இந்தியர்களுக்காக ஹோண்டா காட்டும் துணிச்சல் இதுதான்... மற்ற நிறுவனங்கள் பின்வாங்கும் நிலையில் அதிரடி
முன்னணி நிறுவனங்கள் பின் வாங்கும் நிலையில், இந்தியர்களின் விருப்பத்திற்காக துணிச்சலான முடிவு ஒன்றை ஹோண்டா எடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

மிகவும் கடுமையான பிஎஸ்-6 (BS-VI) மாசு உமிழ்வு விதிகள், இந்தியாவில் வெகு விரைவில் அமலுக்கு வருகின்றன. 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதியை இதற்கான காலக்கெடுவாக மத்திய அரசு நிர்ணயம் செய்துள்ளது. இந்தியாவில் இயங்கும் அனைத்து ஆட்டோமொபைல் நிறுவனங்களும், அதற்குள்ளாக கார் மற்றும் பைக் உள்ளிட்ட தங்கள் மாடல்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்து விட வேண்டும்.

எனவே பிஎஸ்-6 விதிகளுக்கு இணங்கும் வகையில் தங்கள் மாடல்களின் இன்ஜின்களை ஆட்டோமொபைல் நிறுவனங்கள் வேகமாக மேம்படுத்தி வருகின்றன. அதே சமயம் ஒரு சில கார் நிறுவனங்கள், டீசல் இன்ஜின் உற்பத்தியை நிறுத்தி விடுவது குறித்து பரீசிலித்து வருகின்றன. இதில், மாருதி சுஸுகி, டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள் குறிப்பிடத்தகுந்தவை.

2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அனைத்து டீசல் மாடல்களின் உற்பத்தியையும் கைவிடப்போவதாக மாருதி சுஸுகி நிறுவனம் அறிவித்தே விட்டது. அதே சமயம் டாடா மற்றும் மஹிந்திரா உள்ளிட்ட நிறுவனங்கள், தங்களின் சிறிய டீசல் இன்ஜின் கார்களின் உற்பத்தியை மட்டும் நிறுத்துவது தொடர்பாக ஆலோசித்து வருகின்றன.

சிறிய டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்துவதற்கு அதிக செலவு ஆகும். எனவேதான் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் இப்படியான ஒரு நெருக்கடிக்கு ஆளாகியுள்ளன. இந்த சூழலில், பிஎஸ்-6 விதிகளுக்கு இணக்கமான டீசல் கார்களை இந்தியாவில் விற்பனை செய்வது என ஜப்பானை சேர்ந்த ஹோண்டா நிறுவனம் துணிச்சலாக முடிவு எடுத்துள்ளது.

பிஎஸ்-6 விதிமுறைகள் அமலுக்கு வந்த பின்பும், டீசல் இன்ஜின் கார்களை ஹோண்டா நிறுவனம் இந்தியாவில் தொடர்ந்து விற்பனை செய்ய முடிவு செய்திருப்பதாக லைவ்மின்ட் செய்தி வெளியிட்டுள்ளது. இந்த முடிவை எடுக்கும் 2வது நிறுவனம் ஹோண்டா என்பது குறிப்பிடத்தக்கது. முன்னதாக பிஎஸ்-6 டீசல் கார்களை விற்பனை செய்ய உள்ளதாக ஃபோர்டு நிறுவனம் அறிவித்துள்ளது.

இதனிடையே ஹோண்டா நிறுவனம் தற்போது 2 வகையான டீசல் இன்ஜின்களை வழங்கி வருகிறது. இந்த இன்ஜின்கள், அமேஸ், சிட்டி, டபிள்யூஆர்-வி, பிஆர்-வி, சிவிக் மற்றும் சிஆர்-வி போன்ற ஹோண்டா நிறுவனத்தின் பல்வேறு மாடல்களில் பொருத்தப்பட்டுள்ளன. இந்த 2 இன்ஜின்களையும் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்த உள்ளதாக ஹோண்டா நிறுவனத்தின் அதிகாரி ஒருவர் தெரிவித்துள்ளார்.

ஹோண்டா நிறுவனம் தற்போதைய நிலையில், அமேஸ், டபிள்யூஆர்-வி, சிட்டி மற்றும் பிஆர்-வி ஆகிய கார்களை 1.5 லிட்டர் டீசல் இன்ஜின் உடனும், சிவிக் மற்றும் சிஆர்-வி ஆகிய கார்களை 1.6 லிட்டர் டீசல் இன்ஜின் உடனும் விற்பனை செய்து வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது. இந்த கார்கள் அனைத்தும் பெட்ரோல் இன்ஜின் ஆப்ஷன்களிலும் கிடைக்கின்றன.

பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்பட்ட ஹோண்டாவின் பெட்ரோல் மற்றும் டீசல் இன்ஜின் கார்கள், நடப்பு நிதியாண்டின் நான்காவது காலாண்டு முதல் கிடைக்கும் என தகவல்கள் தெரிவிக்கின்றன. பிஎஸ்-6 விதிகள் அமலுக்கு வந்த பிறகும் டீசல் கார்களை விற்பனை செய்வது என ஹோண்டா நிறுவனம் எடுத்திருக்கும் முடிவு பாராட்டப்பட வேண்டிய ஒன்றே.

பொதுவாக இந்திய வாடிக்கையாளர்கள் டீசல் கார்களை மிகவும் விரும்ப கூடியவர்கள். அவற்றை வாங்க கூடியவர்கள். இதனை ஹோண்டா நிறுவனம் நன்றாக புரிந்து கொண்டுள்ளது. சற்று கடினமான காரியம்தான் என்றாலும், வாடிக்கையாளர்களின் விருப்பத்திற்காகவே டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்வது என்ற முடிவை ஹோண்டா அதிரடியாக எடுத்துள்ளது.

ஆனால் தங்களின் அனைத்து இன்ஜின்களையும் பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய இந்திய நிறுவனங்கள் பெரிதாக முன்வராதது டீசல் கார் பிரியர்களுக்கு வருத்தத்தை தரும் விஷயமாகவே இருக்கும். மஹிந்திராவும், டாடாவும் சிறிய டீசல் இன்ஜின்களை கைவிட்டு விட்டு, பெரிய டீசல் இன்ஜின்களை மட்டுமே பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்ய திட்டமிட்டு வருகின்றன. மறுபக்கம் மாருதி சுஸுகி நிறுவனமோ அனைத்து டீசல் இன்ஜின்களின் உற்பத்தியையும் நிறுத்த உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








