கார்களுக்கு 10 ஆண்டுகள் வாரண்டி திட்டம்... ஹோண்டா அறிமுகம்
இந்திய கார் மார்க்கெட்டில் முதல்முறையாக 10 ஆண்டுகள் வாரண்டி திட்டத்தை ஹோண்டா கார் நிறுவனம் அறிமுகம் செய்துள்ளது. இதுகுறித்த விரிவானத் தகவல்களை இந்த செய்தியில் காணலாம்.

இந்திய கார் சந்தையில் முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு கடும் சந்தைப் போட்டி நிலவுகிறது. தங்களது தயாரிப்புகளின் மதிப்பை கூட்டுவதற்காக கார் நிறுவனங்கள் பல அதிரடி திட்டங்களை அறிவித்து வருகின்றன. அதன்படி, அதிகபட்ச வாரண்டி காலம், இலவச முதலாமாண்டு காப்பீடு திட்டம், தள்ளுபடிகளை அறிவித்து வருகின்றன.

இந்த நிலையில், ஹோண்டா கார் நிறுவனம் அதிரடியாக தனது கார்களுக்கு 10 ஆண்டுகளுக்கான வாரண்டி திட்டத்தை அறிமுகப்படுத்தி உள்ளது. இந்த திட்டம் Anytime Warranty என்ற பெயரில் குறிப்பிடப்படுகிறது. ஹோண்டா ஜாஸ், அமேஸ், சிட்டி, டபிள்யூஆர்வி மற்றும் பிஆர்வி கார்களுக்கு இந்த வாரண்டி திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

இந்த எனிடைம் வாரண்டி திட்டம் அதிகபட்சமாக 10 ஆண்டுகள் அல்லது 1.20 லட்சம் கிலோமீட்டர் தூரத்திற்கு வழங்கப்படுகிறது. ஏற்கனவே ஸ்டான்டர்டு வாரண்டி மற்றும் நீட்டிக்கப்பட்ட காலத்திற்கான வாரண்டி திட்டங்கள் காலாவதியாகி இருந்தாலும் இந்த திட்டத்தை வாடிக்கையாளர்கள் பெற முடியும்.

ஆனால், வாரண்டி காலம் காலாவதியாகி இருந்தால் கூடுதல் கட்டணத்தை செலுத்தி இந்த வாரண்டி திட்டத்தை பெற்றுக் கொள்ளலாம். இந்த திட்டம் அதிகபட்சமாக 7 ஆண்டுகள் பழமையான கார்கள் அல்லது ஒரு லட்சம் கிமீ தூரம் வரை ஓடிய கார்களுக்கு மட்டுமே பொருந்தும்.

இந்த எனிடைம் வாரண்டி திட்டத்தின் கீழ் கூடுதலாக ஓர் ஆண்டு அல்லது 20,000 கிமீ தூரத்திற்கான வாரண்டி வழங்கப்படும். எனவே, இந்த வாரண்டி திட்டம் பழைய ஹோண்டா கார்களுக்கும் பொருந்தும் என்பதே இதன் சிறப்பாக இருக்கிறது.

தற்போது ஹோண்டா கார்களுக்கு ஸ்டான்டர்டு வாரண்டி காலமாக 3 ஆண்டுகளும், 4வது மற்றும் 5வது ஆண்டுகளுக்கு வாடிக்கையாளர்கள் விருப்பத்தின் பேரில் கூடுதல் காலத்திற்கான வாரண்டியும் கட்டணத்துடன் பெற்றுக் கொள்ள முடியும்.

சிறப்பான சர்வீஸ் ரெக்கார்டு உள்ள வாடிக்கையாளர்களுக்கு குறைவான கட்டணத்தில் இந்த வாரண்டியை பெற முடியும். பிரேக் இன் வாரண்டி வைத்திருப்பவர்களுக்கு கட்டணம் சற்று கூடுதலாக இருக்கும் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

இந்த வாரண்டி திட்டத்தின் கீழ் கட்டணமில்லா பழுது நீக்கும் சேவை அல்லது உதிரிபாகங்களை இலவசமாக பெற்றுக் கொள்ளும் வாய்ப்பை வழங்கும். இந்த வாரண்டியை அனைத்து ஹோண்டா டீலர்களிலும் பெற முடியும். வாடிக்கையாளர்களின் கார் மற்றும் ஆவணங்கள் சரிபார்ப்புக்கு பின் இந்த திட்டத்தை பெற முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் இலவசமாக வாரண்டி வழங்கப்படும் உதிரிபாகங்கள் மற்றும் கட்டணங்களை வாடிக்கையாளர்கள் குறிப்பேடு மூலமாக தெரிந்து கொள்ள முடியும். மேலும், பழுது ஏற்பட்ட உடன் அருகிலுள்ள ஹோண்டா டீலரை தொடர்பு கொண்டால் இந்த திட்டத்தின் கீழ் பழுது சரிசெய்து கொள்ளப்படும். ஆனால், முறையான ஆய்வுக்கு பிறகே, கட்டணமில்லா இந்த சேவையை பெறுவதற்கான வாய்ப்பை பெற முடியும்.

மேலும், ஹோண்டா கார் உரிமையாளர் கையேட்டில் கொடுக்கப்பட்டு இருப்பது போன்று, சரியான இடைவெளிகளில் காருக்கு சர்வீஸ் செய்து இருப்பதும் அவசியமானதாக தெரிவிக்கப்பட்டு இருக்கிறது. அப்போதுதான் இந்த வாரண்டியை பெற தகுதியை பெற முடியும். இந்த வாரண்டி திட்டத்தில் கார் சிறப்பாக பராமரிக்கப்படும் வாய்ப்பு இருப்பதால், கூடுதல் மறுவிற்பனை மதிப்பை பெற இயலும்.
Source: Team bhp


Click it and Unblock the Notifications








