ஹூண்டாய், கியா மின்சார கார்கள் இந்தியாவிலேயே உற்பத்தி செய்ய திட்டம்?
ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனங்களின் மின்சார கார்கள் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்யப்பட உள்ளதாக செய்திகள் வெளியாகி இருக்கின்றன.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் விரைவில் மின்சார கார்களை அறிமுகம் செய்வதற்கு திட்டமிட்டுள்ளது. முதல் மாடலாக கோனா மின்சார எஸ்யூவி மாடலை இந்தியாவில் அறிமுகம் செய்யவும் அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது.

இதைத்தொடர்ந்து, புதிய மின்சார கார்களை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கும் ஹூண்டாய் முடிவு செய்துள்ளது. மறுபுறத்தில் ஹூண்டாய் நிறுவனத்தின் கீழ் செயல்படும் கியா மோட்டார்ஸ் நிறுவனமும் மின்சார கார்களை அறிமுகம் செய்யும் திட்டத்தை கையில் வைத்துள்ளது.

இந்த நிலையில், இந்த இரு பிராண்டுகளின் மின்சார கார்களையும் இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கு ஹூண்டாய் குழுமம் முடிவு செய்துள்ளதாக டைம்ஸ் ஆஃப் இந்தியா செய்தி வெளியிட்டுள்ளது. எல்ஜி நிறுவனத்திடமிருந்து பேட்டரியை சப்ளை பெறுவதற்கும், இதர பாகங்களை பிற அயல்நாட்டு நிறுவனங்களிடமிருந்து சப்ளை பெறுவதற்கான திட்டத்துடன் செயலாற்றி வருகிறது.

அதேபோன்று, இந்தியாவில் உள்ள உள்நாட்டு சப்ளையர்களிடமிருந்து உதிரிபாகங்களை சப்ளை பெறுவதற்கான சாத்தியக்கூறுகள் குறித்தும் இரு நிறுவனங்களின் தலைமை அதிகாரிகள் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளனர்.

ஏற்கனவே, உள்நாட்டு சப்ளையர்களுடன் நெருக்கமான உறவு இருப்பதால், எதிர்காலத்தில் மின்சார கார்களை இந்தியாவிலேயே அசெம்பிள் செய்வதற்கான திட்டம் கையில் எடுக்கப்படும் என்று ஹூண்டாய் அதிகாரி தெரிவித்துள்ளார். மேலும், பேட்டரி உள்ளிட்ட அனைத்து முக்கிய பாகங்களையும் இந்தியாவிலேயே சப்ளை பெறுவதற்கான திட்டமும் இருப்பதாக அவர் கூறி இருக்கிறார்.

இந்த நிலையில், அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவிலேயே மின்சார கார்களுக்கான பேட்டரி, மின் மோட்டார், டிரான்ஸ்மிஷன் உள்ளிட்ட பாகங்களின் உற்பத்தி சாதாரணமாகிவிடும் என்பதுடன், விலையும் வெகுவாகக குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

வரும் 2025ம் ஆண்டு வாக்கில் மின்சார கார்களின் வர்த்தக மதிப்பும் உயரும் வாய்ப்பு இருப்பதுடன், சந்தைப் போட்டியும், நுகர்வும் அதிகரிப்பதால் மின்சார கார்களின் விலை கணிசமாகா குறையும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

அடுத்த 5 ஆண்டுகளில் கார் சந்தையில் மின்சார கார்களின் பங்களிப்பு என்பது 25 சதவீதம் அளவிற்கு உயரும் வாய்ப்பு இருப்பதாகவும் கணிக்கப்பட்டு இருக்கிற. எனவே, அடுத்த ஆண்டு முதல் மின்சார கார்களின் எண்ணிக்கை வெகுவாக அதிகரிக்கும் வாய்ப்புள்ளது.


Click it and Unblock the Notifications








