ரூ.10 லட்சத்தில் எலெக்ட்ரிக் கார்... சென்னை ஆலையில் ரூ.2,000 கோடியை முதலீடு செய்யும் ஹூண்டாய்!
வாகனப் புகையால் சுற்றுச்சூழலுக்கு பெரும் தீங்கு ஏற்பட்டு வருவதையடுத்து, மாசு விதிகள் கடுமையாக்கப்பட்டு வருகின்ரன. இதனால், எலெக்ட்ரிக் கார்களுக்கான சந்தை சூடுபிடிக்கத் துவங்கியிருக்கிறது. இந்த சந்தையில் முன்கூட்டியே வர்த்தகத்தை துவங்கிவிடுவதற்கான முயற்சிகளில் கார் நிறுவனங்கள் தீவிரம் காட்டி வருகின்றன. அந்த வகையில், ஹூண்டாய் கார் நிறுவனம் கோனா என்ற எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை அண்மையில் அறிமுகம் செய்தது.

புதிய ஹூண்டாய் கோனா எலெக்ட்ரிக் கார் ரூ.25.30 லட்சம் எக்ஸ்ஷோரூம் விலையில் வந்தது. பட்ஜெட் கார் வாடிக்கையாளர்கள் பெரும் பங்கு வகிக்கும் நம் நாட்டில் இந்த விலை சற்று அதிகமாக பார்க்கப்படுகிறது. இருப்பினும், வாடிக்கையாளர்களின் எதிர்பார்க்கும் விலையில் பட்ஜெட் எலெக்ட்ரிக் கார்களை அறிமுகம் செய்வதற்கு ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.

அதன்படி, சென்னையிலுள்ள ஆலையில் எலெக்ட்ரிக் கார் உற்பத்திக்காக ரூ.2,000 கோடியை முதலீடு செய்வதற்கு அந்நிறுவனம் திட்டமிட்டுள்ளது. இந்த கார் மாடலானது மினி எஸ்யூவி ரகத்தில் வடிவமைக்கப்பட இருப்பதும் தெரிய வந்துள்ளது.

அதாவது, ரூ.10 லட்சத்திற்குள் இந்த புதிய மினி எலெக்ட்ரிக் எஸ்யூவி காரை களமிறக்குவதற்கு ஹூண்டாய் மோட்டார்ஸ் திட்டமிட்டுள்ளது. சென்னையில் உற்பத்தி செய்யப்பட இருக்கும் இந்த புதிய மினி எஸ்யூவி கார் உள்நாட்டில் மட்டுமின்றி, ஆசியா, மத்திய கிழக்கு நாடுகள், லத்தீன் அமெரிக்கா மற்றும் ஆப்பிரிக்க நாடுகளுக்கும் ஏற்றுமதி செய்யப்பட இருக்கிறது.

இந்தியாவில் எலெக்ட்ரிக் கார்கள் குறித்து வாடிக்கையாளர்களிடம் இருக்கும் எதிர்பார்ப்புகள் குறித்து நடத்திய ஆய்வின்படி, ஒருமுறை சார்ஜ் செய்தால் குறைந்தது 200 கிமீ தூரம் பயணிக்கும் வகையில் எலெக்ட்ரிக் கார் இருக்க வேண்டும் என்று தெரிய வந்துள்ளது. இதன் அடிப்படையில்தான் புதிய மினி எஸ்யூவியை ஹூண்டாய் உருவாக்க இருக்கிறது.

இந்த புதிய மினி எஸ்யூவி கார் முழுக்க முழுக்க இந்தியாவுக்கு ஏற்ற அம்சங்களுடன் உருவாக்கப்பட இருக்கிறது. இந்திய சப்ளையர்களிடம் இருந்து பேட்டரி உள்ளிட்ட முக்கிய பாகங்களை பெறுவதற்கும் திட்டமிட்டுள்ளது. குஜராத்தில் சுஸுகி - டொயோட்டா நிறுவனம் அமைக்கும் பேட்டரி ஆலையிலிருந்து சப்ளை பெறுவதற்கான வாய்ப்புகள் குறித்து ஹூண்டாய் பரிசீலித்து வருகிறது.

இந்த காருக்கான பேட்டரியை வெகு விரைவாக சார்ஜ் செய்வதற்கான சார்ஜர்களை உருவாக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது. அதுபோன்றே, சார்ஜ் ஏற்றும் நிலையங்களின் கட்டமைப்பையும் அதிக அளவில் திறப்பதற்கான முயற்சியையும் ஹூண்டாய் மேற்கொண்டுள்ளது.

அண்மையில் தாக்கல் செய்யப்பட்ட பொது பட்ஜெட்டில் எலெக்ட்ரிக் கார்களுக்கான ஜிஎஸ்டி வரி 12 சதவீதத்திலிருந்து 5 சதவீதமாக குறைக்கப்பட்டது. தவிரவும், எலெக்ட்ரிக் வாகனங்களுக்கான கடன் மீதான வட்டியில் ரூ.1.5 லட்சம் வரை கழிவு செய்து கொள்ளவும் அறிவிப்பு வெளியிடப்பட்டது.

இதனால், எலெக்ட்ரிக் கார்களின் விற்பனை அதிகரிக்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதனை மனதில் வைத்தே, ஹூண்டாய் அதிக அளவிலான முதலீட்டு திட்டத்துடன் திடமாக களமிறங்க உள்ளது. இதைத்தொடர்ந்து, பல புதிய எலெக்ட்ரிக் கார் மாடல்களை இந்தியாவில் உருவாக்கவும் ஹூண்டாய் திட்டமிட்டுள்ளது.
Source: TOI


Click it and Unblock the Notifications








