ஹைட்ரஜன் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவது குறித்து ஹூண்டாய் ஆய்வு!
ஹைட்ரஜன் எரிபொருளில் இயங்கும் புதிய கார் மாடலை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கான முதல்கட்ட ஆய்வுப் பணிகளை ஹூண்டாய் மேற்கொண்டுள்ளது.

பெட்ரோல், டீசல் கார்கள் வெளியிடும் புகையால் சுற்றச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டுள்ளது. இதனை தவிர்ப்பதற்காக, சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத மாற்று எரிபொருள் வாகனங்களை அறிமுகப்படுத்துவதற்கு கார் நிறுவனங்கள் ஆர்வம் காட்டி வருகின்றன.

அதன்படி, ஹூண்டாய் நிறுவனம் கோனா எலெக்ட்ரிக் காரை சில மாதங்களுக்கு முன் அறிமுகம் செய்தது. இந்த காருக்கு நல்ல வரவேற்பு கிடைத்துள்ளது. இந்த நிலையில், அடுத்து ஹைட்ரஜனில் இயங்கும் காரை இந்தியாவில் அறிமுகப்படுத்துவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

ஹைட்ரஜனில் இயங்கும் காருக்கான வர்த்தக வாய்ப்புகள் குறித்து ஹூண்டாய் முதற்கட்ட ஆய்வுப் பணிகளை மேற்கொண்டுள்ளது. இதில், சாதகமான முடிவுகள் வந்தால், அடுத்த ஆண்டு இந்தியாவில் புதிய ஹைட்ரஜன் காரை அறிமுகப்படுத்த ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

கடந்த ஆண்டு டெல்லியில் நடந்த இந்திய- கொரியா வர்த்தக மாநாட்டில் ஹூண்டாய் நெக்ஸோ என்ற ஹைட்ரஜனில் இயங்கும் கார் காட்சிப்படுத்தப்பட்டது. இந்த கார் மாடலை இந்தியாவில் விற்பனைக்கு கொண்டு வருவதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

புதிய ஹூண்டாய் நெக்ஸோ காரில் 95kW ஃப்யூவல் செல் பொருத்தப்பட்டு இருக்கிறது. ஹைட்ரஜன் எரிபொருளில் இருந்து மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு மின் மோட்டார்கள் மூலமாக ஹைட்ரஜன் கார்கள் இயங்கும்.

அதன்படி, இந்த காரின் மின் மோட்டார் அதிகபட்சமாக 161 எச்பி பவரையும், 395 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும் திறன் வாய்ந்ததாக இருக்கும். ஒரு ஃப்யூவல் செல் தொகுப்பில் இருக்கும் ஹைட்ரஜன் எரிபொருள் மூலமாக 666 கிமீ தூரம் வரை பயணிக்க முடியும்.

இந்த கார் 0 - 100 கிமீ வேகத்தை 9.2 வினாடிகளில் எட்டிவிடும். மணிக்கு 177 கிமீ வேகம் வரை இந்த கார் செல்லும். இந்த கார் மைனஸ் 30 டிகிரி வெப்பநிலையிலும் ஸ்டார்ட் ஆகும் என்று தெரிவிக்கப்படுகிறது.

சுற்றுச்சூழலுக்கு தீங்கு இழைக்காத இந்த கார் மின்சார வாகனங்களை விட சிறந்ததாக இருக்கும் என்று தெரிவிக்கப்படுகிறது. எனவே, இந்த சந்தையில் முதலில் களமிறங்கிவிடும் முனைப்பில் ஹூண்டாய் தீவிரம் காட்டி வருகிறது.


Click it and Unblock the Notifications








