக அது அண்மையில் அறிவித்திருந்தது.

ஹோண்டாவின் இந்த பிரத்யேக திட்டத்தை கார்ப்பரேட் நிறுவனங்கள், மாதச் சம்பளம் பெறும் நபர்கள், தொழிலதிபர்கள், தொழில் முனைவோர் உள்ளிட்டவர்கள் இதிட்டத்தின் கீழ் ஹோண்டாவின் மூன்று கார்களையும் குத்தகை அடிப்படையில் கட்டணம் செலுத்தி பயன்படுத்த முடியும். இதற்கு குறிப்பிட்ட ஆவணங்களை மட்டுமே ஹோண்டா வாடிக்கையாளர்களிடம் இருந்து எதிர்பார்க்கின்றது.

வாகன சந்தை பெரும் சரிவுப் பாதையை நோக்கிச் சென்றுக் கொண்டிருக்கும் வேலையில், ஹோண்டா நிறுவனத்தின் இந்த பிரத்யேகமான நடவடிக்கை, அதன் விற்பனை விகிதத்தை கணிசமாக உயர்த்தும் என நம்பப்படுகின்றது.


Click it and Unblock the Notifications








