ஹோண்டா கார்களை குத்தகைக்கு எடுத்து ஓட்டும் திட்டம் அறிமுகம்!
ஹோண்டா சிட்டி உள்ளிட்ட கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டும் திட்டம் அறிமுகம் செய்யப்பட்டுள்ளது. கூடுதல் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

கார்களை குத்தகை அடிப்படையில் வாங்கி ஓட்டுவதற்கான வாய்ப்பை பல்வேறு முன்னணி கார் நிறுவனங்கள் வழங்கி வருகின்றன. அந்த வகையில், ஹோண்டா கார் இந்தியா நிறுவனமும் தற்போது இந்த குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது.

ஓரிக்ஸ் நிறுவனத்துடன் இணைந்து இந்த புதிய கார் குத்தகை திட்டத்தை அறிமுகம் செய்துள்ளது. ஹோண்டா சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி ஆகிய மூன்று கார்களுக்கும் இந்த புதிய குத்தகை திட்டம் அறிமுகம் செய்யப்பட்டு இருக்கிறது.

கார்ப்பரேட் நிறுவனங்கள், மாதச் சம்பளதாரர்கள், தொழிலதிபர்கள், தொழில்முனைவோர்கள் இந்த திட்டத்தின் கீழ் மூன்று ஹோண்டா கார்களையும் குத்தகை அடிப்படையில் கட்டணம் செலுத்தி வாங்கி பயன்படுத்த முடியும்.

இந்த திட்டத்தின் கீழ் கார்களுக்கான வாடகை, இன்ஸ்யூரன்ஸ், பராமரிப்பு செலவு, வரி மேலாண்மை உள்ளிட்ட அனைத்தும் உள்ளடக்கியதாக வழங்கப்படுகிறது. இதனால், குத்தகை திட்டத்தின் கீழ் கார்களை வாடகைக்கு எடுத்து ஓட்டுவது சிறந்ததாக பல வாடிக்கையாளர்கள் கருத துவங்கி உள்ளனர்.

கார்களை வாங்குவதற்காக அதிக முதலீட்டை செய்யாமல், குறிப்பிட்ட காலத்திற்கு எளிமையான வாடகை திட்டங்களுடன் பயன்படுத்துவதற்கு இந்த குத்தகை திட்டம் பயன்படும். இந்த திட்டம் கார் உற்பத்தி நிறுவனங்களுக்கு புதிய வர்த்தக வாய்ப்பயைும் வழங்குகிறது.

அடுத்து வரும் மாதங்களில் சிட்டி, சிவிக் மற்றும் சிஆர்வி தவிர்த்து இதர ஹோண்டா கார்களையும் தனது குத்தகை திட்டத்தில் சேர்ப்பதற்கு ஓரிக்ஸ் திட்டமிட்டுள்ளதாக தகவல்கள் கூறுகின்றன. இதன்மூலமாக, வாடிக்கையாளர்கள் முன்பணம், பராமரிப்பு செலவு, இன்ஸ்யூரன்ஸ் போன்ற விஷயங்களுக்கு தேவையில்லாத செலவுகளை குறைக்கும் வாய்ப்பு இருக்கிறது.

கார் விற்பனை பெரும் சரிவுப் பாதையில் இருக்கும் நிலையில், டீலர்கள் வாயிலாக விற்பனை செய்யும் வர்த்தகத்தை மட்டுமே நம்பி இருக்காமல், இந்த புதிய வழியிலான வர்த்தகத்திலும் கார் நிறுவனங்கள் கவனம் செலுத்த துவங்கி இருக்கின்றன. இந்த திட்டங்களுக்கு வாடிக்கையாளர் மத்தியிலும் மெல்ல ஆதரவு அதிகரித்து வருவதும் முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.


Click it and Unblock the Notifications








