ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்திய வருகை விபரம்!
ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருப்பது குறித்த தகவல்கள் வெளியாகி இருக்கின்றன. அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

ஹோண்டா நிறுவனம் எஸ்யூவி மார்க்கெட்டில் முக்கிய இடத்தை பிடிப்பதற்கான முயற்சிகளில் ஈடுபட்டுள்ளது. இந்தியாவிற்கு சரியான மாடலை தேர்வு செய்வதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது. வெளிநாடுகளில் உள்ள எச்ஆர்வி வெஸல் எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக நீண்ட காலமாக தகவல்கள் உலா வருகின்றன.

ஆனால், அந்த தகவல்களை ஹோண்டா நிறுவனம் மறுத்திருந்தது. இந்த சூழலில், ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவியானது இந்தியாவில் அறிமுகம் செய்ய இருப்பதாக மீண்டும் பரபரப்பு கிளம்பி இருக்கிறது. டீம் பிஎச்பி தளத்தின் உறுப்பினர் ஒருவர், எச்ஆர்வி எஸ்யூவியை இந்திய டீலர்களுக்கு காண்பித்து சாதக, பாதகங்களை ஆய்வு செய்துள்ளதாக தெரிவித்துள்ளார். டெல்லியில் இதற்கான நிகழ்ச்சி நடந்துள்ளது.

மேலும், இந்த எஸ்யூவியை வரும் பண்டிகை காலத்தில் அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அவர் கூறி இருக்கிறார். இதனால், ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி இந்திய வருகை கிட்டத்தட்ட உறுதியாகி இருக்கிறது.

புதிய எச்ஆர்வி எஸ்யூவியை உதிரிபாகங்களாக இறக்குமதி செய்து இந்தியாவில் அசெம்பிள் செய்வதற்கும் ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. மேலும், தற்போதைய மாடல் அறிமுகம் செய்யப்பட்டு 6 ஆண்டுகள் ஆகிறது. இந்த நிலையில், புதிய தலைமுறை மாடல் இந்தியாவில் அறிமுகம் செய்யப்படுவதற்கும் வாய்ப்புகள் உள்ளன.

புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி ரூ.15 லட்சம் முதல் ரூ.20 லட்சம் இடையிலான விலையில் அறிமுகம் செய்யப்படும் வாய்ப்புள்ளது. இந்த மாடலில் 1.5 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் மற்றும் 1.6 லிட்டர் டீசல் எஞ்சின் ஆப்ஷன்கள் இடம்பெற்றுள்ளன.

டாடா ஹாரியர், ஜீப் காம்பஸ் உள்ளிட்ட மாடல்களுடன் இந்த புதிய எஸ்யூவி மாடல் போட்டி போடும். இந்த ரகத்தில் பல புதிய மாடல்கள் வருவதுடன், சந்தை வாய்ப்பு இருப்பதையும் மனதில் கொண்டு தனது மனதை ஹோண்டா மாற்றிக் கொண்டுள்ளதாக தெரிகிறது.


Click it and Unblock the Notifications








