பட்ஜெட் ரக கார் விரும்பிகளை குறிவைக்கும் ஹூண்டாய்: மலிவு விலையில் புதிய அவதாரம் எடுக்கும் சான்ட்ரோ!
ஹூண்டாய் நிறுவனம் அதன் பட்ஜெட் விலை காரான சான்ட்ரோவை, மேலும் மலிவு விலையில் அதிக வசதிகளைக் கொண்ட காராக தயாரித்து வருவதாக தகவல் வெளியாகியுள்ளது.

கொரியன் கார் தயாரிப்பு நிறுவனமான ஹூண்டாய், அதன் புதிய தலைமுறை சான்ட்ரோ டால்-பாய் ஹேட்ச்பேக் காரை, கடந்த வருடம் அக்டோபர் மாதம் இந்தியாவில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. இந்த கார் மலிவான விலையைக் கொண்டிருப்பதால் இந்திய வாடிக்கையாளர்கள் மத்தியில் நல்ல வரவேற்பைப் பெற்று வருகின்றது.

இந்நிலையில், இந்த பட்ஜெட் ரக ஹேட்ச்பேக் காரை, மேலும் மலிவான விலையில் வாடிக்கையாளர்களுக்கு விற்பனைச் செய்யும் வகையில் ஹூண்டாய் நிறுவனம் உருவாக்கி வருவதாக தகவல் வெளியாகியுள்ளது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

அதில், ஹூண்டாய் நிறுவனம், அண்மையில் அதன் சிறிய ரகத்திலான பட்ஜெட் இயான் காரை விற்பனையில் இருந்து விலக்கிக்கொண்டது. தற்போது, அதன் இடத்தை ரீபிளேஸ் செய்யும் விதமாக, சான்ட்ரோ காரை ஹீண்டாய் நிறுவனம் தாயார் செய்து வருகின்றது.

அந்தவகையில், பட்ஜெட் ரக கார்களை விரும்பும் வாடிக்கையாளர்களைக் கவரும் விதமாக, புதிய சான்ட்ரோ கார் உருவாக இருக்கின்றது. ஹூண்டாயின் இந்த அதிரடி நடவடிக்கையானது வாடிக்கையாளர்களைக் கவரும் நோக்கிலும், பட்ஜெட் விலை கார்களின் சந்தையை விட்டுக்கொடுக்காமல் இருக்கவும் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டிருப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

சான்ட்ரோ காரின் இந்த புதிய அவதாரம், அடுத்த ஆண்டில் அமலாக இருக்கும் புதிய கிராஷ் டெஸ்ட் விதிகளுக்கு ஏற்பதாகவும் இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. அதேசமயம், தற்போது விற்பனையில் இருக்கும் சான்ட்ரோ காரைக் காட்டிலும் மலிவான விலையில், அதாவது ரூ. 2.94 லட்சம் என்ற எக்ஸ்-ஷோரூம் விலையில் விற்பனைக்கு வரலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

ஹூண்டாயின் சான்ட்ரோ கார் ஏற்கனவே மலிவான விலையில் தான் விற்பனையாகி வருகின்றது. அவ்வாறு, இதன் மாடல் காரின் ஆரம்ப வேரியண்டின் விலையானது ரூ. 3.91 லட்சமாகவும், உயர் ரக வேரியண்டின் விலை ரூ. 5.66 லட்சமாக இருக்கின்றது. இவை எக்ஸ்-ஷோரூம் விலைகளாகும்.

ஆகையால், இந்த கார் முன்னதாகவே பட்ஜெட் ரக கார்கள் விரும்பிகளிடம் புகழ்வாய்ந்த மாடலாக இருக்கின்றது. இருப்பினும் இந்த மாடலை மேலும் மலிவான விலைியில் அதிக வசதிகளைக் கொண்டதாக உருவாக்க ஹூண்டாய் நிறுவனம் திட்டமிட்டுள்ளது. அவ்வாறு, அது உருவாகும் பட்சத்தில் மாருதி சுஸுகி நிறுவனத்தின் ஆல்டோ காருக்கு போட்டியாக இருக்கும்.

தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் சான்ட்ரோ காரில் டியூவல் ஏர்பேக்குகள், இபிடியுடன் கூடிய ஏபிஎஸ் பிரேக்கிங் சிஸ்டம், ஐசோஃபிக்ஸ் சைல்டு சீட் மவுண்ட்டுகள், சீட் பெல்ட் ரிமைன்டர், ரியர் பார்க்கிங் சென்சார்கள் மற்றும் ரியர் பார்க்கிங் கேமரா, ஸ்பீடு சென்சிங் டோர் லாக் மற்றும் விபத்தின்போது தானாக திறக்கும் கதவுகள் உள்ளிட்ட பல்வேறு தொழில்நுட்ப வசதிகள் வழங்பட்டுள்ளன.

மேலும், இந்த காரில் 68 பிஎச்பி பவரையும், 99 என்எம் டார்க் திறனையும் வழங்கக் கூடிய 1.1 லிட்டர் பெட்ரோல் எஞ்சின் பொருத்தப்பட்டுள்ளது. இது, 5 ஸ்பீடு மேனுவல் கியர்பாக்ஸ் மட்டுமல்லாது, ஏஎம்டி கியர்பாக்ஸ் ஆப்ஷன்களில் கிடைக்கின்றது.


Click it and Unblock the Notifications