ஹோண்டா எச்ஆர்வி இந்திய அறிமுக திட்டம் ரத்தானது... காரணம் இதுதான்!
ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டம் கைவிடப்பட்டுள்ளது. இதற்கான காரணம் மற்றும் கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

அனல் பறக்கும் இந்தியாவின் மிட்சைஸ் எஸ்யூவி மார்க்கெட்டில் புத்தம் புதிய எச்ஆர்வி எஸ்யூவியை அறிமுகம் செய்வதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டது. மேலும், இந்திய சாலைகளில் வைத்து இந்த புதிய க்ராஸ்ஓவர் ரக எஸ்யூவி கார் சோதனை ஓட்டங்கள் நடத்தப்பட்டன. ஸ்பை படங்களும் வெளியாகி ஹோண்டா கார் பிரியர்களின் ஆவலைத் தூண்டி வந்தது.

பண்டிகை காலத்தில் புதிய ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவி விற்பனைக்கு கொண்டு வரப்பட இருப்பதாக தகவல்கள் வெளியாகின. அதாவது, அடுத்த மாதம் இந்தியாவில் இந்த புதிய கார் விற்பனைக்கு எதிர்பார்க்கப்பட்டது.

டெல்லி அருகே கிரேட்டர் நொய்டாவில் உள்ள ஹோண்டா கார் ஆலையில் சோதனை முறையில் எச்ஆர்வி உற்பத்தி விரைவில் துவங்கப்பட இருந்தது. அத்துடன், சில எச்ஆர்வி கார்களும் உற்பத்தி இந்த ஆலையில் உற்பத்தி செய்யப்பட்டன. எனவே, அடுத்த மாதம் விற்பனைக்கு நாள் குறிப்பதுதான் பாக்கி என்ற நிலை இருந்தது.

மேலும், உதிரிபாக சப்ளையர்களுக்கும் ஆண்டுக்கு 12,000 கார்களை உற்பத்தி செய்வதற்கான இலக்கு வைத்திருப்பதாகவும் தெரிவித்திருந்தது. ஆனால், இந்திய கார் சந்தையில் நிலவும் மந்த நிலை காரணமாக, அதனை ஆண்டுக்கு 8,000 கார்கள் உற்பத்தி என்று இலக்கை குறைத்து சப்ளையர்களுக்கு தகவல் தெரிவித்தது.

இதையடுத்து, எச்ஆர்வி எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை தயாரிப்பதற்காக சப்ளையர்கள் புதிய உற்பத்திப் பிரிவுகளை அமைத்திருந்தனர். இதற்காக, அவர்கள் பெரும் முதலீட்டையும் செய்துள்ளனர்.

இந்த சூழ்நிலையில், எச்ஆர்வி எஸ்யூவியை இந்தியாவில் அறிமுகம் செய்யும் திட்டத்தை ஹோண்டா கார் நிறுவனம் கடைசி நேரத்தில் ரத்து செய்துள்ளதாக ஆட்டோகார் புரோஃபஷனல் தளம் செய்தி வெளியிட்டு இருக்கிறது.

ஹோண்டா எச்ஆர்வி எஸ்யூவிக்கான உதிரிபாகங்களை 30 சதவீதத்திற்கு மேல் இந்தியாவில் பெறுவதற்கு ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டு இருந்தது. ஆனால், அந்த இலக்கை அடைவதில் கடும் சவால்கள் எழுந்துள்ளன.

இதனால், போட்டியாளர்களைவிட விலையை சவாலாக நிர்ணயிக்க முடியாது. எனவே, எச்ஆர்வியை அறிமுகம் செய்து சூடுபட்டுக் கொள்ள ஹோண்டா கார் நிறுவனம் விரும்பவில்லை என்று தெரிகிறது. எனவே, இந்த திட்டத்தை கடைசி நேரத்தில் அதிரடியாக ரத்து செய்துவிட்டது.

எச்ஆர்வி எஸ்யூவியின் உதிரிபாகங்களுக்காக அதிக முதலீடு செய்துள்ள இந்திய சப்ளையர்களுக்கு நஷ்ட ஈடு வழங்கவும் ஹோண்டா கார் நிறுவனம் திட்டமிட்டுள்ளதாகவும் அந்த செய்தியில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தற்போது பிஎஸ்-6 மாசு உமிழ்வு தரத்திற்கு இணையாக கார் எஞ்சின்களை மேம்படுத்தி அறிமுகம் செய்வதில் முழு கவனத்தையும் செலுத்த முடிவு செய்துள்ளது ஹோண்டா கார் நிறுவனம். மேலும், மின்சார கார்களை அறிமுகம் செய்வது குறித்தும் தீவிரமாக பரிசீலித்து வருகிறது.


Click it and Unblock the Notifications








