அரசியலை மிஞ்சிய மாபெரும் கூட்டணி: 3 நிறுவனங்களின் ஒன்றிணைப்பால் நடுங்கி நிற்கும் போட்டி நிறுவனங்கள்!
அரசியலை மிஞ்சும் வகையில் மாபொரும் கூட்டணியை வாகனம் தயாரிப்பில் ஈடுபட்டு வரும் ஹூண்டாய், கியா மற்றும் ரிமேக் ஆகிய நிறுவனங்கள் செய்துள்ளன. எதற்காக இந்த கூட்டணி என்பது குறித்த தகவலை இந்த பதிவில் காணலாம்.

தென் கொரியாவை மையமாகக் கொண்டு, வாகன தயாரிப்பில் ஜம்பவான்களாக செயல்பட்டு வரும் ஹூண்டாய் மற்றும் கியா நிறுவனம், க்ரோஷியா நாட்டின் எலக்ட்ரிக் வாகன தயாரிப்பு நிறுவனமான ரிமேக் உடன் இணைந்திருப்பதாக தகவல் வெளியாகியுள்ளன. இந்த இணைப்பின் மூலம் புதிய எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்கப்பட இருப்பதாக கூறப்படுகிறது. இதுகுறித்த செய்தியை ஆட்டோகார் இந்தியா ஆங்கில இணையதளம் வெளியிட்டுள்ளது.

மேலும், இந்த இணைப்பில் எலக்ட்ரிக் கார் தயாரிப்பதற்காக ஹூண்டாய் குழுமம் 632 கோடி ரூபாயை முதலீடு செய்துள்ளது. இதன்மூலம், இரண்டு புதிய அதிநவீன தொழில்நுட்பத்திலான எலக்ட்ரிக் கார்கள், க்ரோஷியன் நாட்டு நிறுவனமான ரிமேக் உடன் இணைந்து தயாரிக்கப்பட உள்ளன. இந்த கார் 2020ம் ஆண்டிற்குள் அறிமுகம் செய்யப்பட இருப்பதாக கூறப்படுகிறது.

இந்த ஒப்பந்தத்தின் மூலம், ஹூண்டாய் மற்றும் கியா ஆகிய நிறுவனங்கள் ரிமேக் உடன் இணைந்து, முழுக்க முழுக்க எலக்ட்ரிக் வெர்ஷனான மிட்ஷிப் ஸ்போர்ட்ஸ் ரகத்திலான எலக்ட்ரிக் கார்கள் தயாரிக்க இருக்கின்றன. இந்த கார், ஹை-பெர்ஃபார்மென்ஸ் ப்யூவல்-செல் வாகனத்தைப்போன்று, ஹூண்டாயின் என் பெர்ஃபார்மென்ஸ் டிவிஷனில் தயாராக உள்ளது.

முன்னதாக, ஹூண்டாய் மோட்டார் குழுமம் மிக அதிகளவிலான தொகையை ஹைட்ரோஜனால் இயங்கும் வாகனங்களைத் தயாரிக்க முதலீடு செய்தது. ஹைட்ரஜனால் இயங்கும் வாகனங்கள் குறைந்த அளவு கார்பன் வாயுவை வெளியிடும் என்ற காரணத்தால், இந்த முதலீட்டை அந்த நிறுவனம் செய்துள்ளது. மேலும், இதன்மூலம், வருடத்திற்கு குறைந்தது 7 லட்சம் வாகனங்களையாவது உற்பத்திச் செய்ய வேண்டும் என்ற இலக்கை அந்த நிறுவனம் நிர்ணயித்துள்ளது.

இதைத்தொடர்ந்தே, மின் வாகனங்களை உற்பத்திச் செய்ய தற்போது, 632 கோடிக்கும் மேலான தொகையை முதலீடு செய்துள்ளது. இதில், ஹூண்டாய் நிறுவனம், 506 கோடி ரூபாயும், கியா நிறுவனம் சார்பில் 127 கோடி ரூபாயும் முதலீடு செய்யப்பட்டுள்ளது. இந்த தொகையானது, மின் வாகனங்களை உற்பத்தி செய்ய, உலகம் முழுவதும் இயங்கும் அனைத்து ஹூண்டாய் தொழிற்சாலைகளுக்கும் பகிர்ந்து வழங்கப்பட இருக்கின்றது.

இரு நிறுவனங்களின் இணைப்பானது, மின் வாகன உற்பத்தியில் ஓர் புதிய மைல்கல்லை எட்ட உத இருப்பதாகவும், மின்வாகனம் சார்ந்த சந்தையில் மற்ற வாகன தயாரிப்பு நிறுவனங்களுக்கு முன்னோடியக திகழ இருப்பதாகவும், ஹூண்டாய் நிறுவனம் இரு இணைப்பு குறித்து கருத்து தெரிவித்துள்ளது.

க்ரோஷிய நாட்டை மையமாகக் கொண்டு இயங்கும் இந்த ரிமேக் நிறுவனம், ரிமேக் பிராண்டில் இதுவரை பல்வேறு எலக்ட்ரிக் வாகனங்களைத் தயாரித்து, வெளிநாடுகளில் விற்பனைச் செய்து வருகின்றது. அண்மையில் கூட இந்த நிறுவனம் 415 கிமீ வேகத்தில் செல்லக்கூடிய சி-ரகத்திலான இரண்டு ஹைபர் காரை விற்பனைக்கு அறிமுகம் செய்தது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில், இந்த நிறுவனத்துடன் கியா மற்றும் ஹூண்டாய் நிறுவனம் இணைந்திருப்பது பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியுள்ளது. ஏற்கனவே ஹூண்டாய் நிறுவனம் பல்வேறு நாடுகளில் அதன் கார்கள் மூலம் ராஜ்யம் செய்து வருகின்றது. இந்த நிலையில், தற்போது மின் வாகனச் சந்தையிலும், அதன் ஆதிக்கத்தைச் செலுத்தும் கொண்டுவரப்பட்டுள்ள இந்த நடவடிக்கை போட்டி நிறுவனங்களிடையே கலக்கத்தை ஏற்படுத்தியுள்ளது.


Click it and Unblock the Notifications








