எலெக்ட்ரிக் கார் தயாரிப்பு: அதிரடி திட்டத்தை கையில் எடுத்த ஹூண்டாய்!
எலெக்ட்ரிக் கார் தயாரிப்புக்காக அதிரடியான திட்டத்தை கையில் எடுத்துள்ளது ஹூண்டாய் மோட்டார்ஸ். அதன் விபரங்களை இந்த செய்தியில் காணலாம்.

தென்கொரியாவை சேர்ந்த ஹூண்டாய் மோட்டார்ஸ் நிறுவனம் பேட்டரியில் இயங்கும் மின்சார கார்கள் தயாரிப்புக்கு அதிக முக்கியத்துவம் கொடுத்து வருகிறது. உலகின் பல்வேறு நாடுகளிலும் தனது எலெக்ட்ரிக் கார்களை சந்தைப்படுத்துவதற்கான முயற்சிகளிலும் ஈடுபட்டுள்ளது.

ஹூண்டாய் மோட்டார்ஸ் கீழ் ஹூண்டாய் மற்றும் கியா கார் பிராண்டுகள் செயல்படுகின்றன. ஒரு கார்கள் மாற்றங்கள் செய்யப்பட்டு இரு பிராண்டுகளிலும் விற்பனை செய்யப்படுகின்றன. தற்போது ஹூண்டாய் பிராண்டில் கோனா எலெக்ட்ரிக் காரும், கியா பிராண்டில் சோல் எலெக்ட்ரிக் காரும் சில மார்க்கெட்டுகளில் விற்பனையில் உள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிிறது. இந்த சூழலில், ஃபோக்ஸ்வேகன் குழுமத்தின் வழியில், புதிய எலெக்ட்ரிக் கார்களை முற்றிலும் புதிய கட்டமைப்பில் உருவாக்க ஹூண்டாய் மோட்டார்ஸ் குழுமம் திட்டமிட்டுள்ளது.

தற்போது விற்பனையில் இருக்கும் ஹூண்டாய் கோனா மற்றும் கியா சோல் உள்ளிட்ட கார்களானது பெட்ரோல், டீசல் விற்பனையில் இருந்த மாடல்களின் பிளாட்ஃபார்மிலேயே மின்சார கார்களாக உருவாக்கப்பட்டன. ஆனால், இனி முற்றிலும் புதிய கட்டமைப்பு கொள்கையின் கீழ் மின்சார கார்களை தயாரிக்க ஹூண்டாய் முடிவு செய்துள்ளது.

புதிய கட்டமைப்பில் உருவாக்கப்படும் மின்சார கார்கள் அடுத்த இரண்டு ஆண்டுகளில் விற்பனைக்கு களமிறக்கப்படும். ஹூண்டாய் மற்றும் கியா என பிராண்டுகளிலும் களமிறக்கப்பட இருக்கின்றன. ஹூண்டாய் பிராண்டில் பி மற்றும் சி செக்மென்ட் எலெக்ட்ரிக் கார்களை உருவாக்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

வரும் 2025ம் ஆண்டிற்குள் ஹூண்டாய், கியா மற்றும் ஜெனிசிஸ் சொகுசு கார் பிராண்டுகளில் 38 சதவீதம் அளவுக்கு மின்சார கார்களை விற்பனை செய்யவும் ஹூண்டாய் குழுமம் திட்டமிட்டுள்ளது. அடுத்த சில ஆண்டுகளில் தன்னிடம் உள்ள அனைத்து மின்சார கார் மாடல்களையும் இந்திய சந்தையில் அறிமுகம் செய்யும் முனைப்புடன் இருப்பதாக ஹூண்டாய் தெரிவித்துள்ளது.

தற்போது ஹூண்டாய் நிறுவனத்திடம் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி, ஐயோனிக் செடான் கார்களும், கியா பிராண்டில் சோல் மற்றும் இ- நிரோ எலெக்ட்ரிக் கார்களும் கைவசம் உள்ளன. இவை அனைத்துமே அடுத்த சில ஆண்டுகளில் இந்தியாவில் வந்துவிடும் வாய்ப்புகள் அருகி உள்ளன.

இந்த ஆண்டு இறுதியில் முதலாவதாக ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் எஸ்யூவி கார் இந்தியாவில் அறிமுகம் செய்யப்பட இருக்கிறது. இந்த எஸ்யூவியானது ரூ.20 லட்சம் முதல் ரூ.25 லட்சத்திற்கு இடையிலான எக்ஸ்ஷோரூம் விலையில் எதிர்பார்க்கப்படுகிறது.

இந்த எஸ்யூவியில் இருக்கும் 39.2 kWh திறன் கொண்ட பேட்டரியானது 134 பிஎச்பி பவரையும், 394 என்எம் டார்க் திறனையும் வெளிப்படுத்தும். ஒருமுறை சார்ஜ் செய்தால் 300 கிமீ தூரம் வரை பயணிக்கும். அதிக திறன் மிக்க மற்றொரு மாடலில் 64 kWh திறன் கொண்ட பேட்டரி உள்ளது. இந்த பேட்டரியை முழுமையாக சார்ஜ் செய்தால் 415 கிமீ தூரம் வரை செல்ல முடியும்.
Source:Auto Express


Click it and Unblock the Notifications








