மலிவான விலை காரை களமிறக்கிய ஹூண்டாய் இந்தியர்களுக்கு கொடுத்த அடுத்த ஆச்சரியம் இதுதான்...
புத்தம் புதிய வெனியூ காரை மிகவும் மலிவான விலையில் களமிறக்கி இந்தியர்களுக்கு ஆச்சரியத்தை கொடுத்த ஹூண்டாய், தற்போது மற்றொரு ஆச்சரியத்தையும் கொடுத்துள்ளது. இதுகுறித்த விரிவான தகவல்களை இந்த செய்தியில் பார்க்கலாம்.

ஹூண்டாய் நிறுவனம் இந்திய மார்க்கெட்டில் தனது முதல் சப்-4 மீட்டர் காம்பேக்ட் எஸ்யூவி காரான வெனியூவை கடந்த சில நாட்களுக்கு முன் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. மிகவும் மலிவான விலையில் ஹூண்டாய் வெனியூ களமிறக்கப்பட்டுள்ளதால் வாடிக்கையாளர்கள் ஆச்சரியமடைந்துள்ளனர்.

6.50 லட்ச ரூபாய் என்ற ஆரம்ப விலையில் (எக்ஸ் ஷோரூம், இந்தியா) ஹூண்டாய் வெனியூ கிடைக்கும். வெனியூ அறிமுக விழாவின்போது, டீசல் இன்ஜின்கள் தொடர்பாக தங்களது எதிர்கால திட்டங்கள் தொடர்பான தகவல்களை ஹூண்டாய் நிறுவனம் உறுதி செய்தது.

இதன்படி ஹூண்டாய் நிறுவனம் வருங்காலத்திலும் டீசல் இன்ஜின் கார்களை விற்பனை செய்யவுள்ளது. அவற்றை விற்பனையில் இருந்து விலக்கும் எண்ணம் ஹூண்டாய் நிறுவனத்திற்கு இல்லை என்பது இதன்மூலமாக தெரியவந்துள்ளது.

மிகவும் கடுமையான பிஎஸ்-6 மாசு உமிழ்வு விதிகள் இந்தியாவில் வரும் 2020ம் ஆண்டு ஏப்ரல் 1ம் தேதி முதல் அமலுக்கு வருகின்றன. இதன் காரணமாக இந்தியாவில் டீசல் இன்ஜின் உற்பத்தியை முற்றிலுமாக கைவிடப்போவதாக ஒரு சில நிறுவனங்கள் அறிவித்துள்ளன.

டீசல் இன்ஜின்களை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப மேம்படுத்த கூடுதல் செலவு ஆகும். அதாவது பிஎஸ்-4 டீசல் காரை பிஎஸ்-6 விதிகளுக்கு ஏற்ப அப்டேட் செய்தால், அதன் விலை 1 லட்ச ரூபாய் வரை அதிகரித்து விடுவதற்கான வாய்ப்புகள் உள்ளன.

இதன் காரணமாக அந்த காரின் பெட்ரோல் வேரியண்ட் உடன் ஒப்பிடுகையில், டீசல் வேரியண்ட்டின் விலை 2 லட்ச ரூபாய் வரை அதிகமாக இருக்கும் சூழல் உருவாகும். எனவேதான் டீசல் இன்ஜின் உற்பத்தியை முழுமையாக நிறுத்துவது என ஒரு சில நிறுவனங்கள் முடிவு செய்துள்ளன.

இதற்கு இந்தியாவின் மிகப்பெரிய கார் உற்பத்தி நிறுவனமான மாருதி சுஸுகி ஓர் உதாரணம் மட்டுமே. இந்தியாவில் டீசல் கார் மாடல்களின் உற்பத்தியை ஒட்டுமொத்தமாக நிறுத்துவது என மாருதி சுஸுகி நிறுவனம் முடிவு செய்துள்ளது.

ஆனால் ஹூண்டாய் நிறுவனம் மாருதி சுஸுகி நிறுவனத்தின் வழியில் செல்லவில்லை. டீசல் மாடல்களின் உற்பத்தியை நிறுத்தும் எண்ணம் தங்களுக்கு இல்லை என்பதை ஹூண்டாய் நிறுவனம் தற்போது உறுதி செய்துள்ளது.

1.4 லிட்டர் மற்றும் 1.6 லிட்டர் யூனிட்கள் என தற்போதைய நிலையில் ஹூண்டாய் நிறுவனம் இரண்டு டீசல் இன்ஜின் ஆப்ஷன்களை வழங்கி வருகிறது. இந்த சூழலில் ஹூண்டாயின் ஒரு அங்கமாக செயல்பட்டு வரும் கியா நிறுவனம் புதிய 1.5 லிட்டர் டீசல் இன்ஜினை வழங்கவுள்ளது. கியா நிறுவனத்தின் இந்த டீசல் இன்ஜின் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு இணையானது.

ஆனால் ஹூண்டாய் நிறுவனம் தற்போது உள்ள தனது 2 டீசல் இன்ஜின் ஆப்ஷன்களுக்கு மாற்றாக இந்த 1.5 லிட்டர் இன்ஜினை வழங்கப்போகிறதா? அல்லது தனது 2 டீசல் இன்ஜின்களையும் பிஎஸ்-6 விதிமுறைகளுக்கு ஏற்ப அப்டேட் செய்யப்போகிறதா? என்பது இன்னும் உறுதி செய்யப்படவில்லை.

ஏற்கனவே குறிப்பிட்டபடி ஹூண்டாய் நிறுவனம் சமீபத்தில்தான் வெனியூ காரை இந்திய மார்க்கெட்டில் விற்பனைக்கு அறிமுகம் செய்தது. ஹூண்டாய் வெனியூ காரில், 1.4 லிட்டர் யூனிட் வடிவில் ஒரே ஒரு டீசல் இன்ஜின் ஆப்ஷன் வழங்கப்படுகிறது.

வெர்னா மற்றும் கிரெட்டா போன்ற இதர ஹூண்டாய் தயாரிப்புகளிலும் கூட இதே இன்ஜின் ஆப்ஷன் கிடைக்கிறது. இந்த 1.4 லிட்டர் டீசல் இன்ஜின் அதிகபட்சமாக 89 பிஎச்பி பவர் மற்றும் 220 என்எம் டார்க் திறனை வெளிப்படுத்தும்.

இந்த டீசல் யூனிட் உடன் ஹூண்டாய் வெனியூ கார் 6 ஸ்பீடு மேனுவல் கியர் பாக்ஸை ஸ்டாண்டர்டாக பெற்றுள்ளது. ஹூண்டாய் வெனியூ காருக்கு இந்திய மார்க்கெட்டில் அமோக வரவேற்பு கிடைத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

இந்தியாவில் டீசல் கார்களுக்கு டிமாண்ட் இருந்து கொண்டேதான் உள்ளது. ஆனால் மிக கடுமையான பிஎஸ்-6 விதிமுறைகளால் ஆட்டோமொபைல் நிறுவனங்கள் மிக கடுமையான நெருக்கடிகளுக்கு ஆளாகியுள்ளன.

எனவேதான் மாருதி சுஸுகி உள்ளிட்ட ஒரு சில நிறுவனங்கள் பின் வாங்குகின்றன. இப்படிப்பட்ட சூழலிலும் டீசல் கார்களின் விற்பனையை தொடர்வது என ஹூண்டாய் நிறுவனம் முடிவு செய்துள்ளது குறிப்பிடத்தக்கது.


Click it and Unblock the Notifications








