புதிய ஹோண்டா சிட்டி கார் விரைவில் இந்தியாவில் அறிமுகம்!
ஹோண்டா சிட்டி பிஎஸ்-6 பெட்ரோல் மாடல் விரைவில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பது உறுதியாகி இருக்கிறது.

மிட்சைஸ் செடான் கார் மார்க்கெட்டில் ஹோண்டா சிட்டி கார் மிகச் சிறந்த தேர்வாக இருந்து வருகிறது. இந்த நிலையில், சந்தைப் போட்டி மற்றும் புதிய மாசு உமிழ்வு விதிகளுக்கு நிகரான எஞ்சின் தேர்வுகளுடன் புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது.

கடந்த சில மாதங்களாக இந்த புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் இந்திய மண்ணில் வைத்து சாலை சோதனைகளுக்கு உட்படுத்தப்பட்டு வந்தது. இந்த நிலையில், புதிய ஹோண்டா சிட்டி காரின் பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலுக்கு பிஎஸ்-6 சான்றை பெற்றிருக்கிறது.

தற்போது வெளியான இதற்கான ஆவணங்களின்படி, புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி காரின் பிஎஸ்-6 பெட்ரோல் எஞ்சின் மற்றும் மேனுவல் கியர்பாக்ஸ் பொருத்தப்பட்ட மாடலானது எஸ்வி, வி, விஎக்ஸ் மற்றும் இசட்எக்ஸ் ஆகிய 4 வேரியண்ட்டுகளில் வர இருக்கிறது.

தற்போது விற்பனையில் உள்ள இதே பெட்ரோல் மேனுவல் கியர்பாக்ஸ் வேரியண்ட்டுகளானது ரூ.10.03 லட்சம் முதல் ரூ.13.09 லட்சம் வரையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் விற்பனை செய்யப்படுகிறது. இந்தநிலையில், விரைவில் வரும் பிஎஸ்-6 எஞ்சின் பொருத்தப்பட்ட மாடலின் விலை அதிகபடச்மாக 10 சதவீதம் அதிகரிக்கப்படும் வாய்ப்புள்ளது.

அதேநேரத்தில், ஹோண்டா சிட்டி காரின் 1.5 லிட்டர் ஐ-டிடெக் டீசல் எஞ்சின் மாடலானது இதுவரை பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கான சான்றை இதுவரை பெறவில்லை என்பதும், ஆட்டோமேட்டிக் மாடலுக்கும் இதுவரை பிஎஸ்-6 சான்று பெறவில்லை என்றும் தெரிகிறது.

தற்போது இருக்கும் பிஎஸ்-4 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையான 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் அதிகபட்சமாக 117 பிஎச்பி பவரை வெளிப்படுத்தும் நிலையில், பிஎஸ்-6 மாடலானது 117.6 பிஎச்பி பவரை அளிக்கும் திறன் வாய்ந்ததாக இருக்கிறது. டார்க் திறன் இப்போது உள்ள அளவே இருக்கும்.

தற்போது வழங்கப்படும் 1.5 லிட்டர் பிஎஸ்-4 டீசல் மாடலானது 99 பிஎச்பி பவரையும், 200 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். இந்த மாடலில் 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் தேர்வு மட்டும் வழங்கப்படுகிறது. எனினும், பிஎஸ்-6 டீசல் மாடலிலும் ஹோண்டா சிட்டி வரும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

புதிய ஹோண்டா சிட்டி கார் உருவத்தில் பெரிதாக மாறி இருப்பதுடன், எல்இடி ஹெட்லைட்டுகள், பகல்நேர விளக்குகள், எல்இடி டெயில் லைட்டுகள் உள்ளிட்ட அம்சங்களுடன் வர இருக்கிறது. 16 அங்குல டைமண்ட் கட் அலாய் வீல்கள் பொருத்தப்பட்டு இருக்கும்.

இந்த காரில் 7 அங்குல தொடுதிரையுடன் கூடிய இன்ஃபோடெயின்மென்ட் சிஸ்டம், எலெக்ட்ரிக் சன்ரூஃப், லெதர் அப்ஹோல்ஸ்ட்ரி, மல்டி ஃபங்ஷன் ஸ்டீயரிங் வீல், சில்வர் அலங்கார பாகங்கள் ஆகியவை இடம்பெற்றுள்ளன. ஆட்டோமேட்டிக் ஹெட்லைட், ஆட்டோமேட்டிக் வைப்பர்கள் உள்ளிட்ட வசதிகளும் வழங்கப்படும்.

புதிய ஹோண்டா சிட்டி காரில் ஓட்டுனர், முன் இருக்கை பயணிக்கான டியூவல் ஏர்பேக்குகள், சைடு ஏர்பேக்குகள், கர்டெயின் ஏர்பேக்குகள் ஆகியவை இடம்பெற இருக்கின்றன. மொத்தத்தில் அதிக பாதுகாப்பு மற்றும் சிறப்பம்சங்களுடன் முற்றிலும் புதிய மாடலாக வர இருக்கிறது.

புதிய தலைமுறை ஹோண்டா சிட்டி கார் அடுத்த மாதம் தாய்லாந்தில் உலகளாவிய அளவில் அறிமுகம் செய்யப்படும் என்று தகவல்கள் கூறுகின்றன. இதைத்தொடர்ந்து, அடுத்த ஆண்டு துவக்கத்தில் இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வரப்பட இருக்கிறது. மாருதி சியாஸ், ஹூண்டாய் வெர்னா, ஸ்கோடா ரேபிட் ஆகிய கார்களுக்கு கடும் போட்டியை வழங்கும்.


Click it and Unblock the Notifications








