மத்திய அரசின் புதிய வாகன பதிவெண் திட்டத்தை அமல்படுத்துவதில் சிக்கல்: கர்நாடக அதிகாரிகள் குழப்பம்
மத்திய அரசின் ஹெச்.எஸ்.ஆர்.பி., என்ற புதிய வாகன பதிவெண் திட்டத்தை அமல்படுத்துவதில் கர்நாடக போக்குவரத்துத்துறை அதிகாரிகளிடையே குழப்பத்தை ஏற்படுத்தியுள்ளது.

இந்தியாவில் மோட்டார் வாகனங்களை வாங்குவதற்கான நடைமுறைகளை மோட்டார் உற்பத்தி நிறுவனங்கள் ஆண்டுதோறும் எளிமையாக்கி வருகின்றன. இதனால் வாகனங்களை வாங்குவோரின் எண்ணிக்கை மளமளவென உயர்ந்து வருகிறது.

மேலும், நாட்டில் உள்ள சாலைகளில் பயணிகள் மற்றும் டிரான்ஸ்போர்ட் வாகனங்களை விட இரண்டு மற்றும் நான்கு சக்கர வாகனங்களின் எண்ணிக்கை கடுமையாக அதிகரித்து, பெரும் சாலை போக்குவரத்து பாதிப்புகள் அதிகரித்து வருகின்றன.

அதே சமயம் வாகன விபத்து, வாகன திருட்டு உள்ளிட்ட வாகனங்களைச் சார்ந்து நடைபெறும் சட்ட விரோத செயல்களும் நாளுக்கு நாள் உயர்ந்து வருகின்றன.

இந்நிலையில், வாகனங்களில் உள்ள பதிவெண்கள் சிறியதாகவும், பெரியதாகவும் எழுதப்பட்டு கடவுள், சினிமா நடிகர்கள் மற்றும் அவரவர்களின் பெயர் போன்றவற்றை ஒட்டி வருகின்றனர். இதனால் சட்ட விரோத செயலில் ஈடுபடும் வாகனங்களை கண்டுபிடிப்பதில் தொய்வும், சிரமம் ஏற்பட்டுள்ளது.

இவற்றை தவிர்க்கும் விதமாக, மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் கடந்த 2001 ஆம் ஆண்டு ஹெச்.ஆர்.எஸ்.பி., (உயர் பாதுகாப்பு பதிவெண்கள்) என்ற புதிய நம்பர் பிளேட் திட்டத்தை அறிமுகப்படுத்தியது. இத்திட்டத்தை அனைத்து மாநில அரசுகளும் நடைமுறைபடுத்தவும் அது உத்தரவிட்டது.

Image Courtesy: chandigarh transport
எலக்ட்ரானிக் நம்பர் பிளேட்டான இது அலுமினியத் தகட்டால் உருவாக்கப்படுகிறது. அதில், அசோகச் சக்கரம் பொறிக்கப்பட்ட குரோமியம் ஹாலோகிராம் ஸ்டிக்கர் ஒட்டப்படும். இதை கிழிக்க முடியாது.

அதற்கு கீழே 'ஐஎன்டி' என நம் நாட்டின் அடையாளத்தைக் குறிக்கும் விதமாக, நீல நிறத்தில் ஆங்கில வார்த்தைகள் இடம் பெற்றிருக்கும். அதற்குக் கீழே அல்லது பக்காவட்டில், ஒவ்வொரு பலகைக்கும் பிரத்யேக பதிவெண்கள் ஸ்டிக்கராக அல்லாமல் அழுத்தமாக அச்சிடப்படும்.

இந்த எழுத்தினை அழித்தாலும், அதன் பின்னணியில் உள்ள அச்சு அப்படியே இருக்கும். பின்னர், மத்திய அரசின் 'வாஹன்' என்ற இணையதளத்தில், குறிப்பிடப்பட்ட வாகனத்தின் உரிமையாளர், பதிவு எண்கள், பிரத்யேக எண்கள் உள்ளிட்ட அனைத்து விஷயங்களும் பதிவு செய்யப்படும்.

இதன்மூலம் ஒரு வாகனம் சிக்னலை மீறிச் சென்றால், உடனடியாக அங்குள்ள சிசிடிவி கேமிரா மூலம் கம்ப்யூட்டரில் பதிவாகி விடும். மேலும், எந்த சிக்னலை அந்த வாகனம் கடந்தாலும் உடனடியாக கம்ப்யூட்டர் மூலம் தெரிந்து விடும் என்பதால், வாகன திருட்டு என்பதற்கு வாய்ப்பே இல்லாமல் போய்விடும்.

போலீசார் ரோந்து பணியில் ஈடுபடும்போது, குறிப்பிட்ட கருவியின் மூலம் வாகனத்தின் நம்பர் பிளேட்டில் உள்ள விவரங்களை கொண்டு, வாகனத்தில் வருபவர் உரிமையாளரா அல்லது வேறு நபரா என்பதை தெரிந்து கொள்ளவும் முடியும்.

மேலும், இந்த நம்பர் பிளேட்டானது ரிவிட் முறை மூலம் வாகனங்களில் பொருத்தப்படும். இதனால் வாகனத்தில் பொருத்தப்பட்ட நம்பர் பிளேட்டை அகற்றவோ அல்லது போலி நம்பர் பிளேட்டுகளை பொருத்தவோ முடியாது.

இத்தகைய வசதிகள் ஹெச்.எஸ்.ஆர்.பியில் உள்ளதால், இந்த நம்பர் பிளேட்டை அனைத்து மாநிலங்களிலும் அறிமுகம் செய்ய வேண்டும் என உச்ச நீதிமன்றம் கடந்த 2015 ஆம் ஆண்டில் உத்தரவிட்டிருந்தது.

இதைத்தொடர்ந்து தற்போது புதுச்சேரி, டில்லி, கோவா, சத்தீஸ்கர், அந்தமான் நிக்கோபார் தீவுகள் உள்ளிட்ட இடங்களில் இது நடைமுறைக்குக் கொண்டுவரப்பட்டது. ஆனால் தமிழகத்தில் எப்போது வரும் என கேள்வி குறியாகத்தான் உள்ளது.

இந்த நிலையில், மத்திய சாலை போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறை அமைச்சகம் வருகின்ற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதிக்குள் அனைத்து மாநிலங்களிலும் ஹெச்.ஆர்.எஸ்.பி., திட்டத்தை கட்டாயமாக அமல்படுத்த வேண்டும் என்று சமீபத்தில் அறிவித்தது.

இந்த சூழலில் கர்நாடக மாநிலத்தில் இந்த திட்டத்தைக் நடைமுறைப்படுத்துவதில் ஆர்.டி.ஓ., துறையினர் பெரும் சிக்கலை சந்தித்து வருவதாக அதிகாரிகள் சிலர் கூறுகின்றனர்.

இதுகுறித்து போக்குவரத்துத்துறை அதிகாரி ஒருவர் கூறுகையில், "மாநிலத்தில் ஹெச்.ஆர்.எஸ்.பி., திட்டத்தை அமல்படுத்த வருகின்ற ஏப்ரல் மாதம் 1 ஆம் தேதி வரை கெடு கொடுக்கப்பட்டுள்ளது. இதை செயல்படுத்த நாங்கள் திட்டமிட்டுள்ளோம். அதன்படி, புதிதாக விற்பனையாகும் அனைத்து வாகனங்களுக்கும் உயர் பாதுகாப்புக் கொண்ட பதிவெண்கள் கொண்ட நம்பர் பிளேட்டுகள் பொருத்தப்படுகின்றன.

ஆனால், இந்த நடைமுறையை பழைய வாகனங்களில் கொண்டுவருவதில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஏனென்றால் இங்கு லட்சக்கணக்கான வாகனங்கள் உள்ளன. அவற்றில் இந்த நடைமுறைக் கொண்டுவருவதில் குழப்பம் ஏற்பட்டுள்ளது" என்றார்.


Click it and Unblock the Notifications








