சூறாவளியாய் சுழன்று அடிக்கும் சிவிக்... மார்க்கெட்டில் இருந்து காணாமல் போகும் போட்டியாளர்கள்...
விற்பனைக்கு அறிமுகம் செய்யப்பட்ட முதல் மாதத்திலேயே போட்டியாளர்களை திகைக்க வைத்துள்ளது புதிய ஹோண்டா சிவிக். இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஸ்கோடா ஆக்டேவியா (Skoda Octavia), டொயோட்டா கரொல்லா அல்டிஸ் (Toyota Corolla Altis) மற்றும் ஹூண்டாய் எலான்ட்ரா (Hyundai Elantra) உள்ளிட்ட கார்களுக்கு போட்டியாக, ஆல் நியூ சிவிக் காரை ஹோண்டா நிறுவனம் (Honda Civic), கடந்த மார்ச் 7ம் தேதி இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஆனால் அதற்கு முன்னதாக கடந்த பிப்ரவரி 14ம் தேதி முதலே சிவிக் காருக்கு ஹோண்டா நிறுவனம் முன்பதிவுகளை ஏற்க தொடங்கி விட்டது.

மிக நீண்ட இடைவெளிக்கு பிறகு மீண்டும் மார்க்கெட்டில் களம் கண்டுள்ள புதிய ஹோண்டா சிவிக் காருக்கு இந்திய வாடிக்கையாளர்கள் அமோக ஆதரவை வழங்கி வருகின்றனர். இதனால் முன்பதிவு தொடங்கப்பட்ட முதல் 40 நாட்களிலேயே, சுமார் 2,400 முன்பதிவுகளை ஹோண்டா சிவிக் வாரி குவித்தது. இதில், ஆச்சரியம் அளிக்கும் விஷயம் என்னவென்றால், போட்டியாளர்களை காட்டிலும் ஹோண்டா சிவிக் காரின் விலை அதிகம் என்பதுதான்.

ஹோண்டா சிவிக் காரின் பேஸ் வேரியண்ட்டினுடைய விலையே 17.96 லட்ச ரூபாய். அதே சமயம் இதன் டாப் எண்ட் வேரியண்ட்டினுடைய விலை 22.29 லட்ச ரூபாய். ஹோண்டா சிவிக் காரின் போட்டியாளர்களான ஸ்கோடா ஆக்டேவியா காரின் பேஸ் வேரியண்ட் விலை 15.99 லட்ச ரூபாயாகவும், டொயோட்டா கரொல்லா அல்டிஸ் காரின் பேஸ் வேரியண்ட்டினுடைய விலை 15.7 லட்ச ரூபாயாகவும், ஹூண்டாய் எலான்ட்ரா காரின் பேஸ் வேரியண்ட்டினுடைய விலை 13.81 லட்ச ரூபாயாகவும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இவை அனைத்தும் எக்ஸ் ஷோரூம் விலையாகும்.

ஹோண்டா சிவிக் வருகைக்கு முன்பு வரை டொயோட்டா கரொல்லா அல்டிஸ்தான் இந்த செக்மெண்ட்டில் அதிகம் விற்பனையாகும் செடானாக இருந்து வந்தது. ஆனால் விற்பனைக்கு அறிமுகமான முதல் மாதத்திலேயே, போட்டியாளர்களை தலை தெறிக்க ஓட விட்டுள்ளது ஹோண்டா சிவிக். கடந்த மார்ச் மாதத்தில் ஹோண்டா நிறுவனம் 2,291 சிவிக் கார்களை விற்பனை செய்துள்ளது. அதே சமயம் ஸ்கோடா நிறுவனம் 265 ஆக்டேவியா கார்களையும், டொயோட்டா நிறுவனம் 229 கரொல்லா அல்டிஸ் கார்களையும், ஹூண்டாய் நிறுவனம் 86 எலான்ட்ரா கார்களையும் மட்டுமே விற்பனை செய்துள்ளன.

ஒட்டுமொத்தமாக இந்த செக்மெண்ட்டில் 2,871 கார்கள் விற்பனையாகியுள்ளன. இதில், ஹோண்டா சிவிக் காரின் பங்களிப்பு மட்டும் 80 சதவீதம் என்பது ஆச்சரியத்தை ஏற்படுத்துகிறது. அதுவும் மார்க்கெட்டில் புதிதாக அறிமுகம் செய்யப்பட்ட அதே சமயம் விலை அதிகமான ஒரு கார் இப்படி ஒரு சாதனையை நிகழ்த்துவது அரிதான விஷயமாகவே பார்க்கப்படுகிறது. ஆனால் 2,291 ஹோண்டா நிறுவனம் டிஸ்பாட்ச் (Dispatch) செய்த சிவிக் கார்களின் எண்ணிக்கைதான். அதாவது தொழிற்சாலையில் இருந்து அனுப்பி வைக்கப்பட்ட சிவிக் கார்களின் எண்ணிக்கை. இதில், டீலர்ஷிப்களில் டெஸ்ட் டிரைவ் வாகனங்களாக பயன்படுத்தப்படும் கார்களும், காட்சிக்காக வைக்கப்பட்டுள்ள கார்களும் அடங்கும். எனவே வரும் மாதங்களில் ஹோண்டா சிவிக் காரின் தெளிவான விற்பனை நிலவரம் தெரியவரும்.

இதனிடையே ஆல் நியூ ஹோண்டா சிவிக் காரானது, பெட்ரோல் மற்றும் டீசல் என இரண்டு இன்ஜின் ஆப்ஷன்களுடனும் கிடைக்கிறது. ஹோண்டா நிறுவனம் புதிய சிவிக் காரில், 1.8 லிட்டர், நேச்சுரலி அஸ்பிரேட்டட், 4 சிலிண்டர் பெட்ரோல் இன்ஜினை வழங்குகிறது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 139 பிஎச்பி பவர் மற்றும் 174 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது. அதே சமயம் புதிய சிவிக் காரில், 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் ஆப்ஷனும் வழங்கப்படுகிறது. இந்திய மார்க்கெட்டில் விற்பனை செய்யப்படும் ஆல் நியூ ஹோண்டா சிஆர்-வி (Honda CR-V) காரிலும் இதே இன்ஜின்தான் பொருத்தப்பட்டுள்ளது. இந்த இன்ஜின் அதிகபட்சமாக 118 பிஎச்பி பவர் மற்றும் 300 என்எம் டார்க் திறனை உருவாக்க கூடியது.


Click it and Unblock the Notifications








